Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 43

"ச்சே.... ச்சே! உன்னைய எதுக்குடீ தங்கம் நா இங்கணக்குள்ள உட்டுட்டுப் போறேன்? வரலையின்னு சொன்னீன்னா ஒன்னைய இடுப்புல தூக்கி வச்சுட்டு நீ நடக்க வேண்டிய எடத்தையும் சேத்து நானே நடப்பேன். ஏதோ சும்மானாச்சுக்கு சொல்றேன்னு நெனைக்காத வர்த்தினி; நிச்சயமா இந்த கேம விளையாடி முடிச்சுட்டு தான் இந்த ரிஸார்ட்ட விட்டு கெளம்புவேன்!" என்று சொன்னான் ஜெயன்.

"ஏன்டா இப்டி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அடம்பிடிச்சு என் உயிர வாங்குற?" என்று கேட்டவளிடம்,

"எது சின்ன விஷயம்? ஒங்கூட சேந்து வெளாண்டு ஒரு போட்டியில ஜெயிச்சா அது எனக்கு எவ்ள பெரிய விஷயம் தெரியுமா? கூமுட்ட..... ஒனக்குத்தான்டீ இதோட சீரியஸ்னெஸ் புரிய மாட்டேங்குது!" என்று அவளை கோபமாக திட்டினான்.

"டீம் நம்பர் எய்ட்! இப்போ உங்களோட டர்ன்! ரொம்ப நேரமா டிஸ்கஷன்லயே இருக்கீங்க? கேம்ல நீங்க இருக்கீங்களா இல்லையா?" என்று அவர்களிடம் கேட்டு அவர்களுடைய வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களா இல்லை விளையாட்டை விளையாடாமல் மற்ற இரண்டு அணியினருக்கு ஜெயிக்கும் வாய்ப்பை வழங்கப் போகிறார்களா என்று நினைத்து அவர்களிடம் பேசினாள்
அச்சுதனின் தங்கை.

"வீ ஆர் இன்! இதோ வந்துட்டோம் அனுபமா!" என்று சொன்ன வதனி ஜெயனை தன்னுடைய பக்கமாக இழுத்து,

"கால தரையில தேய்ச்சுட்டே நட! ஏதாவது தட்டுப்பட்டா மெதுவா கால தூக்கி வச்சு நட..... இது தான் ப்ளான்; புரியுதா?" என்று சொன்னவளிடம் தன்னுடைய பற்கள் அனைத்தையும் காட்டியவன்,

"அப்ப கப்பு நமக்குத்தான ஏஎம் அம்மா?" என்று கேட்க அவள் எதுவும் சொல்லாமல் அவனிடம் விளையாட்டை கைகாட்டி விட்டு சென்றாள்.

ஒரு நிமிடம் நாற்பத்தைந்து நொடிகளில், ஒரு நிமிடம் பத்து நொடிகளில் விளையாடியிருந்த மற்ற இரண்டு அணியினரை விட குறைந்த நேரத்தில் 58 வினாடிகளில் ஜெயனும் வதனியும் தங்களுடைய இலக்கை துல்லியமாக கடந்து இந்த விளையாட்டில் முதல் இடத்தில் வந்திருந்தனர்.

"ஸாரி வர்த்தினி..... ஒன்னைய சொல்லிட்டு நாந்தான் ஒருதடவ முட்டைய உருட்டி ஒடச்சுப்புட்டேன். ஆனாலும் நாம ஜெயிச்சுட்டோம் பாத்தியா?" என்று கேட்டவனிடம் அமைதியாக புன்னகைத்தவள்,

"சீரியஸா விளையாடச் சொன்ன; விளையாண்டு ஜெயிச்சாச்சு! அவ்ளோதான்.....!" என்று சொல்லி விட்டு கைகுலுக்கி வாழ்த்திய அனைவரிடமும் நன்றி கூறி புன்னகை முகத்துடனே சென்று முகிலமுதத்தின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

"நெசமாலே வெளையாடயில கண்ணு தெரியலையா வதனிம்மா? பெறவு எப்டி அவ்ள சுளுவா எம்பத்தெட்டுல ரெண்டு பேரும் நடந்து போனீங்க?" என்று சற்று சந்தேகமாக கேட்டவரிடம்,

"இதுல ஜெயிக்கணும்னு ஜெயன் ஆசப்பட்டான் முகில்ம்மா; அதான் கொஞ்சம் கவனமா இருந்து ஜெயிச்சுட்டோம்!" என்று சொன்னாள்.

"ஜெயனோட இந்த சின்ன ஆசயெல்லாம் நிறைவேத்தித் தாரியே தங்கம்? அப்டியே அந்தப்பயலோட பெரிய ஆசயப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாமுல்லய்யா?" என்று கேட்டவர் வதனியின் மவுனத்தில் பெருமூச்சு விட்டார்.

இந்தப்பிள்ளையை இப்டி ஏதாவது பேசி அடிக்கடி தொந்தரவு செய்கிறோம் என்று மட்டும் தெரிகிறது; ஆனால் தன்னை மீறி சில நேரங்களில் தன்னுடைய ஆதங்கம் புலம்பலாக, இந்த மாதிரியான கேள்வியாக வெளிப்பட்டு விடுகிறதே என்ன செய்வது என்று நினைத்த முகிலமுதம் அதற்கு மேல் வதனியிடம் எதைப்பற்றியும் வாயே திறக்கவில்லை.

அன்றைய தினத்தின் வெற்றிக்கோப்பையை ஜெயன் மற்றும் வதனியிடம் தருவதில் அச்சுதனின் மொத்த குடும்பத்தினருமே மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தனர்.

கிளம்பும் நேரம் வரை ஜெயனுடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அச்சுதனுடைய சித்தப்பா அவனை தனியாக அழைத்துச் சென்று ஏதோ பேசியதில் இருந்து காணாமல் போயிருந்தது.

அனைவரிடமும் விடைபெற்று, அச்சுதனுடைய ப்ரத்யேக நன்றியையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியவன்,
வீடு வரும் வரை முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்தான். முகிலிடமும் இரண்டு முறை எதற்கென்றே தெரியாமல் எரிந்து விழுந்தான்.

"மதிய சாப்பாட்ட ஒழுங்கா தின்னியா இல்லையாலே நீயி? எங்க..... சோத்த பாத்து தின்னாவுல்ல ஒழுங்கா பசியறிஞ்சு திங்க முடியும்?
மொகத்த பாத்துக்கிட்டே தின்னா.....? இப்ப பசிக்குதுன்னுட்டு தான் இப்டி வீறு வீறுன்னு கத்துறான் போலிருக்கு எடுபட்ட பய!" என்று திட்டியவரை முறைத்தவன்,

"இப்ப எனக்குப் பசிக்குதுன்னவொடனே நான் கத்துறேன்னு சொல்ற? நான் என்ன சோத்துக்கு செத்தவனா அமுதாம்மா? நாளைக்கு காலையில வரைக்கும் தண்ணி கூட குடிக்காம கெடக்குறேன் பாக்குறியா?" என்று தன்னுடைய தாயிடம் கேட்டான்.

"வேறென்ன கோபம் ஒனக்கு? என்னதான் பிரச்சன? நல்லாத்தான
சிரிச்சுட்டு நின்னுட்டு இருந்த? திடீர்னு என்ன ஆச்சு?
எங்க ரெண்டு பேரையும் வண்டிக்குள்ள வச்சுருக்க? கொஞ்சம் நிதானமா ட்ரைவ் பண்ணு!" என்று பின்புறமிருந்து புறப்பட்டு வந்த அழுத்தமான குரலுக்கு தான் சற்றே பணிந்து வேகத்தை சற்று மட்டுப்படுத்தினான்.

வதனியுடைய சொல்லுக்கு கொஞ்சம் அடங்கினானே ஒழிய
இரவு உணவு நேரம் வரை முகிலமுதத்தை கடித்துக் குதறிய படியே தான் இருந்தான் அவரது அருமைப் புதல்வன் ஜனமேஜயன்.

"நைட்டு சாப்பாட்டுக்கு என்னது அமுதாம்மா?" என்று கேட்டவனிடம்,

"தோசையும் சாம்பாரும்.....!" என்று பதில் தந்தார் முகில்.

"இல்ல.... எனக்கு சாம்பாரு வேணாம்! காரச்சட்னி தான் வேணும். இப்பவே செஞ்சு குடு!" என்று கேட்டவனிடம்,

"இதத் தின்னா தின்னு.... இல்லையின்னா நீ சொன்னமாரி பட்டினியா கெட நாயே..... ஒன்னைய எவன் இங்க வெத்தல பாக்கு வச்சு சோறுங்க கூப்ட்டது? போ போ!" என்று சொன்ன முகிலமுதம் வதனியிடம் திரும்பி,

"சாப்ட்டுட்டு எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு போய் படு தங்கம்! அங்க வரைக்கும் போயிட்டு வந்தது கொஞ்சம் அசந்து வருது; நாம்போயி படுக்குறேன்!" என்று அவளிடம் சொல்லி விட்டு சென்றார்.

"எ.....தே? குட்நைட் முகில்ம்மாவா? அப்ப எனக்கு எங்க தோசையும், கார சட்னியும்?" என்று கட்டிலில் படுத்திருந்த படி கேட்டவனை வதனியும் முகிலமுதமும் கண்டுகொள்ளவேயில்லை.

"இந்த வீட்ல ஒனக்கெல்லாம் அவ்ளோதான்டா ஜெயனு மரியாத....! சாப்பாடு சாப்பாடுன்னு கத்தி இருக்குற கொஞ்ச நஞ்ச மானமும் போவப்போகுது....... ஒரு சொம்பு தண்ணிய குடிச்சுட்டுப் போய் படு போ!" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் தண்ணீர் அருந்த கிச்சனுக்குள் நுழைந்தான்.

அடுப்பை துடைத்துக் கொண்டிருந்தவள் அவனிடம், "அங்க வரைக்கும் போயிட்டு வந்தது எல்லாருக்கும் டையர்டா இருக்கு! உனக்கே கோபம் கோபமா வருதுல்ல......? அப்போ லேடீஸ் நாங்களும் பாவம் தான் இல்லையா? கார சட்னி, அந்த சட்னின்னுட்டு ஏன் டிமாண்ட் பண்ற? இப்ப தோச சாப்புடுவியா மாட்டியா?" என்று கேட்டவளின் தாடையைப் பற்றி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,

"அதென்ன எப்ப பாத்தாலும் நாங்க பாவம், நாங்க பாவம்ங்குற நீயி? நான் பாவம்னு எப்பவாச்சு ஒருதடவ நெனச்சுப் பாக்குறியா?" என்று வதனியிடம் சற்றே பாவமான குரலில் கேட்டான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro