Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 11

"சரி விடுறா மச்சி.... அந்தப்புள்ள எவ்வளவு ஆசையோட இங்க கெளம்பி வந்துச்சோ? ரெண்டு இழப்புக்கு அவ இன்னும் தற்கொலை பண்ணிக்கணும்னு நெனக்காம இருக்குறதே பெரிய விஷயந்தான்!" என்று இலகுவான குரலில் சொன்ன தன்னுடைய நண்பனிடம், "டேய்.... வாயில அடி! என்ன பேசுற?" என்று பதறிய படி சொல்லி விட்டு ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்.

"பார்றா..... மேரி ஜான்..... நீ இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால நினைச்சுக் கூட பாக்க முடியாதுன்னு டயலாக் பேசி உங்க மனசு அடிச்சுக்குதாக்கும்.....? அந்தப் பொண்ணு வந்த கொஞ்ச நாள்ல அவ கதை எல்லாமே ஒனக்குத் தெரியும் போலருக்கு? எப்டிடா இதெல்லாம்? அவ பேசும் போது மறைஞ்சிருந்து ஒட்டு கேப்பியா?" என்று கேட்டவனை முறைத்தவன்,

"அப்டி ஒட்டுக் கேக்குறதுக்கு எல்லாம் அவசியமே வரல! அவளே அமுதாம்மாட்ட ஒண்ணு விடாம எல்லாத்தையும் சொல்லுவா! அவங்க எங்கிட்ட அத அப்டியே சொல்லுவாங்க!" என்றான்.

"சரிடா.....! அவளப் பத்தி நீ தெரிஞ்சுக்கிட்டதெல்லாம் சரி தான்..... ஆனா அவ கல்யாணம் பண்ணிக்கிட நெனச்ச பையன்
அந்தப்புள்ள மனசுக்குள்ள ஆழமா நிப்பானே? அத எப்டி மறக்கடிப்ப? நீ எப்டி அவளுக்கு புருஷனாவ?" என்று தன்னுடைய நண்பனிடம் சந்தேகம் கேட்டான் நஸார்.

"நஸாரு.... நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்ச இத்தன வருஷத்துல ஒரு அஞ்சாறு பொண்ணுங்கள அவங்க வீட்டுக்குப் போயி பொண்ணு பாத்துருக்கேன்! பதினைஞ்சு இருபதுக்கு மேல பொண்ணுங்கள போட்டோவுல பாத்துருக்கேன்...... ஆனா ஒரு எலப்பச்ச கலர் ட்ரெஸ்ல கருப்பு ஸ்கார்ப் போட்டுட்டு, எனக்கு இப்ப என்ன பண்றதுன்னு கூட தெரியல ஸார்னு சொல்லி கண்ணீர் உட்டாளே ஒருத்தி..... அவ ஒருத்தியோட முகம் தான்டா உள்ள வரைக்கும் பாய்ஞ்சு போயி, ஒரு ஆட்டு ஆட்டிப் பாத்துடுச்சு!"

"அமுதாம்மா கூட எங்கிட்ட நெறய கேள்வி கேட்டுச்சு.... அந்தப்புள்ள பெரிய ஆபிஸரா இருக்குய்யா; உனக்கும், அதுக்கும் எப்டி ஒத்துவரும்? அது கொஞ்சம் வசதியில பெரிய எடமா எதிர்பாத்தா நாம எங்க போறது? உனக்கு பாத்தவுடனே அவளப் பிடிச்சுப் போச்சுன்னு சொல்ற; அவளுக்கும் உன்னைய பிடிச்சா தானய்யா அடுத்து ஏதாவது செய்ய முடியும்? அவ தான் உன் தலைய கண்டவொடனே கிளம்புறேம்மான்னு சொல்லிட்டு மேல ஓடிடுறாளே? அதுக்கு என்ன செய்றதுன்னு கேட்டுச்சு!"

"அம்மா நெனக்குற மாதிரி அவ என்னைய விட வசதியுள்ளவனா, நல்லவனா, அவள நல்லா பார்த்துக்குற மாதிரி ஒருத்தன கல்யாணம் செஞ்சிக்கிட்டாலும் எனக்கு சந்தோஷம் தான்! நம்ம மொத மொத நெனச்ச பொண்ணு நல்ல தொணையோட சந்தோஷமா வாழ்ந்து புள்ள குட்டின்னு பெத்து
நல்லாயிருக்கட்டும்னு வாழ்த்திட்டு எம்பாட்டுல போயிட்டே இருப்பேன்!"

"அதெல்லாம் முடியாது..... இப்ப இருக்குற மாதிரி, தலையோட சேத்து கண்ணையும், காதையும், மனசையும் இறுக்க கட்டிக்கிட்டு நான் பொம்பள சாமியாரா தான் மாறப் போறேன்னு அவ முடிவெடுத்தான்னா..... ம்ஹூம்;
அப்டியெல்லாம் இருக்க ஒன்னைய நான் உட்டுட மாட்டேன்டீ அழகின்னு அவ மனசுக்குள்ள புகுந்து குட்டைய கொழப்பி நான் அவள கல்யாணம் பண்ணிக்கிடுவேன்!"

"நான் வேணுமா, என்னைய விட அழகான நல்லவன் வேணுமாங்குற முடிவு மட்டுந்தான் அவ கையில இருக்கு! தனியாவே இருக்கப்போறேங்குற மூணாவது முடிவுக்கு எல்லாம் அவ போவவே கூடாது; அதுக்கு நான் விட மாட்டேன்!" என்று சொன்ன தன்னுடைய நண்பனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான் நஸார்.

"எலேய்.... அம்மாட்டயும் உன் விஷயம் பூராத்தையும் தில்லா சொல்லிட்டியா?" என்று கேட்டவனிடம்,

"சொல்லாம.....? இதெல்லாம் ஒரு சந்தேகமுன்னு கேக்குறாம்பாரு!
ஒரு பொம்பளப்புள்ளைய வீட்டு மாடியில கூட்டியாந்து தங்க வைக்கணும்னு திடுதிப்புன்னு
சொன்னமுன்னா, வீட்ல
அதுக்கெல்லாம் காரணம் கேக்க மாட்டாங்களா? அமுதாம்மாட்ட மொத நாளே எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டேன்!" என்று சொன்ன நண்பனைப் பார்த்து மறுபடியும் வாயைப் பிளந்தான் நஸார்.

இப்படி இருவருமாக காரில் வரும் போது, பெரும்பாலான நேரங்களில் அவன் பேசிக் கொண்டிருக்க ஜெயன் தான் தலையை ஆட்டிக் கொண்டு இருப்பான். இன்று தான் முதன்முறையாக இவ்வளவு தன்னிடம் பேசியிருக்கிறான்..... அதுவும் அந்தப் பெண்ணின் விஷயத்தில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவான முடிவுடன் வேறு இருக்கிறான்!

"லேய்.... என்னடா! ஏதாவது சொல்லு! ஆன்னு என் மூஞ்சிய பாத்துக்கிட்டு இருக்க.... நான் பேசுனதெல்லாம் சரிதான?" என்று கேட்டவனிடம்,

"நாங்கூட என் லவ்வுல இவ்ள தெளிவா இல்லடா ஜெயனு; எனக்கு அவ தான்னு சின்னதுலயே
பேசி வச்சுட்டதாலயோ என்னவோ? சரி விடு. உன் விஷயத்துல
என்ன வேணும்னாலும் வரட்டும்டா! நம்ம பாத்துக்கலாம்! அவங்கள எப்டியாவது ஓகே சொல்ல வைக்கலாம்!" என்று தன் நண்பனிடம் உறுதியுடன் சொன்னான்.

"இந்த விஷயத்துல என்னைய விட நீதான் ரொம்ப சந்தோஷமா இருக்குற போலிருக்கு. நான் ஒருத்தனா யோசிக்குறத விட நாம ரெண்டு பேருமா இப்டி பேசுனா நல்லாத்தான் இருக்கு! சரி, உங்கிட்ட ஒரு கேள்வி கேக்கணுமே....? மரியம் புள்ளைய நீ எதுக்கு பட்டனுன்னு கூப்ட?" என்று கேட்டவனிடம் சற்றே அதிர்ந்து போய்,

"டேய் எம்பொண்டாட்டிய நான் கூப்டது, வச்சதெல்லாம் நீ எதுக்கு காதுல கேட்ட? அப்டியே காதுல வாங்குனாலும் இத்தன நாளா காது கேக்காத மாதிரியே தான போவ? இப்ப ஸாரு லவ் பண்றதால புதுசா
ஏன் அப்டி கூப்டன்னு எங்கிட்ட சந்தேகம் வேற கேக்குறீங்களாக்கும்?"

"எங்களுக்குள்ள நடக்குற பேச்செல்லாம் நான் உங்கிட்ட சொல்றதுக்கு தான் ரெடியா ஒக்காந்துருக்கேன் பாரு! அன்பா சொல்றப்பவே சரின்னு கேட்டுக்க; இப்டியெல்லாம் புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்குற விசயத்துக்குள்ள மூக்க நொழைக்க கூடாது தெரியுதா? ஒவீட்டுக்குப் பக்கத்துல வந்துட்டோம் எறங்கிக்க!" என்று சொன்னவனிடம்,

"சரிடா மாப்ள! பாக்கலாம்!" என்று சொன்ன ஜெயன் காரிலிருந்து இறங்கிக் கொண்டு அவனுக்கு கையசைத்து விட்டு சென்றான்.

நஸாருடன் கதை பேசிக் கொண்டே வந்ததில் ஏழரை மணியாகி விட்டது. தனது வீட்டின் திருப்பத்தில் நடந்து கொண்டிருந்தவன், திடீரென அவளை நினைத்தான். இப்போதெல்லாம் இப்படித்தான்.... ஒரு நாளைக்கு குறைந்தது இருபது முறை தன் நினைவைக் கொடுத்து அவன் வயிற்றுக்குள் கூச்சம் ஊட்டுகிறாள் மலைமாது!

சவாரி எதுவும் இல்லாத நாட்களில் அதிகபட்சம் ஆறு மணிக்குள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பான் ஜெயன். அப்போது தான் தன்னுடைய அன்னையிடம் சற்று வம்பளந்து விட்டு மாலை நேர கொறிப்புகள் எதையாவது சாப்பிட்டு, இரவு பத்து பத்தரை மணிக்கு படுக்கையில் விழுவதற்கு சரியாக இருக்கும்!

இன்று வழக்கத்தை விட சிறிது அதிக நேரம் அமுதாம்மாவிடம் பேசியிருப்பாள்.... ஆனால் முதலையின் வரவை எதிர்நோக்கியபடி ஜாக்கிரதையாக ஆற்றில் தண்ணீர் குடிக்கும் மான்குட்டி போல் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை வாசலை நோக்கி பார்த்தபடியே தான் பேசியிருப்பாள் என்று நினைத்த ஜெயனுக்கு அவளது மருண்ட முகம் நினைவிற்கு வந்து சிரித்துக் கொண்டான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro