Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

22

சக மனிதனின் கஷ்டங்களை நாம் கேட்கும் போதுதான் நம்மை சூழ்ந்திருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தூசிக்கு சமமானவை என்பது புரியும். சிலருக்கு குழந்தை இல்லாமல் இருக்கும். குழந்தை வரம் என்பது கடவுளால் மனிதனுக்கு கிடைக்கும் ஒரு அன்பளிப்பு. கடவுள் எல்லோருக்கும் எல்லாவகையான அன்பளிப்புக்களையும் கொடுக்க மாட்டார். குழந்தை பேறு இல்லாதவருக்கு குழந்தைகள் இல்லாமல் ஒரு வாழ்க்கை தேவையா என்று எண்ணத்தோன்றும். அதே நேரம் சிலருக்கு குழந்தை கிடைத்து இறந்திருக்கும். அவர்களுக்கு அந்த குழந்தை இறந்ததற்கு நமக்கு குழந்தை கிடைக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோனும். ஒரு சிலருக்கு பிள்ளைகளை குறித்த நேரத்தில் அவர்களால் பராமரிக்க கூடிய சூழல் இல்லாமல் இருக்கும். அவர்கள் குழந்தை பேறை இன்னும் கொஞ்ச நாள் தள்ளி போட்டிருக்கலாமோ என யோசிப்பார்கள். எல்லோருக்கும் பிடித்த குழந்தை என்ற விடயமே இவ்வளவு இருக்கும் போது மற்ற விடயங்களை பற்றி யோசித்தால் ஒவ்வொரு பிரச்சினைகளையும் மிஞ்ச ஆயிரம் பிரச்சினைகள் வெளியில் இருக்கும்.

"கவி என்ன சொல்ற, அப்போ நான்சியோட டெட் பாடி கிடைக்கலையா?" என்று ஆச்சரியமாக கேட்டாள். கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி கவி "இல்லக்கா கிடைக்கல" என்றாள். உடனே தன் மனதில் ஏதோ தோன்ற பிருந்தா "ஒரு வேல நான்சி சாகாம இருந்தா?" என்று கூற விரக்தியில் புன்னகைத்த கவி பிருந்தாவை ஏறிட்டவள் "என்னக்கா எங்க அண்ணன போல பேசுறீங்க. அந்த குண்டுவெடிப்புல பல பேரோட பாடி கிடைக்கல. சிலர் அந்த சர்ச்சுக்கு போனாங்கண்ணத வெச்சுதான் அவங்க உயிரோட இல்லைன்னு கவர்மண்டே டெத் சர்டிபிகேட் கொடுத்தது. இப்போதான் அண்ணன் நான்சி செத்துட்டான்னு உணர ஆரம்பிச்சிருக்கான். என்கிட்ட கேட்ட மாதிரி அவன்கிட்ட சொல்லிடாதீங்க. அப்புறம் வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்" என்றாள்.

கவியும் பிருந்தாவும் அன்றைய தினம் நன்றாக  ஊர் சுற்றிவிட்டு மாலை ஆகும் போது பிருந்தா இருக்கும் ஹோட்டலை அடைந்தனர். காலையில் நான்சியை பற்றிய பேச்சு வந்ததில் இருந்து அவர்களின் அன்றைய மன நிலை கவலையாவதை உணர்ந்த இருவரும் அதன் பின் நான்சி பற்றி பேசவே இல்லை. பொதுவான விடயங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தனர். பொதுவான விடயங்கள் பேசும் போது கவிதான் அதிகமாக பேசினாள். பிருந்தா கேட்டுக்கொண்டே இருந்தாள்.

பிருந்தாவின் அறையில் அவளின் ஐபேட்டை கையில் எடுத்த கவி "அக்கா நான் உங்க ஐபேட்ட பார்க்கலாமா" என்று கேட்க அவளும் அதை அன்லாக் செய்து கொடுத்தவள்  "வேண்டியவரைக்கும் பார்த்துக்க. ஒரு ப்ராப்ளமும் இல்லை" என்றாள்.

"எனக்கு ஆப்பிள் ப்ராடக்ட்ஸ்னா ரொம்ப பிடிக்கும். ஹிருனிகிட்ட ஒரு ஐபோன் இருக்கு. அத வெச்சிக்கிட்டு ரொம்ப பந்தா பண்ணுவா. கொஞ்சம் காட்டுடீன்னு சொன்னா கூட தரமாட்டா. நானும் படிச்சி முடிச்சு  வேலைக்கு போனதும் முதல் வேலையா ஐபோனும் எயார்போட்டும் தான் வாங்கனும்" என்று சிறு பிள்ளை போல பேசும் கவியை பார்த்து

"நான் இந்தியா போகும் போது உனக்கு என்னோட ஐபேட்டகொடுத்துட்டு போறேன். நீயே வெச்சிக்க சரியா" என்று கூறி புன்னகைத்த கவி "ஐய்யய்யோ எதுக்கு ஒரு ஐபேட் காக என் உயிர பணயம் வைக்க முடியாது. எங்கண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சது அவ்வளவுதான். என்ன கொன்னே போட்டுடுவான்" என்றாள்.

"என்ன கவி அண்ணன்னா ரொம்ப பயமா?" என்று கேட்டவளை பார்த்து சிரித்த கவி "இல்லைக்கா  பயம்லாம் இல்ல. ரொம்ப மரியாதை வெச்சிருக்கேன். அப்பா இறந்தப்போ அவன் பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்தான். அதுக்கு அப்புறமா அவன் யுனிவர்சிட்டி போனதுல இருந்து இன்னை வரைக்கும் எனக்காகவும் அம்மாக்காகவும்தான் எல்லாமே பண்றான். அவனுக்குன்னு எதுவுமே அவன்கிட்ட இல்ல. அவன் வெச்சிருக்குற பைக்கூட எங்க மாமாவோடது. அவருகிட்ட கார் இருக்கிறதால அவன் இத யூஸ் பண்றான். எங்கண்ணன்கிட்ட நான் எதுகேட்டாலும் இல்லைன்னு சொல்லாம வாங்கி  கொடுத்திடும். அப்படி இருக்கும் போது எனக்கு மொபைல் வேணும்னு கேட்டா கண்டிப்பா அவன் ஐபோன் தான் வாங்கி கொடுப்பான். ஏன்னா எனக்கு அந்த ப்ராண்ட் ரொம்ப பிடிக்கும்னு தெரியும். அவன் அடிக்கடி கேட்பான் மொபைல் வாங்கி தரட்டுமான்னு, நாந்தான் இப்போதைக்கு வேணாம்னு சொல்லிருக்கேன். என்னால எங்கண்ணன இன்னும் கஷ்டப்படுத்த விரும்பலக்கா" என்று கூறினாள்.

இந்த சிறு வயதில் இந்த பெண்ணிடம் இவ்வளவு பக்குவம் இருக்கும் என்று பிருந்தா துளிகூட நினைக்கவில்லை. "சரி கவி உங்க ஊருல லேட்டஸ்ட் ஐபோன் எவ்வளவு வரும்" என்று கேட்க கவி "புதுசுன்னா ஒரு இரண்டு லட்சம்  வரும், ஆனா அதுவே பாரின்ல யூஸ் பண்ணதுன்னா ஒரு லட்சத்துல இருந்து வாங்க முடியும்"என்றாள். "சரி நான் குளிச்சிட்டு வரேன். அது வரைக்கும் நீ என்ன வேணுமோ பண்ணிக்க" என்று கவியின் கைகளில் ஐபேட்டை திணித்து  குளிக்க சென்றாள்.

குளியலறையில் தான் இந்தியாவில் இருந்து வந்தது முதல் இன்று வரை நடந்த எல்லாவற்றையும் பிருந்தா அசை போட்டபடி இருந்தாள். விக்ரமை சந்தித்ததும் அவன் மீது கொண்ட கோபம் அதன் பின் அவனுடைய துள்ளல் பேச்சை ரசித்தமை, பூவரசன் குலம் போகும் வழியில் அவன் பேசிய குறும்பு பேச்சுக்கள் பின் தான் யார் என்பது தெரிந்தபின் அவனுடைய விலகல் இது எல்லாமே பிருந்தாவுக்கு என்ன என்று கூற முடியாத ஒரு வித உணர்ச்சியை கொடுத்தது. அப்போதுதான் அவளுக்கு ஒன்று புரிந்தது, பூவரசன் குளத்துக்கு  போய் வரும் வழியில்தான் தான் யார் என்பது அவனுக்கு தெரியும். அதன் பின்னர்தான் விக்ரம் தன்னை விட்டு விலகி இருக்க நினைக்கின்றான் என்று.ஆனால் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் தான் செய்த தவறுக்காக அவன் தன்னை விலகி நடக்கவில்லை என்பது அவளுக்கு புரிந்தது. தனது  கடந்த காலம் தெரிந்து விலகி நடப்பவனாக இருந்தால் அவனுடைய தங்கையை என்னுடன் பழக விட்டிருக்கமாட்டான் என்பதும் விக்ரமின் தந்தை அவர்களை எப்படி வளர்த்தார் என்பதும் தெரிந்தவள் எதனால் தன்னை விலகி நடக்க எண்ணுகின்றான் என யோசித்தவளுக்கு ஹாஸ்பிடலுக்கு போனதில்  இருந்து விக்ரமின் பார்வை தன்னை எப்படி மேய்ந்தது என்பது நினைவுக்கு வர

'ஒரு வேலை விக்ரம் என்னை காதலிக்கின்றானா?அவன் மனதில் இருக்கும் நான்சியின் இடத்தை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது என்பதற்காக என்னை தவிர்க்கின்றானா? அப்படி என்றால் நான்சியின் இடத்தை நான் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டேனா' என்று தனக்கு தானே கேள்விகேட்டுகொண்டாள்.

இருந்தாலும் பிருந்தாவாள்  சரியான ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை. பிருந்தா குடும்ப சூழ்நிலை காரணமாக சரியாக படிக்காமல் விட்டிருந்தாலும் அவள் தன் மனதால் போடும் கணக்கு எப்போது சரியாக இருக்கும். தன் மனது சொல்கின்றதை எப்போதும் சரியென நம்புபவள் இதில் மட்டும் அது சரியென்று இருக்க கூடாது என நினைதாள். என்னதான் பிருந்தா தன் தாய்க்காக தனது உடலை விற்றிருந்தாலும் ஒரு விலைமகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கருதியதால்தான் அன்று வினீத் அவளிடம் அவனது காதலை சொன்ன போனது மறுத்துவிட்டாள். அதை மீண்டும் அசை போட்டு பார்த்தவள்,

வினீத் காதலை சொல்ல வந்த அன்று....

"பிருந்தா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" என்று கூற "சொல்லுங்க சார் என்ன விசயம்?" என்று கேட்க அவன் பிருந்தாவின் முகம் பார்க்க வெட்கி தலைகுனிந்தவனை அவள் வித்தியாசமாக பார்த்தாள்.

"எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, உங்கள கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்" என்று தட்டு தடுமாறி கூற பிருந்தாவுக்கு கோபம் தலைக்குமேல் ஏறியது. அவன் தன்னை காதலிக்கிறேன் என்று கூறியிருந்தால் கூட அவள் இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டாள். ஆனால அவன் நேரடியாகவே திருமணத்திற்கு சம்மதம் கேட்க அவளுக்கு கோபம் வந்தது. ஒரு வாரம் முன்னாடிதான் அவளுடைய தாயின் ஆபரேசனுக்காக தன் உடலை விற்றிருந்தாள். இப்படி இருக்க இவனும் இப்படி பேசியது அவளுக்கு ஆண்கள் மீதே வெறுப்பு வர வைத்தது. இருந்தாலும் அவள் வினீத் மீது வைத்திருந்த நல்லஎண்ணம்  காரணமாக அவனை பார்த்து புன்னகைத்தாள்.

"உங்களுக்கு என்ன பத்தி என்ன தெரியும் வினீத்" என்று கேட்க அவன் அவளை பார்த்து எதுவும் தெரியாது என்பது போல முழித்தான்.

" உங்க பார்வையே சொல்லுது உங்களுக்கு என்ன பத்தி எதுவுமே தெரியலன்னு. நான் காசுக்காக உடம்ப விக்க ஆரம்பிச்சி ரொம்ப நாளாச்சி. நீங்க மத்த சினிமா ஆளுங்க மாதிரி இல்லைன்னு தெரியும். இல்லைன்னா உங்க கிட்டயும் ஒரு ரேட்ட பேசி வந்திருப்பேன். இந்த காதல் கல்யாணம்லாம் எனக்கு பொருத்தமானது இல்லை. என்மேல உங்களுக்கு இன்னமும் ஆசை இருந்தா சொல்லுங்க ஒரு ஹோட்டல்ல ரூம போட்டு உங்க ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன். இல்லைன்னா என்ன மறந்துட்டு ஒரு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க" என்று கூற அவனின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

பிருந்தா அவனுடன் அப்படி பேச காரணம் தன்னை வினீத் போன்ற ஒரு நல்ல ஆண்மகன் வாழ்நாளிலும் இனிமேல் நினைக்க கூடாது என்பதற்காக, ஆனால் அவளின் பேச்சால் அவன் காணாமல்  போவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவன் காணாமல் போனது கூட அன்றைய அவார்ட் பங்க்சனில் ஷ்யாம் பேசும் போதுதான்  தெரிந்துகொண்டாள்.

பழைய நினைவில் இருந்து மீண்டவளை  குளியல் அறைக்கு வெளியில் இருந்த கவி அழைக்க நினைவுக்கு வந்தாள். "அக்கா உங்களுக்கு  லக்‌ஷ்மின்னு ஒருத்தங்க கால் பண்றாங்க" என்று கூற தனது மொபைலை வாங்கியவள் முகத்தில் சந்தோசத்துடன் பேச ஆரம்பித்தவள் மறுமுனையில் கூறிய செய்தியில் அவள் முகம் கலவரமானது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro