💚3💚
தங்களது பெற்றோரின் படத்தை வெறித்தபடி நின்றுக் கொண்டிருந்த அண்ணன் மனைவியிடம் திரும்பிய சுவாதி, "அண்ணி... அப்பா, அம்மாவிடம் விளக்கேற்றி ஆசிர்வாதம் வாங்கி கொள்ளுங்கள்!" என்றாள்.
அவளிடம் சலனமற்ற பார்வையை செலுத்தி விட்டு, அவள் சொன்னபடி செய்தாள் அவ்வீட்டு மருமகள்.
"இப்படி கொஞ்சம் உட்காருங்கள், நான் போய் பாலை சூடு செய்து எடுத்து வருகிறேன்!" என்று சுவாதி சமையலறை விரையவும், "குட்டிம்மா... என்ன செய்கிறாய் நீ?" என்றபடி அவளை பின் தொடர்ந்தான் ஷ்ரவண்.
"இல்லைண்ணா... நம் குரு மாமா கல்யாணத்தின் பொழுது அத்தை வீட்டில் புது மாப்பிள்ளை, பெண்ணிற்கு அத்தையும், அம்மாவும் இப்படி தான் முறை செய்தார்கள். நிறைய சரியாக தெரியவில்லை, அட்லீஸ்ட்... தெரிந்ததையாவது செய்யலாமே. ஏற்கனவே நான் கொஞ்சம் லூசுத்தனமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டதால் ஆரத்தி வேறு எடுக்காமல் இருவரும் வீட்டிற்குள் வந்து விட்டீர்கள்!" என்றாள் குறையாக.
"ஆமாம்... இங்கே எல்லாம் அப்படியே முறைப்படி நடந்து திருமணம் முடிந்திருக்கிறது. இதில் சம்பிரதாயங்கள் மட்டும் தான் குறை. அட... ஏன்மா நீ வேற..." என்று சலித்துக் கொண்டான் அவன்.
அண்ணனின் முகத்தை கவலையுடன் ஏறிட்டவள் பின்பு விழிகளை அடுப்பின் புறம் திருப்பி, "நீ எந்த எண்ணத்தில் அண்ணா அவர்களை திருமணம் செய்திருக்கிறாய்? சேர்ந்து வாழலாம் என்றா இல்லை... கொஞ்ச நாளில் பிரிந்து விடலாம் என்றா..." என்று மெல்லிய குரலில் கேள்வி எழுப்பினாள்.
திகைப்புடன் அவளை நோக்கியவன், "என்ன பாப்பா பேசுகிறாய் நீ? நான் அப்படிப்பட்டவனா... அல்லது நம் அப்பா, அம்மா தான் என்னை அப்படி வளர்த்தார்களா?" என்றான் லேசாக துளிர் விட்ட சினத்துடன்.
"சாரிண்ணா... உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும் தான். ஆனால் வீட்டிற்கு அழைத்து வந்ததில் இருந்து நீ அவர்களிடம் எதுவும் சாதாரணமாக கூட பேச முயற்சிக்கவில்லை, அதேபோல் சடங்கு, சம்பிரதாயத்திற்கு அலுத்துக் கொள்ளவும் அப்படி கேட்டு விட்டேன்!"
"ப்ச்... வேறு எப்படி பேசச் சொல்கிறாய்? பார்த்த முதல் சந்திப்பிலேயே கட்டாயம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று உத்திரவுப் போடுகிறாள். ஆனால் அவளைப் பற்றி ஒரு விவரத்தையும் என்னிடம் சொல்லவில்லை. அவ்வளவு ஏன் அவள் பெயர் கூட இன்னமும் எனக்கு தெரியாது!" என்றவனின் முகம் இயலாமையால் இறுகியது.
தன்னிடம் அதிர்ச்சியுடன் திரும்பிய தங்கையின் விழிகளை நேராக தாங்கியவன், "அதைக் கூட என்னால் திரும்பி கேட்டு விட முடியாதளவிற்கு மிகவும் திமிராகவும், அதிகாரமாகவும் பேசுகிறாள். நீயே பார்த்தாய் அல்லவா... திருமணம் முடிந்து முதல் தடவை புதிதாக இந்த வீட்டிற்குள் வருகிறோமே என்கிற அச்சம் கொஞ்சமும் இன்றி இந்தப் வீட்டுப் பெண்ணான உன்னிடமே எப்படி ஆங்காரமாக கத்தினாள். முதலில் வாசல் கதவு வேறு திறந்து கிடக்கிறதே என்கிற பதற்றமும், உன்னை பற்றிய கவலையும் தான் எழுந்தது. ஆனால் இப்பொழுது அதை நினைக்க நினைக்க அவள் மீது ஆத்திரம் தான் வருகிறது. எவ்வளவு நெஞ்சழுத்தம் அவளுக்கு? ஒரு முக்கியமான உதவி செய்து விட்டாள் என்பதற்காக நாம் இவளுக்கு அடங்கி நடக்க வேண்டுமா? புதிதாக அறிமுகமான ஒரு பெண்ணிடம் எப்படி சண்டையிடுவது என்று நாகரீகம் பார்த்தால் இவள் ரொம்பவும் தான் துள்ளுகிறாள். இனியும் ஏதாவது எடுத்தெறிந்துப் பேசட்டும் கவனித்துக் கொள்கிறேன், இவளை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் இல்லையென்றால் நம் தலையில் ஏறி அமர்ந்துக் கொள்வாள். அப்புறம் இன்னொன்று... இவளைப் பற்றிய விவரம் நமக்கு ஒன்றுமே தெரியவில்லை, நடந்துக் கொள்கிற தோரணையை பார்த்தாலும் இவள் குணம் சரியில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது. எதற்கும் நீ அவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு குட்டிம்மா!" என கவலையுடன் தங்கையின் கரம்பற்றி உரைத்தான்.
தமையனிடம் மென்மையாக முறுவலித்தவள், "அண்ணா... எனக்கென்னவோ நீ பயப்படும் அளவிற்கு அவர்களை பார்த்தால் அப்படியொன்றும் ரொம்ப குணக்கேடானவர்கள் போல் தெரியவில்லை. கொஞ்சம் முன்கோபமும், முசுட்டுத்தனமும் அதிகம் போல் தெரிகிறது அவ்வளவு தான். பார்ப்போம்..." என்று பெருமூச்செரிந்துவிட்டு, "நீ என்னை பற்றி எதுவும் கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன். வா... முதலில் உன் பெண்டாட்டியின் பெயர் என்னவென்று கேட்டு உனக்கு சொல்கிறேன்!" என கண்சிமிட்டி முன்னே சென்றாள் சுவாதி.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro