💚29💚
ரெஸ்டாரன்ட்டில் உள்ளவர்களிடம் விசாரித்து அறிந்துக் கொண்டு ஸ்ரீநிதியை அருகில் உள்ள மருத்துவமனையில் விரைவாக சேர்த்தான் ஷ்ரவண்.
அவளை பரிசோதித்த மருத்துவரோ அவனை கண்டபடி வசைப்பாட ஆரம்பித்து விட்டார்.
"நீங்கள் எல்லாம் படித்தவர்கள் தானே... பிரக்னன்டாக இருக்கின்ற பெண்ணை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாதா... இவ்வளவு தூரம் இரத்த அழுத்தத்தை எகிற வைத்திருக்கிறீர்கள், இதில் பல்ஸ் வேறு குறைவாக உள்ளது!" என்று அலுத்தபடி உடன் நின்றிருந்த செவிலியரிடம் எதையோ உத்திரவு இட்டவாறே சிகிச்சையை மேற்கொண்டார்.
மனதை அழுத்திய பாரத்தோடு சோர்வாக நின்றிருக்கும் தமையனை கண்ட சுவாதி, "எல்லாம் சரியாகி விடும், டோன்ட் வொர்ரி அண்ணா!" என ஆறுதலாக முணுமுணுத்து அவன் கரம் பற்றினாள்.
விழிகள் கலங்க, "இல்லைடா பாப்பா... அவள் ஆரம்பத்திலேயே ஒரு நாள் என்னிடம் சொன்னாள், நான் ஏதாவது தெரியாமல் தவறு செய்து விட்டால் என்னை திட்டாதீர்கள் தப்பு என்னவென்று சுட்டி காட்டி சொல்லிக் கொடுங்கள் திருத்திக் கொள்கிறேன் என்றாள். நான் தான் முட்டாள்தனமாக சண்டைப் போட்டதும் இல்லாமல் வந்த கோபத்தில்..." என்றவன் மருத்துவர் அருகில் வரவும் இடையில் நிறுத்தி வேகமாக அவரை நெருங்கி தவிப்போடு பார்த்தான்.
"நத்திங் டூ வொர்ரி... எல்லாம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வருகிறது. இனிமேல் இப்படி அஜாக்கிரதையாக இருக்காதீர்கள், இது சாதாரண விஷயம் இல்லை சற்று ஏமாந்தால் உயிரையே எடுத்து விடும்!" என்க, திடுக்கிட்டவன், "நோ டாக்டர்... இனி அவளுக்கு எந்த ஸ்ட்ரெஸ்ஸும் வராமல் கவனமாக பார்த்துக் கொள்கிறேன்!" என்றான் அவசரமாக.
"குட்... ஸ்லீப்பிங் டோஸ் இன்ஜெக்ஷன் கொடுத்திருக்கிறேன், நன்றாக தூங்கி எழுந்தால் அவர்கள் ஹெல்த் நார்மல் ஆகி விடும். டேக் கேர்!" என்று அறையை விட்டு வெளியேறினார்.
நிம்மதி பெருமூச்சு விட்டவன் ஸ்ரீநிதியின் அருகில் சென்று அவளை வேதனையோடுப் பார்த்தான். கட்டிலில் ஓய்ந்துப் போய் படுத்திருந்தவளின் தோற்றம் நெஞ்சை பிசைய பக்கத்தில் அமர்ந்து அவள் கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டான்.
தானும் எதிரில் இருந்த உடன் தங்குபவரின் கட்டிலில் அமர்ந்த சுவாதி, "அண்ணி அப்படி என்ன தான் சொன்னார்கள் அண்ணா நீ இப்படி செய்து விட்டாய்?" என்றாள் கவலையோடு.
"அது..." என்றவன், "இல்லை... உன்னிடம் சொன்னால் நீ அவளிடம் சண்டைப் போடுவாய் விடு!" என்று மறுத்து விட்டு மனைவியின் முகத்தையே பார்த்திருந்தான்.
ஷ்ரவணின் வேகத்தில் சிரிப்பு வர மெல்ல நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், கடவுளே இதற்கு மேலாவது இவர்களுக்கு அமைதியான வாழ்வை கொடேன் என்று மேலிருப்பவனிடம் பிரார்த்திக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்தே தங்கள் பிரச்சனையால் தங்கையும் சாப்பிடாமல் இருப்பதை உணர்ந்து வெளியே சென்று அவளுக்கு உணவு வாங்கி வந்து கொடுத்தவனை அவள் முறைக்க, அவளின் தலையில் தட்டியவன் சாப்பிடு என்க அவளோ அவனுக்கும் பங்கு பிரித்து உண்ண வைத்து தானும் உண்டாள்.
மீண்டும் பிரச்சனை குறித்து சுவாதி விசாரிக்கவும், "எனக்கு தெரிந்து இன்றைக்கு இவள் கோவிலில் விஷ்வாவை பார்த்து தான் பதற்றமடைந்து இருக்கிறாள்!" என்றான் ஷ்ரவண் யோசனையாக.
"யூ ஆர் ரைட் அண்ணா... அந்த அண்ணா என்னிடம் நலம் விசாரித்து விட்டு உன்னை பற்றி கேட்கவும், நான் தான் அவரை உன்னிடம் அனுப்பி வைத்தேன். பார்த்தால்... இவர்கள் பின்னால் வேகமாக வந்து வீட்டிற்கு போக வேண்டுமென்று ஒரே பிடிவாதம்!"
"ம்... இருவருக்குமே ஒருவரையொருவர் தெரியும் போலிருக்கிறது. இவள் அவனை கண்டு பயந்தாள் என்றால் அவனுக்கு இவள் மீது நன்மதிப்பு இல்லை!" எனும்பொழுதே அவன் முகம் இறுகி கறுத்தது.
"ஏன் அண்ணா என்ன சொன்னார்கள்?"
அதற்கான பதிலை சகோதரன் சொன்னவுடன் பெருமையோடு பார்த்தவள், "இதை அண்ணியிடம் சொன்னாயா..." என்று வினவினாள்.
"எங்கே? அதற்குள் தான் தேவை இல்லாமல் வார்த்தைகள் திசைமாறி விட்டது!" என்றான் வருத்தத்துடன்.
"ஹும்... அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்துக் கொள் அண்ணா, இனியாவது நல்லதே நடக்கட்டும்!"
.
.
இரவு மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருக்க ஸ்ரீநிதியிடம் லேசாக அசைவு தெரிந்தது.
அடுத்த கட்டிலில் தங்கையை உறங்க சொல்லிவிட்டு, மனைவி உறங்கி கொண்டிருந்த கட்டிலில் ஓரமாக அவளுக்கு அணைவாக சாய்ந்து அமர்ந்திருந்தான் ஷ்ரவண்.
அவளுக்கு விழிப்பு வரவும் பரபரப்புற்று நேராக அமர்ந்தவன் அவளிடம் குனிந்து, "நிதிம்மா..." என்று உருகலாய் அழைக்க படக்கென்று இமைகளை பிரித்தவள் அவன் முகத்தில் எதையோ தேடி தவித்தாள்.
அவள் தேடலுக்கு விடையாக நெற்றியில் உதட்டை ஒற்றி எடுத்தவன், "சாரிடா செல்லம்!" என்றான் வேதனையோடு.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro