💚23💚
இரவு உறக்கம் இல்லாமல் சீலிங்கை வெறித்தபடி படுத்திருந்தவனை பார்த்த ஸ்ரீநிதி மெல்ல, "என்னங்க..." என்றாள்.
ம்... என்று தன் புறம் திரும்பிய ஷ்ரவணிடம் அதை கேட்கலாமா வேண்டாமா என அவள் தயங்குவது அவளின் விழிகளிலேயே தெரிய, தன் முகத்தை இயல்பாக்கி கொண்டவன் மனைவியை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான்.
"என்ன?"
"அது... அத்தை வீட்டிற்கு தானே சுவாதி போயிருக்கிறாள். அவர்கள் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் தானே... அப்புறம் ஏன் ஒரு மாதிரி டென்ஷனாக இருக்கிறீர்கள்?"
'இவளுக்கு என் கவலையை எப்படி புரிய வைப்பது?'
"நிதிம்மா... அது... ஒரு சின்ன குழப்பம். அதை உனக்கு நான் அப்புறம் சொல்கிறேன். நீ தூங்கு!" என்று அவள் தலையை அவன் மிருதுவாக வருடிக் கொடுக்க, மனதில் சின்ன சுணக்கம் ஏற்பட்டாலும் தன்னுணர்வு சுட தன்னை சமன்படுத்திக் கொண்டாள் அவள்.
ஷ்ரவணின் மனதிலோ பல குழப்பங்கள். இறப்பதற்கு சில நாட்கள் முன்னர் தான் தன்னுடைய மகனிடம் பிரசாத் குறித்து மனம் விட்டுப் பேசி இருந்தார் அவன் தந்தை.
பிரசாத் சுவாதியை மணக்க விரும்பியதையும் அதை கற்பகம் இவருக்கு தெரியப்படுத்தவும் தன் மனதின் சஞ்சலங்களை சகோதரியிடம் எடுத்துக் கூறி தான் அதை தடுத்து விட்டதாக கூறியவர் இறுதியில் தன் அபிப்ராயத்தை சொன்னார்.
"அக்காவிடம் சொன்னது என்னவோ சொல்லி விட்டேன்டா, ஆனால் பையனை பார்த்தால் எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. நல்லப் பையன்டா... கண்டிப்பாக நம் சுவாதியை நன்றாகப் பார்த்துக் கொள்வான். நான் கூட அவனிடம் தனியாக பேசிப் பார்த்தேன், அவன் நீங்கள் கூறியது சரி தான் மாமா நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை பரவாயில்லை விடுங்கள் என்று சொல்லி விட்டான். அம்மா சொன்னதுப் போல் இனி எல்லாம் சுவாதியின் கையிலும், காலத்தின் கையிலும் தான் உள்ளது!"
அவர் அன்று சொன்னது இன்னமும் அவன் மனதில் எதிரொலித்தது. பிரசாத் அனைவரிடமும் இயல்பாக பழகினாலும் சுவாதியை விட்டு சற்றே ஒதுங்கி இருப்பதை அவனே கண்கூடாகப் பார்த்துள்ளான். இந்தச் சூழ்நிலையில் இதைப் பற்றி ஒன்றுமே விவரம் தெரியாது இருப்பவள் அங்கே அவனிடம் எப்படி பேசிப் பழகிறாளோ தெரியவில்லையே... அவனுக்கு தான் மிகவும் சஞ்சலமாக இருக்கும்.
இந்த சங்கடத்தை மேலும் வளர விடாமல் தவிர்க்க வேண்டும் என்றால் முதலில் வார இறுதியில் ஊருக்கு சென்று அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட வேண்டும்.
மெதுவாக ஒரு மூன்று மாதங்கள் கழித்து சுவாதியிடம் திருமணப் பேச்சை எடுக்கலாம், அப்பொழுது பிரசாத்தை பற்றி கூறி அவளுடைய அபிப்ராயம் கேட்க வேண்டும் என்கிற முடிவு தோன்றியவுடன் தான் மனதில் சிறிது நிம்மதிப் பிறந்தது.
மெல்லிய பெருமூச்சுடன் திரும்பியவனின் விழிகளில் அன்றலர்ந்த ரோஜாவென மென்மையான ஸ்பரிஸத்துடன் தன்னை ஒட்டி உரசியபடி படுத்திருந்த மனைவி விழுந்தாள்.
மனதில் காதல் பிறக்க முழுதாக அவள் பக்கம் திரும்பிப் படுத்தவன் அவள் முகத்தையே இமைக்காமல் ரசித்திருந்தான். அவளின் நீண்ட கயல் விழிகள் மூடி இருந்தாலும் தன் அழகை வஞ்சிக்காமல் வெளிப்படுத்துவதை லயிப்புடன் கவனித்தவன், இவளுக்கு அழகே இவள் கண்கள் தான் என மதிப்பிட்டவாறு அடுத்து பார்வையை இறக்க கூர் நாசியை தாண்டி அது சென்று அவளின் குவிந்த ரோஜா இதழ்களில் நிலைத்தது.
அவனையும் மீறி உள்ளிருந்து உஷ்ணக் காற்றலை வெளியேற சட்டென்று தன்னை நிதானித்தவன், 'ச்சே... ரொம்பவும் ஆழ்ந்து தூங்குகிறாள் தொந்திரவு பண்ண வேண்டாம்!' என தனக்கு தானே வலியுறுத்திக் கொண்டு பார்வையை விலக்கி கொண்டான்.
நேற்று மதியம் தான் காதலை வெளிப்படுத்தியதில் இருந்து மொத்தமாக மாறி தன்னிடம் நெகிழ்ந்துக் கிடப்பவளை எண்ணி மனதில் உல்லாசம் பிறந்தது.
மீண்டும் அவள் புறம் திரும்பியவன் பழைய நினைவில், 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் முகத்தில் என்ன ஒரு அப்பாவித்தனம்? மனதில் ஆவேசம் வந்து விட்டால் மட்டும் ராட்சசி... அழகு ராட்சசி!' என தனக்குள் கொஞ்சியபடி குனித்து அவள் கன்னத்தில் மிருதுவாக இதழ்களை ஒற்றிவிட்டு நிமிர அவள் படக்கென்று இமைகளை திறந்தாள்.
வியந்தவன், "நீ இன்னும் தூங்கவில்லையா?" என்றான்.
"இல்லை... தூக்கம் வரவில்லை!" என்று கூறுபவளின் முகத்தை கவ்வியிருந்த சோர்வை கவனித்தவன் அவள் கூந்தலை வருடியபடி, "ஏன்டா கண்ணம்மா?" என்றான் கனிவுடன்.
மளுக்கென்று விழிகளில் நீர் நிரம்ப, "தெரியவில்லை!" என்று பார்வையை தாழ்த்திக் கொண்டவளை வருத்தத்துடன் பார்த்தவன், "திடீரென்று என்னவாயிற்று?" என தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro