💚19💚
"கிளம்பலாமா?" என்ற கேள்வியுடன் அறைக்குள் வந்த ஷ்ரவணிடம் திரும்பிய ஶ்ரீநிதி மௌனமாக தலையசைத்து விட்டு கட்டிலை விட்டு கீழிறங்கினாள்.
மனைவியின் சோர்ந்த முகத்தை ஊன்றிக் கவனித்தவன், 'டாக்டர் வித்யா சொல்வதுப் போல் இவள் கொஞ்சம் நோஞ்சானாக தான் தெரிகிறாள். ஆனால் ஆவேசம் வந்து விட்டால் மட்டும் காற்றில் இருந்து கூட சக்தியை கிரஹித்து விடுவாளோ... மயக்கம் வருகின்ற அந்த நிலைமையிலேயும் நம்மை பிடித்து எப்படி தூரத் தள்ளி விட்டாள்?' என்று வியப்புடன் எண்ணிக் கொண்டான்.
அதற்குள் அவள் அருகில் வந்து விடவும் அவளின் கரத்தை மென்மையாகப் பற்றியவன், "நடக்க முடிகிறதா... இல்லை எதுவும் கிறக்கமாக இருக்கிறதா?" என்றான் கனிவாக.
கணவனின் அன்பில் மெய்சிலிர்த்தவள், "இல்லை... நன்றாக தான் இருக்கிறேன்!" என்றாள் சின்ன தயக்கத்துடன்.
இருந்தும்... அவளின் தோளைச் சுற்றி ஒற்றை கரத்தால் வளைத்து மற்றொரு கரத்தால் அவளுடைய முழங்கையை பற்றி கிட்டத்தட்ட தாங்கிப் பிடித்தபடி வெளியே அழைத்து வந்தான் ஷ்ரவண்.
ஶ்ரீநிதியின் உள்ளம் வார்த்தைகளில் வடிக்க இயலாத உணர்வுகளின் பிடியில் சிக்குண்டிருக்க, பெருங் குழப்பத்துடன் பயணித்துக் கொண்டிருந்தாள் அவள்.
பக்கவாட்டில் திரும்பி அவளின் சிந்தனை படிந்த முகத்தை யோசனையோடு அளவிட்ட ஷ்ரவண் காரை ஓரங்கட்டி நிறுத்த, அவளோ நெற்றி சுருங்க திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
"மதிய உணவையும் கையோடு வாங்கி விட்டே வீட்டிற்குப் போகலாம். உனக்கு என்ன வாங்கட்டும்?" என்றான்.
விழிகளில் எவ்வித சலனமும் இன்றி ஒருகணம் அவனை ஆழப் பார்த்தவள் பின் சாலையை வெறித்து, "ஏதோ ஒன்று... நீங்கள் எதை வாங்குகிறீர்களோ அதையே எனக்கும் வாங்கி விடுங்கள்!" என்றாள் வெறுமையாக.
'இப்பொழுது இவளுக்கு என்னவாயிற்று? நான் எதுவும் சொல்லவில்லையே... பிறகு எதற்காக முகத்தை இப்படி வைத்திருக்கிறாள்?' என்று குழம்பினான்.
ஆனால் தான் எதையாவது கேட்கப் போய் கொஞ்சமாக சமாதானம் ஆகி இருப்பவள் மீண்டும் எதற்காகவாவது எகிறப் போகிறாள் என தன்னை அடக்கி கொண்டு கீழே இறங்கினான்.
உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தவனின் மனம் முழுவதும் மனைவியையே சுற்றிச் சுற்றி வந்தது. வித்யா இவனுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது போல் முடிந்தவரை அவளின் பார்வையில் இருந்து அவளை கணிக்க முயன்றான். ஆனால் இவனால் அவள் மனதை படிக்கத்தான் முடியவில்லை. அரைமணி நேரத்திற்கு முன்பாக மருத்துவமனையில் தன்னிடம் அந்தளவிற்கு நெகிழ்ந்தவள், காதலை கூறியவள் இப்பொழுது என்னவோ வேற்று மனுஷியாக தோன்றினாள். பார்வை, பேச்சு என அனைத்திலும் ஒரு அந்நியத்தன்மை வெளிப்பட்டது.
'இருவரும் காதலை பகிர்ந்துக் கொண்டப் பிறகு உறவில் அன்னியோன்னியம் கூடத்தானே செய்யும்... இவளிடம் ஏன் அது குறைகிறது?'
அவனுக்குப் புரியவில்லை தன்னுடைய மனைவி தன்னிடம் காதலை மட்டும் தான் பகிர்ந்துக் கொண்டாளே தவிர அவள் மனதை முழுவதுமாக வெளியிடவில்லை என்று.
"சார்..."
தன்னெதிரே பார்சலை நீட்டியவனிடம் நன்றி உரைத்து வாங்கிவிட்டு காருக்கு திரும்பியவன், அங்கே சிலையென அமர்ந்து இருந்தவளின் மடியில் சுவாதினமாக அதை வைத்துவிட்டு காரை கிளப்பினான்.
அதன்பிறகே உணர்வு வந்து மடியை குனிந்துப் பார்த்துக் கொண்டவள் திரும்பி அவன் முகம் நோக்கினாள்.
அவளிடம் மென்மையாக முறுவலித்தவன், "எந்தக் கோட்டையை பிடிக்க இவ்வளவு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாய்?" என்றான் கேலியாக.
ஷ்ரவணின் புன்னகை கண்டு சற்றே தயங்கியவள், "அப்படியெல்லாம் எதுவும் இல்லையே... நான் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!" என்று முனகினாள்.
"ஓஹோ... பெண்டாட்டி சொன்னால் சரி, வேறெந்த சந்தேகமும் வரக்கூடாதாம் உடனே அவளை நம்பிவிட வேண்டுமாம்!" என்றான் தீவிரமாக.
இவனின் உரிமையான பேச்சில் அவளின் முகம் லேசான செம்மையை பூசிக்கொள்ள, இவன் விழிகள் அதை வியப்புடன் நோட்டமிட்டது.
மீண்டும் ஒருமுறை தன் மனதிற்குள்ளாகவே தான் பேசியதை ரீவைன்ட் செய்துப் பார்த்தவன் அவளிடம் தான் இனி நடந்துக் கொள்ள வேண்டிய முறைமையை பற்றி ஒரு முடிவிற்கு வந்தான்.
"ரொம்ப போராக இருக்கிறது இல்லை... ஏதாவது சாங்ஸ் போடலாமா? உனக்கு எந்த மாதிரியான பாடல்கள் பிடிக்கும்?" என்று வினவியபடி அவளின் வலது உள்ளங்கையை மெதுவாகப் பற்றினான் ஷ்ரவண்.
உள்ளிருப்பவனோ, 'அடேய்... இன்னும் ஐந்து நிமிடங்களில் வீடு வந்து விடும்டா. அதற்குள் அவள் ஒரு பாடலை சொல்லி நீ வேறு அதை போட்டு விடப்போகிறாயா... உனக்கே இது அதிகமாக தோன்றவில்லை? அவளை தொட்டுப் பேச இது ஒரு சாக்கு உனக்கு, ம்...?' என்று ஓங்கி முழக்கமிட்டது.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro