💚17💚
பிரசாத்தின் கடையில் சிறிது நேரம் இருந்து விட்டு பிறகு கோவிலுக்கு செல்லலாம் என்று அத்தையை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சுவாதி அந்த எண்ணமே இல்லாதவள் போல அடுத்து அவனையும் தங்களுடன் கோவிலுக்கு அழைத்தாள்.
பிரசாத் அவளுடனான நெருக்கத்தை தவிர்க்க பல விதங்களில் முயல அதையெல்லாம் அழகாக இடைவெட்டியவள் குருவிற்கும் அலைபேசியில் அழைத்து நேராக தம்பியின் கடைக்கு வரச்சொல்லி விட்டாள்.
வீட்டினர் அனைவருக்குமே அவனுடைய வேதனை தெரியும் என்றாலும் தாங்கள் பார்த்து வளர்ந்த பெண்ணின் மீதான பாசத்தால் அவள் எதிர்ப்பார்ப்பை ஒதுக்க முடியாமல் அவளுக்கு இசைவாக நடந்துக் கொண்டனர்.
சுவாமி தரிசனம் முடித்து ஊருக்கு திரும்பும் பொழுதும் பிரசாத்தின் வண்டியில் சுவாதி ஏறிக்கொள்ள குருவின் வண்டியில் கற்பகம் ஏறிக் கொள்ளுமாறு ஆனது.
தனக்குள் பெருகும் ஆற்றாமையை மறைத்து முகம் மாறாமல் அவளுடன் பழகுவதற்கு மிகவுமே சிரமப்பட்டான் பிரசாத்.
தீவிரமான பாவத்துடன் மௌனமாக சாலையில் கவனம் செலுத்தி வந்தவனின் பக்கவாட்டு முகத்தை ஆழ்ந்து கவனித்தவள் மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்தாள்.
"மாமா!"
தன்னிலை மீண்டவன், "ம்... என்னம்மா?" என்றான்.
"நான் உங்களிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டுமே, நாளைக்கு பேசலாமா?"
'தனியாக பேச வேண்டுமா...' என திடுக்கிட்டவன், "என்ன... எதற்காக?" என்று தடுமாறினான்.
"என்னுடைய லைஃப் பற்றி கொஞ்சம் தெளிவான ஒரு முடிவெடுக்க வேண்டும்!" என்றாள் சுவாதி.
"அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நீ ஷ்ரவணிடம் தானே..." என்று பிரசாத் தயக்கத்துடன் இழுக்க, "ப்ச்... இப்பொழுது அண்ணாவே அண்ணியை பற்றி பயங்கர குழப்பத்தில் இருக்கிறான். இதில் நானும் ஏதாவது பேசி கஷ்டப்படுத்த வேண்டாமென்று பார்க்கிறேன்!" என்றாள் வேகமாக.
ஓ... என்றவன் சட்டென்று வண்டியின் வேகத்தை குறைத்து அவளிடம் திரும்பி அவசரப் பார்வை ஒன்றை செலுத்தி விட்டு முன்புறம் கவனத்தை திருப்பி, "ஏன் சுவாதி அந்தப் பையன் மறுபடியும் உன்னை எதுவும் தொந்திரவு செய்கிறானா? எதுவென்றாலும் மறைக்காமல் சொல்லி விடு, அமைதியாக இருந்து பிரச்சினையை வளர விட்டு விடாதே!" என்றான் படபடப்புடன்.
தன் நலன் கருதி பதறும் அவனிடம் அதெல்லாம் எதுவுமில்லை என உண்மையை கூறி சமாதானம் செய்ய துடித்த மனதை அடக்கி, "அது... நான் நாளைக்கு எல்லாம் தெளிவாக சொல்கிறேனே... அத்தையின் முன்னிலையில் எல்லாவற்றையும் பேச முடியாது. அண்ணாவிற்கு பிறகு நீங்கள் தானே சிறு வயதில் இருந்து என்னிடம் உரிமையாக பழகுவீர்கள். அப்பொழுது நான் உங்களிடம் தானே அனைத்தையும் பேச முடியும்!" என்றாள் சுவாதினமாக.
இப்படி கூறினால் தான் இவன் தனக்கு இசைந்து வருவான் என்றெண்ணி அவள் சொல்ல, அவனும் அதற்கேற்ப ஒத்துக்கொண்டான்.
சில வருடங்களாக தான் அவளை குமரிப் பெண்ணாக எண்ணி மனம் நேசித்தாலும் பிறந்த நாள் முதலாக தங்கள் வீட்டின் கடைக்குட்டி பெண் என்று அவள் மீது பாசம் வைத்த நெஞ்சம் மற்றதை பின்னுக்கு தள்ளி அவளுக்கு எதுவும் ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்று பரிதவித்தது.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro