💚15💚
கணவனின் திடீர் அணைப்பில் திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள் ஶ்ரீநிதி.
தான் செய்து விட்ட செயல்களுக்காக ஷ்ரவண் சர்வநிச்சயமாக தன்னை வார்த்தைகளால் வறுத்தெடுக்கப் போகிறான் என்றவள் பதறிக் கொண்டிருக்க அவனோ அருகில் வந்தவுடன் வாய்சொல் ஏதுமின்றி அவன் வயிற்றோடு அவள் தலையை புதைத்துக் கொண்டான்.
உடலும், உள்ளமும் இனிய பரபரப்பில் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழந்து விட்டபடியால் கணவனுக்கு எந்த எதிர்வினையும் காட்டாது அவனோடு ஒன்றி இருந்தாள் அவள்.
மனைவியின் அமைதியை உணர்ந்து விழிகளை தாழ்த்தி அவளைப் பார்த்த ஷ்ரவண் மேனியெங்கும் மயிர்கால்கள் சிலிர்த்திருக்க கூச்சத்தில் தனக்குள் ஒடுங்கியிருந்தவளை கண்டு மெல்ல புன்னகை பூத்தான்.
இருந்த நிலையில் மாற்றமில்லாமல் குனிந்து அவளின் உச்சியில் உதட்டை பதித்து விட்டு சற்றே முகத்தை நகர்த்தியவன் அவளிடம் மென்மையாக, "ஐ ஆம் சாரி!" என முணுமுணுத்தான்.
காதருகே ஒலித்த வார்த்தைகளில் திடுக்கிட்டு விலகிய ஶ்ரீநிதி தன்னியல்பு போல கரங்களை உயர்த்தி விட, அடுத்த நொடி தாங்க முடியாத சுருக்கென்று தைத்த வலியால் அம்மா என்று முகத்தை சுளித்தபடி முனகினாள்.
அவள் விலகவும் தானும் நிமிர்ந்தவன் வலியை சகிக்க முடியாமல் விழிகளை இறுக மூடியபடி கீழுதட்டை அழுந்த கடித்துக் கொண்டிருந்தவளின் அருகில் வேகமாக அமர்ந்தான்.
"ப்ச்... ஏய்... பார்த்து கவனமாக இருக்க கூடாது. கொஞ்ச நேரம் முன்பு தானே கையை வெடுக்கென்று நகர்த்தி வலியை தேடிக்கொண்டாய். அதற்குள்ளாக மறுபடியும்..." என்று கடிந்தபடி அவள் கரத்தை எடுத்து தன் மடியில் தாங்கி மென்மையாக தடவிக் கொடுக்க ஶ்ரீநிதியோ அவனை திகைப்புடன் பார்த்தாள்.
'ஆமாம்... இவர் சொல்வதுப் போல் ஏற்கனவே தெரியாது கையை அவசரமாக நகர்த்தி விட்டு வலியை அனுபவித்தேன் தான். ஆனால் அப்பொழுது இவர் இங்கே அறையில் இல்லையே...'
வழக்கமான தன் சாதுர்யமின்மையால் மனைவியின் மூளைக்கு தான் வேலை கொடுத்து விட்டதை உணராத ஷ்ரவண் நிமிர்ந்து ஷலைன் பாட்டிலை நோக்கி விட்டு, "டிரிப்ஸ் முடியப் போகிறது போலிருக்கிறது. போட்டது வரை போதும் என்று பேசாமல் எடுத்து விடச் சொல்வோமா... இரண்டு முறை தெரியாமல் கையை வெடுக்கென்று இழுத்து விட்டாய், உள்ளுக்குள் நரம்பில் ஊசி எதுவும் வளைந்து விட்டால் அது வேறு கை வீங்கி விடும்!" என்றவாறு அவளிடம் திரும்பினான்.
அவளோ இமைகளை சிமிட்டாமல் அவன் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்திருந்தாள்.
"என்ன?" என்று நெற்றியை சுருக்கினான்.
"நான் முதல் முறை வேகமாக கையசைத்து வலி வந்தப் பொழுது டாக்டர் வித்யா மட்டும் தானே என்னுடன் அறையில் இருந்தார்கள்!" என்றபடி அவன் விழிகளை நேராக நோக்கினாள்.
ச்சட்... என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் விரைவாக தன் தடுமாற்றத்தை மறைத்து அவளை நிமிர்வுடன் நோக்கினான்.
"நான் அறை வாயிலில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்!" என்றான் மிடுக்காக.
சுறுசுறுவென்று சினம் தலைக்கேற, "எதற்காக அப்படி மறைந்திருந்து உளவுப் பார்க்க வேண்டும்?" என்று சூடாக வினவினாள்.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro