Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚10💚

"என்ன அத்தை திடீரென்று சுவாதியை உங்களுடன் ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்கிறீர்கள்? அவள் இங்கேயே இருக்கட்டும், கொஞ்சம் வொர்க் ஃபிரியா ஆனவுடன் நானே அழைத்து வருகிறேன்!" என தன் தங்கையை கற்பகத்துடன் அனுப்ப மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தான் ஷ்ரவண்.

மறுநாள் காலை தேநீர் அருந்தும் வேளையில் தம்பியின் மைந்தனிடம் அவர் தன் எண்ணத்தை கூறும் பொழுதே உடன்பட மறுத்து பிடிவாதம் பிடிக்க துவங்கி விட்டான் அவன்.

"இப்பொழுது உனக்கு என்னடா பிரச்சினை? எப்பொழுதும் பள்ளி, கல்லூரி விடுமுறைகளில் அவள் நம் வீட்டிற்கு வருவது வழக்கம் தானே... என்னவோ புதிதாக தெரியாத இடத்திற்கு அனுப்பி வைப்பது போல் ரொம்பவும் தான் முரண்டுப் பிடிக்கிறாய். ஏன் உன் தங்கையை நான் நன்றாக பார்த்துக் கொள்ள மாட்டேனா?" என்றார் கற்பகம் சிறு கோபமாக.

ஷ்ரவணின் கவலையே வேறு, ஶ்ரீநிதிக்கும், தனக்கும் இடையே உருவாகும் பிரச்சினைகளை சமாளிக்கும் உறவுப் பாலமாக விளங்கும் தங்கையை ஊருக்கு அனுப்ப மனம் வரவில்லை என்பது ஒருபுறம் என்றால் மனைவியின் முகத்தையே பார்க்க விருப்பமில்லாத அவனுக்கு வீட்டிற்கு வந்தால் அவள் மட்டும் தான் இருப்பாள் என்ற நினைவே கசப்பாக இருந்தது.

ஶ்ரீநிதி செய்த எந்த தவறையும் மன்னித்து விட தயாராக இருந்தவனுக்கு குழந்தை கீழே விழுந்து அழுதப் பொழுது அலட்சியமாக அவள் அமர்ந்திருந்த தோரணையும், திமிராக அமுதனின் உயிரையே கேலிப் பொருளாக்கி விமர்சித்ததையும் அவனால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை.

சுவாதியும், கற்பகமும் அதை மன்னித்து மறந்து விட்டாலும் கூட அவன் உள்ளத்தின் கொந்தளிப்பு சிறிதும் அடங்காமல் கனன்று கொண்டே தான் இருந்தது. அதன்பிறகு மனைவியின் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் திருப்பிக் கொண்டு சுற்றி வந்தவனுக்கு அதே சம்பவத்தால் அவள் மனதில் மெல்லிய மாற்றம் நிகழ்ந்திருப்பது தெரியாமல் போனது.

"ஐயோ அத்தை... ஏன் நான் சொல்ல வருவதை புரிந்துக் கொள்ளாமல் நீங்கள் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்கள் மீது நம்பிக்கை இல்லாமலா நான் மறுக்கிறேன், கொஞ்ச நாள் கழித்து நானே அழைத்து வந்து விடுகிறேன் என்று தானே சொல்கிறேன்!"

மருமகனின் மனதை அறியாதவரா கற்பகம்... அதற்காக தானே அவரும் பிடிவாதமாக நிற்கிறார். கணவன், மனைவி இடையே இணைப்பு பாலமாக விளங்குபவளை விலக்கி விட்டால் தாங்களாகவே முட்டினாலும், மோதினாலும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது அவரின் எண்ணம். அதற்கு சம்மதம் தெரிவித்து உடன் கிளம்ப சுவாதியுமே இசைந்து விட்டாள். உடன்பிறந்தவன் தான் அதற்கு சம்மதிக்க மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருக்கிறான்.

வழக்கம் போல் அத்தையின் பிடிவாதமே ஜெயித்து விட, வேறுவழியின்றி தங்கையை அனுப்பி வைக்க தயாரானான் ஷ்ரவண்.

ஆனால் அதன்பின் கிடைத்த தனிமையில் சுவாதியிடம் கணவன், மனைவி இருவருமே புலம்பி தள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

"குட்டிம்மா... நீ ஏன் இப்படி செய்கிறாய்? என்னால் தான் ஒன்றும் பேச முடியவில்லை. நீயாவது அத்தையிடம் இப்பொழுது வரவில்லை என்று மறுத்து இருக்கலாம் அல்லவா!" என்றான் ஷ்ரவண் சிறிது மனத்தாங்கலுடன்.

"நான் என்ன அண்ணா செய்வது அத்தை பிடிவாதமாக இருக்கிறார்கள். அதோடு உங்களுக்கு வேண்டுவதை அண்ணி செய்துப் பழக இந்த தனிமை மிகவும் அவசியம் என்று அவர்கள் சொல்லும் பொழுது, நான் எப்படி மறுப்பது?"

"ஆமாம்... அப்படியே கணவன் மனம் கோணாமல் நடந்து விடுகிற அக்மார்க் மனைவி அவள், நீ வேறு எரிச்சலை கிளப்பாதே... எந்த நேரம் எப்படி ராட்சசி மாதிரி நடந்துக் கொள்வாளோ... அவளை நினைத்தாலே எனக்கு ஆத்திரம் தான் வருகிறது!" என்றான் வெறுப்புடன்.

"ப்ச்... அண்ணா... சும்மா எதற்கெடுத்தாலும் கோபப்படாமல் அவர்களிடம் நல்லமுறையில் பழகுவதற்கு முயற்சி செய். அதேபோல் மெதுவாக அண்ணியின் மனதிலிருப்பதை தெரிந்துக் கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள். அவர்களும் இப்பொழுது கொஞ்சம் மாறியிருப்பது போல் தோன்றுகிறது கிடைக்கும் வாய்ப்பை விட்டு விடாதே!" என்று எச்சரித்தாள்.

தன் மனதின் கடுப்பால் தங்கையின் சொல்லை அலட்சியப்படுத்தியவன் அதன்பிறகு அவளிடம் பேச முயற்சி செய்யவில்லை.

சுவாதி ஊருக்கு கிளம்புகிறாள் என்றதும் ஶ்ரீநிதிக்குமே கவலையாகி விட்டது. கணவன் முகத்தை திருப்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவள் தான் இவளுக்கு மிகவும் ஆதரவாகவும், அனுசரனையாகவும் இருக்கிறாள். அவள் கிளம்பி விட்டால் ஷ்ரவண் என்ன பேசுவானோ, எப்படி நடந்துக் கொள்வானோ என்றெண்ணி பரிதவித்துப் போனாள். ஆனால் ஆவலுடன் உறவினரின் வீட்டிற்கு கிளம்பும் நாத்தனாரை தன் சுயநலத்திற்காக தடுத்து நிறுத்தவும் அவளுக்கு மனம் வரவில்லை இருந்தும் ஒருமுறை அவளிடம் பேசிப் பார்த்தாள்.

தன் பின்னே தயக்கத்துடன் வந்து நிற்கும் ஶ்ரீநிதியை கவனித்த சுவாதி, "அட அண்ணி... என்ன அமைதியாக வந்து நிற்கிறீர்கள்?" என்று அவளின் கரம்பற்றி சிநேகத்துடன் முறுவலித்தாள்.

- part to be continued on www.deepababuforum.com

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro