Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அலை - 6

திவ்யாவிடம் திருமணத்தைப் பற்றி பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தது. இந்த ஒரு மாதத்தில் மதிவர்தினி திவ்யா தம்பதியினரை சிறிதும் வற்புறுத்தவில்லை.

மாறன் தன்னால் இயன்ற மட்டும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி தீவிரமாக விசாரித்து விட்டான். எதிலும் சிறு பிசுறு கூட தட்டவில்லை. குடும்பம் எல்லாம் சரி, ஆனால் அஸ்வின்? அந்த பெரிய கேள்வி தொக்கி நிற்க, முடிவெடுக்க முடியாமல் தவித்து திண்டாடியவர்கள் முன்னே வந்து நின்றான் சித்தார்த்.

"வீட்டுக்கு வாங்க க்கா, மாப்பிள்ளை பாக்குற மாதிரி வர வேணாம். ஒரு அம்மா வீட்டுக்கு வர்ற பொண்ணு மாதிரி வாங்க. ப்ளீஸ்..."

தன்னிடம் ஒரு சகோதரன் போல் கெஞ்சி நிற்கும் சிறியவன் மனதை நோகடிக்க விரும்பாமல் இருவரும் சம்மதிக்க, அஸ்வின் இல்லம் வந்தனர். விசாலமான அந்த பெரிய வீட்டில், அந்த தம்பதிக்கு ஏகபோக வரவேற்பு.

மாலை சிற்றுண்டியை முடித்து கிளம்புகிறேன் என நின்றவர்களை, மதிவர்தினி விடவே இல்லை. இரவு உணவை முடித்துதான் செல்ல வேண்டும் என்கிற ஆணை வந்துவிட, அவரது பாசப்பிணைப்பு நிறுத்திவிட்டது.

கணவன் காதில், "பொண்ணு தரணும்னு வேணும்னே பாசமா பாத்துக்குறாங்களோ?" கிசுகிசுத்த மனைவியிடம், தானும் அதே தான் நினைக்கிறேன் என்பதை, சிரிப்பை அடக்க துடிக்கும் அவன் இதழ்கள் கூறியது.

"ஏமாற வேணாம்..." மீண்டும் அவளே கூறிக் கொள்ள, சிறிது நேரத்தில் அஸ்வின் தந்தை ராகவ் வந்தார்.

மனைவியின் ஆசையை அறிந்திருந்தவர் வந்தவர்களிடம் நலம் விசாரித்து, மாறன் வேலை பற்றிய தகவல்களை அறிந்து பொதுவான பேச்சுகளைத் தொடர, நேரம் ரெக்கை கட்டி பறந்தது. அவள் நினைத்ததை விட அந்த குடும்பம் அதிக வித்தியாசமாக இருந்தது.

சித்தார்த், ராகவ் இருவரும் அவர்கள் குடும்ப தொழிலை தான் பார்க்கின்றனர். இருவரும் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியது. மகனை தந்தை கேலி செய்வதும் தந்தையை மகன் கேலி செய்வதும், ஒருவர் பேசியதில் தவறு இருந்தால் மற்றவர் அதனை திருத்த, அதற்கு ஒரு சிறு பாச சண்டை என அந்த குடும்பம் அழகிய ஓவியமாக தெரிந்தது.

அதில் எந்தவித நடிப்போ, ஏமாற்றமோ தெரியவில்லை திவ்யாவுக்கு. மனம் ஒரு பக்கம் அந்த குடும்பத்தின் அமைதியை, தன்னுடைய வாழ்க்கையிலும் எதிர்பார்த்தது.

எது புரிந்ததோ, இல்லையோ? தாங்கள் எப்படி ஆரோஹிக்கு தகவலை எடுத்து செல்லவில்லையோ, அதேதான் இங்கும். அஸ்வினிடமும் இன்னும் திருமண பேச்சு போகவில்லை. ஆக, தங்களது சமதத்திற்காக தான் காத்திருக்கின்றனர். இதனை யோசித்த திவ்யா, எழுந்து சமையலறையில் இருந்த மதிவர்தினியிடம் சென்று, நேரடியாகவே மனதில் தோன்றியதைக் கேட்டுவிட்டாள்.

"ஆரோஹி ரெண்டு வாரமா ஒரு ஆன்ட்டி கூட ஃப்ரண்ட் ஆகிட்டேன்னு ரொம்ப சந்தோசமா சொல்லிட்டு இருக்கா. அது நீங்க தான? அப்புறம், இந்த கவனிப்பு, உபசரிப்பு எல்லாம்..."

தயங்கி அவள் நிறுத்த அதனைப் புரிந்துகொண்ட மதி, அவள் கையில் தான் வெட்டிய ஆப்பிளை வைத்து, "சந்தேகமே வேணாம் திவ்யா, அது நான்தான். இந்த உபசரிப்பு ஆரோஹிய என் வீட்டுக்கு நீ அனுப்ப மாட்டனு சொன்னாலும் நடக்கும். இப்ப நாங்க உன்னை இங்க வர சொன்ன ரீசன், உன்னை அட்ராக்ட் பண்ணவோ, என் குடும்பம் எப்படி சந்தோசமா இருக்கு பார்னு காட்டவோ இல்ல.

ஆரோஹி சொன்னா, உங்க ரெண்டு பேர் அப்பா, அம்மா வீடும் உன் கூட பேசுறதில்லன்னு. இந்த மாதிரி நேரத்துல மனசு ஏக்கம் வர கூடாதேனு தான் வர சொன்னேன். இந்த சம்மந்தம் நடக்குதோ, இல்லையோ... நீ இதை உன் அப்பா, அம்மா வீடு மாதிரி உரிமையா நினைச்சு வரலாம்." திவ்யாவுக்கு கண்கள் கலங்கி, வார்த்தை தடுமாற, முயன்று தன்னை கட்டுப்படுத்தி வரவேற்பறை வந்தமர்ந்து விட்டாள்.

முதலில் பழத்தை கொடுத்து உண்ண கூறியவர், அடுத்து பழச்சாற்றை எடுத்து வந்துவிட்டார். ருசியானதை எதிர்பார்த்த நாவானது அந்த இனிப்பு குறைவான, புளிப்பு சுவை உடைய உணவை எடுக்க மறுத்துவிட்டது.

ஆனாலும் அவரிடம் அழுத்தி வேண்டாம் என கூற முடியாதே என்கிற ஒரே காரணத்தால், மிடறு மிடறாக குடித்துக் கொண்டிருந்த வேளை, அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து நின்றான் அஸ்வின் நாராயண்.

கையில் இரண்டு பெரிய ட்ராவல் பேக், தோளில் ஒரு கிட் பேக் வைத்து உள்ளே வந்தவனை, அங்கிருந்த எவரும் எதிர்பார்க்கவில்லை.

புதிதாக தெரிந்த மனிதர்களிடம் முகம் கோணாமல், "வாங்க!" மனதார அழைத்தவன், எப்பொழுதும் தான் வந்தால் தன்னை பூரிப்போடு அணைக்கும் அன்னை, இன்று கண்களை விழித்து விழித்து பார்ப்பதை கண்கள் சுருங்க பார்த்தவன், அவர் அருகிலே சென்று அமர்ந்து விட்டான்.

அதோடு தன்னையே குறுகுறு என பார்க்கும் அனைவரின் பார்வையும் வித்தியாசமாக தெரிந்தது ஆணுக்கு.

"நீ என்ன அஸ்வின், இங்க பண்ற?"

துளியும் மகிழ்ச்சி இல்லாத அன்னையின் கேள்வி புதல்வனை வாட்டியது, "என்ன மதி, ஏன்டா வந்தனு கேக்குற மாதிரி இருக்கு..." குற்றம் சாட்டி, தன்னுடைய வருத்தத்தை மெல்லிய குரலில் கேட்டான்.

"அவ எப்படி அஸ்வின் அப்டி சொல்லுவா? நீ இங்க வர்றதா சொல்லவே இல்லையே, அதான் எல்லாருக்கும் ஷாக்!"

"வீட்டுல கொஞ்சம் ஆல்ட்ரேஷன்ஸ் பண்ண சொல்லிருக்கேன் ப்பா. ஒரு மாசம் மேல ஆகும், அதுவரை இங்க இருக்க வந்தேன். அதுக்கு தான் இந்த மதி ஏன் வந்தனு கேக்குறாங்க..." என்றவன் மாறனைப் பார்த்து,

"அப்பா கூட பிஸ்னஸ் பண்றிங்களா?" என கேட்டான், அவர்கள் இருவரும் யார் என்று தெரிந்துகொள்ளும் நோக்கோடு.

காரணம், வந்த கணம் முதல் அவர்கள் இருவரது பார்வையும், தன்னை அணு அணுவாக துளைத்துக் கொண்டிருந்தது அஸ்வினுக்கே சங்கடமானது.

மறுபக்கம் மாறனுக்கு என்ன பதில் கூறவென்று தெரியவில்லை, "அவங்க எனக்கு தெரிஞ்சவங்க அஸ்வின்." தானே முந்தி பதில் கொடுத்தார் மதிவர்தினி.

"ஓ... ஓகே ஓகே... மா, நான் திங்ஸ் எல்லாம் ரூம்ல வச்சிட்டு வர்றேன்."

அவன் கண்ணை விட்டு மறைந்ததும் உடனே சரணடைந்துவிட்டார் மதி, திவ்யாவிடம், "இவன் இப்டி திடீர்னு வருவான்னு தெரியாதும்மா."

"பரவால்ல ஆன்ட்டி, நீங்க சொன்ன மாதிரி சாதாரண அஸ்வினை, இன்னைக்கு பாக்க எங்களுக்கு வாய்ப்பு கெடைச்சதா நினைச்சுக்குவோம்."

மிக சாதாரணமாக பேசும் திவ்யாவைப் பார்க்க அனைவருக்கும் வியப்பு, முக்கியமாக அவள் கணவனுக்கு. உன்னிப்பாக அவள் முகத்தைப் பார்த்தவன் விழிகள் விரிந்தது, தான் கண்ட புரிதலில். மெல்லிய அன்பின் ரேகை சிரிப்பாய் மாறி கண்கள் விண்மீனாய் ஜொலித்தது.

கணவனின் பார்வை தன் மேல் மாறாமல் விழுவதை பார்த்தவள், கண் அசைத்து மாறனை அருகே அழைக்க, எழுந்து வந்தவனிடம், "என்னோட ஆரோஹிக்கு ஒரு நல்ல..." அவள் பார்வை இனிப்பை ருசி பார்க்க கொடுக்க, அதற்கு தந்தை, மகன் இருவரும் அந்த கிண்ணத்தினுள் கையை விட்டு, சிறுபிள்ளை போல் சண்டையிட்டு நின்றனர்.

"நல்ல குடும்பம் கிடைக்கும்னு தோனுது..."

"இல்ல ம்மா..."

தடுத்து பேச வந்த கணவன் கையைப் பிடித்து, "ப்ளீஸ் மாறா... நம்ம பக்கம் இருந்து எதுவும் பண்ண வேணாம். நாம கெளம்புறப்போ அவங்ககிட்ட பேசிட்டு போகலாமா, எனக்காக...?"

"போடி... என்ன ஆஃப் பண்ண ஆவூனா என் கையை கெட்டியா புடிச்சிட்டு..."

சலிப்போடு நகர்ந்தவனின் கையை மீண்டும் இழுத்து, "பதில் சொல்லிட்டு போங்க மாறா." மெல்லிய குரலில் கெஞ்சினாள்.

"நம்ம ஆரோஹி வாழ போற வீட்டை பாக்க வேணாம்?" கண்களை சுற்றி சுழல விட்டவள் பார்வையில், ராகவிடம் சித்தார்த், கைப்பேசியில் ஏதோ காட்டிக் கொண்டிருக்க,யாரும் தங்களை பார்க்கவில்லை என உணர்ந்து

அந்த நொடியைப் பயன்படுத்தி பற்றியிருந்த மாறனின் உள்ளங்கையில், முத்தம் ஒன்றை கொடுத்து அவன் கையை விடுவித்தாள்.

"ரொம்ப கொடும படுத்துறடி..." முணுமுணுத்தவன் வேகமாக சித்தார்த்திடம், "சித்தார்த் வீட்டை சுத்தி காமிக்கிறேன்னு சொன்ன?" சமையலறையில் இருந்து இவர்களைப் பார்த்த மதிக்கே அதிர்ச்சி தான்.

சித்தார்த்தை இழுத்து மாறன் அங்கிருந்து நகர, ராகவ் தானும் மனைவியைக் காண சென்றுவிட்டார்.

தானும் அவர்களோடு கலந்திட தான் ஆசை, ஆனால் உடல் அசைந்து கொடுக்கவில்லை.

சாய்வாக அமர்ந்தவள் தனக்கு முன்னிருந்த ஒரு நாளிதழை எடுத்து ஆராய துவங்க, அந்த விலையுயர்ந்த சோபா கூட அவளுக்கு வசதியாக இல்லை. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அசௌகரியமாக இருந்தது போலும்.

"ஆர் யூ ஆல்ரைட்?" இதமான குரல் சற்று தொலைவில் கேட்கவும், தலையை உயர்த்தி பார்த்தவள் அஸ்வினை எதிர்பார்க்கவில்லை.

அவளது அவஸ்தையை படி இறங்கி வரும் பொழுதே கவனித்தவன், அருகில் யாரும் இல்லாததைப் பார்த்து சற்று வேகத்தை கூட்டி விரைந்தான். கண்கள் மொத்தமும் உண்மையான இரக்கம் கொண்டு, தான் முன் பின் பேசாத பெண் என்றும் பாராமல் கேட்டு வைத்தவனை, அசையாது பார்த்த திவ்யா தலையை ஆட்டினாள், "குட்!" என்று.

ஆனால் அஸ்வின் மனதிற்கு அவள் பதில் திருப்தியைக் கொடுக்கவில்லை.

"ப்ளீஸ்... ஃபீல் ப்ரீ. அந்த ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க." என்றான் இரண்டே அடி தூரத்தில் இருந்த விருந்தினர் அறையை கை காட்டி.

அவள் முகத்தில் தெரிந்த வேதனை அத்தகையது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் முதுகு வலி ஒரு பக்கம், கால்களில் வீக்கம் ஒரு பக்கம் என சோர்ந்து தான் இருந்தாள்.

"இல்ல... இல்ல... இது எனக்கு நார்மல் தான், கொஞ்ச நேரத்துல சரியாகிடும். ஜஸ்ட் நார்மல் கால் வலி தான்." அவனுக்கு புரிய வைக்க முயன்றாள் திவ்யா.

சிறிதும் யோசிக்கவில்லை, அங்கிருந்த ஒரு ஓட்டோமேனை நகர்த்தி அவள் கால்களுக்கு வாகாக வைத்து, "கால் நீட்டிக்கோங்க." என்றான்.

அவனது இச்செயலில் விழி விரிய விக்கித்து நின்றாள் திவ்யா. எத்தனை பெரிய மனிதன், சிறிதும் செருக்கு இல்லாமல் இந்த வேலையை செய்கிறான். அதுவும் ஒரு மூன்றாம் நபருக்கு. ஒரே செயலில் அவளை தன்னுடைய குணத்தால் கட்டி போட்டு விட்டான் அந்த ஆடவன்.

நன்றி நவிழ்ந்து காலை அவள் நீட்டி அமர்ந்த பிறகு சற்று நிம்மதியாக இருந்தது. அன்னையைத் தேடி சமையலறை சென்றவன், "ம்மா, கொஞ்சம் ஹாட் வாட்டர் வச்சு தரீங்களா?"

அன்னை சரி எனவும் தன்னறை சென்றவன் ஐஸ் பேக் எடுத்து வந்து, சூடு நீரை அதில் நிரப்பி நேராக திவ்யாவிடம் சென்று நீட்டினான். என்னவென்று விழித்தவளிடம், "ஹாட் வாட்டர் பேக், யூஸ் பண்ணிக்கோங்க." மறுக்காமல் அவள் வாங்கிய பிறகே அகன்றான்.

அவன் சென்ற சில நிமிடங்களில் மாறன் அங்கு வந்துவிட, அவன் பின்னால் வந்த அஸ்வின் மேல் தான் இருவரது கவனமும் அதிகமிருந்தது. இரவு உணவை முடித்த அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராகவை அழைத்து வெளியே வந்த மாறனைத் தொடர்ந்து அமைதியாக மதிவர்தினியும் வந்தார்.

வெளியே வந்து ஐந்து நிமிடங்கள் மேல் ஆகியும் பேச தயங்கி நின்ற மாறனிடம், "முடிவை இப்ப எடுக்க உங்களை வர சொல்லல தம்பி." விளக்கினார் ராகவ்.

"அது ஒன்னுமில்ல சார், அரசல் புரசலா அஸ்வின் ஒரு பொண்ணு லவ் பண்றார்னு டெய்லி பாத்துட்டே தான் இருக்கோம். லாஸ்ட் வீக் கூட, மும்பைல மேட்ச் முடிச்சிட்டு அந்த பொண்ணை அவர் மீட் பண்ணதா சொல்றாங்க. இப்டி இருக்க ஒருத்தர் எப்படி ஆரோஹிய கல்யாணம் பண்ணுவார்?" அவன் கேள்வியில் மறைந்திருந்த பொருளை, அந்த இரண்டு பெரியவர்களும் உடனே கண்டு கொண்டனர்.

"அப்போ உங்களுக்கு சரியா?"

தலை தாழ்த்தி தலையை ஆட்டியவன், "திவ்யாக்கு அஸ்வினை ரொம்ப புடிச்சிருக்கு. ஆனா அதே மாதிரி அவரோட காதலை பிரிக்கிறதா நினைச்சு ரொம்ப ஃபீல் பண்றா. ப்ளீஸ்... அவர் சம்மதம் இருந்தா மட்டும் சொல்லுங்க, நாங்களும் ஆரோஹிக்கிட்ட பேசுறோம்."

மாறன் கூறுவதும் சரியாக பட, அவனிடம் பேச வந்த மதிவர்தினியை தடுத்துவிட்டார். நேரம் ஆவதால் மனைவியை அழைத்து செல்லவிருந்த இருவரையும், இருசக்கர வாகனத்தில் வேண்டாம் என தங்கள் காரினை கொடுத்து அனுப்பி வைத்தனர் பெரியவர்கள்.

மனம் நிறைந்து வந்த திவ்யாவுக்கு அன்று இரவு தான், ஆரோஹியின் எதிர்காலம் பற்றிய கவலை இல்லாது நிம்மதியாக உறங்கினாள்.

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அன்று வீட்டில் அனைவரும் இருந்த நேரம் அஸ்வினிடம், "உனக்கு ஒரு பொண்ணு பாத்துருக்கோம் அஸ்வின்." என மதி தகவல் கொடுத்தது தான் தாமதம், உடனே குதிக்க ஆரம்பித்துவிட்டான்.

"இதுக்கு தான் இந்த வீட்டு பக்கமே எட்டி பாக்காம இருந்தேன். உங்க வேலைய காமிச்சிட்டீங்க பாருங்க, ப்பா என்ன ப்பா இது?" அன்னையிடம் எகிறியவன், தந்தையிடம் திரும்பி நியாயம் கேட்டு நின்றான்.

"அவளை எதுக்கு அஸ்வின் கத்துற? ஆமா பொண்ணு பாத்துருக்கோம், நீயே சொல்லு என்ன பண்ணலாம்?" அவனது ஆத்திரத்தை எதிர்பார்த்தே குடும்பத்தினர் அனைவரும் இருக்க, நிதானமாகவே அவனை கையாள முடிவெடுத்து அமைதியாக பேசினார்.

அஸ்வின், "என்ன பண்ணலாம்னா? அது உங்க பிரச்சனை. எனக்கு இப்ப கல்யாணம் வேணாம், ஏன் அவங்க சொல்லிருப்பாங்களே யவ்னிகாவ நான் டேட் பண்றத..."

ராகவ், "எஸ், நீ டேட் பண்ற, அவ்ளோ தான். சோ அதை, அந்த பொண்ணையும் மறந்துடு. நாங்க பாத்திருக்குற பொண்ணை பாரு, உனக்கு புடிக்கும்."

சித்தார்த், "ஆமாடா அஸ்வின் நான் போட்டோ பாத்தேன், அழகா இருக்காங்க. எனக்கு என்னவோ எங்க வேவ் லென்த் நல்லா இருக்கும்னு தோனுது." ஆரோஹியின் சேட்டைகளை, கேட்டு தெரிந்து கொண்ட சித்தார்த்துக்கு பல நாட்களாகவே இதே எண்ணம் தான்.

"அடிச்சு சாவடிச்சிடுவேன்டா, வாய மூடிட்டு போய்ட்டு."

சகோதரனை அதட்டி தந்தையிடம் திரும்பினான், "நீங்க பண்றது உங்களுக்கே சரியா இருக்காப்பா? முப்பது வருஷம் முன்னாடி, நீங்களே லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவிங்களாம். ஆனா நான் இப்ப எனக்கு புடிச்ச லைஃப்ப சூஸ் பண்ண கூடாதா?"

"ஏன்டா, நான் எப்படிப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணி வந்துருக்கேன். அவளுக்கும் நீ பாத்திருக்க பொண்ணுக்கும் எவ்ளோ வித்தியாசம்? என்ன மதி ம்மா?"

மனைவியை இந்த நிலையிலும் காதல் பொங்க பார்க்கும் தந்தை மேல், எப்பொழுதும் எழும் அதே பொறாமை புதல்வனுக்கு இப்பொழுதுமே எழத்தான் செய்தது. "ராகவ்!" மதியின் அதட்டலில் அசடு வழிந்தார் ராகவ்.

"யவ்னி ரொம்ப நல்ல பொண்ணு ப்பா. அம்மா மாதிரி தான்..."

ராகவ், "உடனே அம்மா கார்ட் எடுத்துட்டு வர கூடாது அஸ்வின். நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்னா, நம்ம குடும்பத்துக்கு அவ செட் ஆவா, என்னை நல்ல பாத்துக்குவா, நாள பின்ன எங்களுக்கு நடுல பெருசா எந்த மனஸ்தாபமும் வராதுனு, எனக்கும் என் குடும்பத்துக்கும் நம்பிக்கை இருந்துச்சு.

நான் அந்த நம்பிக்கையை அவங்களுக்கு குடுத்தேன். நீ எங்களுக்கு அப்டி என்னடா செஞ்சிருக்க?"

மகனிடம் அமைதி தான், "இல்ல, நீ ரொம்ப பிஸி. சரி ஓகே! அந்த பொண்ணு விஷயம் உன் அம்மாவுக்கு தெரிஞ்சு எவ்ளோ நாள் ஆச்சு? இப்பவரை ஒரு வார்த்தை என்கிட்ட பேசுனியாடா? அப்போ வீட்டுக்கு பெரிய மனுஷன்னு நான் எதுக்கு இருக்கேன்?" ராகவ் பேச, மகன் அன்னையை முறைத்தான்.

"என்னை எதுக்குடா முறைக்கிற?"

"நீங்க தான எல்லாத்துக்கும் காரணம். எனக்கு இந்த கல்யாணம் வேணாம், அவ்ளோ தான்." என்றான் பிடிவாதம் குறையாமல்.

மனைவியிடம் சண்டைக்கு நின்ற மகனை ஆத்திரம் பெறுக பார்த்தவர், "இங்க பேசுடா, நான்தான உங்கிட்ட கேள்வி கேட்டேன்?"

மகனோ தந்தையை எதிர்த்து பேச முடியாமல் தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டான், "டார்ச்சர் பண்றீங்க ப்பா." என்றான் பொறுக்க மாட்டாமல்.

அவன் நிலையும் புரியதான் செய்தது. ஆனாலும் ஆரோஹி போன்ற பெண்ணை, அவன் வாழ்க்கையில் கொண்டு வந்தே தீர வேண்டும் என்கிற மதியின் பிடிவாதம், கணவனையும் கட்டி போட்டுவிட்டது.

"நல்லது பண்ணணும்னு நினைச்சா டார்ச்சரா உனக்கு?" பொறுக்க முடியாமல் மதிவர்தினி மகனிடம் கேட்டார்.

"எது நல்லது? எனக்கு புடிக்கல புடிக்கலனு சொல்ல சொல்ல, ஒரு விஷயத்தை என் மேல திணிக்கிறதா? ரொம்ப பண்றீங்க ம்மா..."

ராகவ், "சரி திணிக்கிறதாவே இருக்கட்டும், பொண்ணையே பாக்காம புடிக்கலனு நீ கூவிட்டு இருக்குறது, எந்த விதத்துல சரினு நினைக்கிற?"

அஸ்வின், "பொண்ண பாக்கவே புடிக்கலைனு அர்த்தம். அங்க ஒரு பொண்ணுகூட பழகிட்டு, இங்க இன்னொரு பொண்ண கல்யாணத்துக்கு பாக்குற அளவுக்கு, என் குணம் கெட்டு போகல ப்பா."

ராகவ், "டேட், பழக்கம்னு சொல்றியே தவர, அந்த பழக்கத்துக்கு ஒரு பேர் உன்னால வைக்க முடியுமா?"

"அதை நானே இன்னும் முடிவு பண்ணல ப்பா. எனக்கு டைம் எங்க குடுக்குறீங்க? உங்க இஷ்டத்துக்கு நீங்களா முடிவெடுத்து என்கிட்ட தகவல் சொல்றிங்க."

மதிவர்தினி, "பாத்திங்களா... இதை தான் சொன்னேன், அவனோட மனசு இன்னும் அந்த பொண்ணு பக்கமே போகல. ஏதோ புடிச்சிருக்குனு பழகுறான். இல்ல, ரொம்ப பிடித்தம் தான்னு ஸ்ட்ராங்கா இருந்தா, இந்நேரம் அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்லிருப்பான்ல?" கணவரிடம், தான் மகனை அறிந்ததிலிருந்து எடுத்து கூறினார்.

"பழகுன ஒடனே புடிச்சிருக்குன்னு சொல்ல, இது என்ன முட்டாள் தனமான அரேன்ஞ்ட் மேரேஜா?" அன்னையைப் பார்த்து குரலை உயர்த்தி கத்திவிட்டான் அஸ்வின்.

"அஸ்வின்..." ராகவ்வின் கண்டன குரல் இருவரையும் சென்று சேரவில்லை.

அதற்குள் மதி மேலும் மகனிடம், "என்ன ஒடனே? ஒரு வருஷம் மேல உங்களுக்குள்ள பழக்கம் இருக்கு. இந்த ஒரு வருஷம் போதாதா சரி வருமா, இல்லையானு முடிவெடுக்க? இத்தனை மாசம் இல்லாத ஒரு ஃபீலிங்ஸ், இனிமேல் வரும்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா? இது வெறும் அட்ராக்ஷன் தான்."

அஸ்வின், "ம்மா அட்ராக்ஷன் அது இதுனு அசிங்கமா பேசாதீங்க." பற்களைக் கடித்து குரல் தாழ்த்தி எச்சரித்தான்.

"உண்மை பேசுனா கோவம் வருதா? ஒரு வருஷமாகியும் உன் மனசுல நிரந்தரமான இடம் பிடிக்காதவளை புடிச்சு, நீ தொங்கிட்டு இருக்குறது எனக்கு புடிக்கல. நானும் தான் பாத்திருக்கேனே அவளை அந்த பார்ட்டில.

பக்கத்துல தான் இருந்தா, ஒரு வார்த்தை மரியாதைக்கு கூட பேசல என்கிட்ட. அவ வேணாம் உனக்கும், இந்த வீட்டுக்கும். உனக்கு புடிக்கலனாலும் நான் சொல்ற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கணும்." அழுத்தம் நிறைந்த குரலில் இதை தவிர, உனக்கு வேறு வழியில்லை என்று கூறி நிறுத்தியிருந்தார் மதி.

"உங்கள எல்லாம் உங்க அப்பா அந்த குடிகாரனுக்கே கட்டி குடுத்திருந்தா, அப்போ தெரிஞ்சிருக்கும் என்னோட கோவம். ஈஸியா இங்க வந்து உக்காந்துட்டீங்கள்ல, அப்றம் எப்படி அடுத்தவனோட கஷ்டம் புரியும்?"

மதியின் முகம் சட்டென இருட்டிவிட, தான் பேசியதன் வீரியம் இன்னும் விளங்காமல் அடங்காத சினத்தோடு நின்ற மகனை, நீர் நிறைந்த விழிகளோடு அதிர்ந்து பார்த்திருந்தார் மதி.

"அளவுக்கு மீறி பேசுற அஸ்வின். அவ வீட்டுல நின்னு அவளை பேச உனக்கென்னடா உரிமை இருக்கு? உன் இஷ்டப்படி தான இருப்ப? போ, உனக்கு புடிச்சதையே செய். நாளைக்கு கல்யாணம்னு சொன்னா வந்து நிக்கிறோம்.

அதைவிட்டு என் பொண்டாட்டிய பேசுற வேலை வச்சிக்காத. குடிகாரனுக்கு கட்டி வச்சிருக்கணுமாம்ல? அவனை சுட்டு என் மதிய தூக்கிட்டு வந்துருப்பேன்டா. எந்த எல்லைக்கும் போற அளவு அவ மேல எனக்கு பாசம் இருந்துச்சு. பேச வந்துட்டான், அவனையும் என்னையும் கம்பேர் பண்ணி..."

மகனை சரமாரியாக திட்டிவிட்டு, இன்னும் அசையாமல் நின்ற மனைவியின் கை பிடித்து தங்கள் அறைக்குள் இழுத்து சென்றுவிட்டார்.

சித்தார்த்தும் தன் பங்கிற்கு சகோதரனை முறைத்து, "யாருக்காகவோ என் அம்மாவை பேசுன, அண்ணன்னு கூட பாக்க மாட்டேன், கொன்னுடுவேன்."

விரல் நீட்டி எச்சரிக்கை செய்த சித்தார்த்தும் அன்னையைத் தேடி சென்றுவிட, அனைவரின் புரிதலற்ற பேச்சும் செயலும் அதிகம் தன்னை தாக்கியதாக உணர்ந்த அஸ்வின், வாகனத்தை எடுத்து கண் போன போக்கில் சுற்றி திரிந்தான்.

மனம் அமைதியான நிலைக்கு வரவே, சில மணி நேரங்கள் பிடிக்க, அதன்பிறகு தான் அன்னையின் கலங்கிய தோற்றம் மகனை வதைத்தது. அளவிற்கு அதிகமாக தன்னை நினைத்தே கூனி குறுகி, உடனே அன்னையைப் பார்க்க வீட்டிற்கு விரைந்தான்.

வீட்டின் வாயிலை காவலர் திறந்துவிட, உள்ளே சில அடிகள் நகர்ந்த அஸ்வினின் வாகனம் தடுமாறி நின்றது அவன் கைகளில். சில அடி தூரத்தில் வீட்டின் வாயிலில் தந்தையும் சகோதரனும், அன்னையைக் கைகளில் தூக்கி வாகனத்தில் ஏற்ற, பதறிய அஸ்வின் வேகமாக இறங்கி அவர்களை நெருங்கினான்.

தந்தையின் முகம் இருளடைந்து காட்சியளிக்க, சித்தார்த் கன்னத்தில் கண்ணீரின் தடயம் காட்சியளித்தது. பின்னிருக்கையில் கண்களை மூடி கிடந்த மதியின் தோற்றமே, அவர் சுயநினைவின்றி கிடப்பது தெரிய, உயிரே நடுக்கம் கண்டது அஸ்வினுக்கு.

"ம்மா..." வார்த்தைகள் உருவாக மறுக்க, இதழ்கள் மட்டுமே அசைந்தது ஒலி எழுப்ப முடியவில்லை.

சகோதரனிடம் என்ன நடந்ததென கேட்க வர, அவனது கைகள் தடுமாறி வாகனத்தின் முன் இருக்கையின் கதவைத் திறக்க கூட, சிரமப்பட்டு நிற்பதைப் பார்த்தவன் அவனைத் தடுத்து, தானே ஓட்டுவதாக கூற, எதுவும் பேசாமல் வழிவிட்டு சென்றான்.

வாகனம் அந்த அமைதியான தார் சாலையில் மின்னல் வேகத்தில் மருத்துவமனையை அடைந்துவிட்டது. உடனே சிகிச்சை நடைபெற துவங்க, தந்தையிடம் சென்று என்ன நடந்ததென கேட்டான்.

அவர் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சகோதரனிடம் நின்றான், "ரூம் உள்ள வந்து ஒரு வார்த்தை பேசலடா, அமைதியாவே இருந்தாங்க. எவ்ளோ பேசியும் கொஞ்சம் கூட அசையல. கண்ணை மூடி படுத்துட்டாங்க. இப்ப திடீர்னு நெஞ்சு வலிக்கிதுனு சொல்லிட்டு, மயங்கி விழுந்துட்டாங்க."

சித்தார்த் கூறியதைக் கேட்டு கை கட்டி, தலை கவிழ்த்து மௌனமாய் நின்றவன் நெஞ்சம், சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து நின்றது.

அவனது வாழ்க்கையின் விருப்பங்களை எல்லாம், அவன் மனம் அறிந்து தந்தையை எதிர்த்து போராடி, அவனுக்கான பாதையை வகுத்து கொடுத்தவரின் இந்த நிலை, தன்னால் தான் என்று எதிரில் இருந்த அந்த சிகப்பு விளக்கு, அவனுக்கு நினைவு படுத்திக்கொண்டே கொன்றது.

வேதனை சூழ்ந்த இதயத்தில், சகோதரன் வார்த்தைகள் வேறு ஊசியாய் நெஞ்சத்தில் இறங்கியது.

"எதுக்குடா இங்க நிக்கிற? உனக்கு தான் அவங்க இங்க இருக்குறதே புடிக்கலல... எவ்ளோ பெரிய வார்த்தை பேசுற, அவங்க இல்லனா இந்நேரம் உனக்கு புடிக்காத இந்த பிஸ்னஸ் தான் பாத்துட்டு இருந்துருப்ப."

இன்னமும் தலை உயர்த்தாமல் நின்ற அஸ்வினைக் கடந்து, அப்பொழுது வெளியே வந்த மருத்துவரை நெருங்கி ஓடினான்.

"மைல்ட் அட்டாக் மாதிரி இருக்கு. இப்ப அவங்க ஓகே தான், பட் ரொம்ப கேர்ஃபுல்லா பாத்துக்கோங்க." குடும்பத்தினர் முகமே செத்துப் போனது. ராகவ்வுக்கு தன்னுடைய அடித்தளமே ஆட்டம் கண்ட உணர்வு.

மதியை பார்க்க அனுமதி கிடைக்க, உள்ளே சென்றவர்களை, மிகவும் சோர்ந்து, கண்கள் சொருக படுத்திருந்த மதியின் தோற்றம் பெரிதும் கலங்கடித்தது. ராகவ் மனைவியின் கையை எடுத்து கன்னத்தோடு அழுத்தி கண் மூடி அமர்ந்து விட்டார்.

அந்த அறையில் பெரும் அமைதியே நிலவ, சில நிமிடங்களில் கண் விழித்த அன்னையின் அருகே, தரையில் மண்டியிட்டு வாய் விட்டு அழுதுவிட்டான் சித்தார்த்.

"உங்களுக்கு என்ன ம்மா, லட்சுமி ஆன்ட்டி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும்ல? நான் பண்ணிக்கிறேன்." என்றான் அன்னையை மட்டும் மனதினில் நிறுத்தி. தலை நிமிராமல் சகோதரன் வார்த்தையைக் கேட்ட, அஸ்வினின் சித்தம் பெரிதும் அடி வாங்கியது.

அவனுக்கு தெரியுமே, சகோதரனின் காதலைப் பற்றி. மூன்று வருடங்களுக்கு மேல் காதலை பொத்தி பொத்தி வளர்க்கிறான். ஏன், இவன் தோளில் சாய்ந்து, மனம் கலங்கி அழுத நாளின் நினைவு இன்னமும் நினைவிருக்கிறது.

"தம்பி..." உணர்ச்சியில், குரல் கமறி வந்த அன்னையின் வேதனை தாளாதவன்,

"எனக்கு சம்மதம் ம்மா." இறங்கி வந்த அவன் குரல், அந்த அமைதியான அறையிலும் அனைவரது செவிகளையும் அடைந்தது.

அதிர்ந்து மூவரும் அவனைப் பார்க்க, வந்ததில் இருந்து இப்பொழுது தான் விழி உயர்த்தி குற்ற உணர்ச்சியோடு அன்னையைப் பார்த்தான். தொண்டை அடைத்தது, கண்களில் உயிர்ப்பில்லாமல் பார்க்கும் அன்னையை நோக்கவே.

சிரமப்பட்டு வார்த்தைகளை உருவாக்கினான், "நீங்க சொல்ற... பொண்ணை... நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்..."

"கடமைக்கும் செண்டிமெண்ட்டுக்கும் மயங்கி, நீ எடுக்குற முடிவால, ஒரு பொண்ணோட வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல." அவனைத் திரும்பி பார்க்காமல் கோவத்தைக் காட்டினார் ராகவ்.

அன்னையிடம் வந்தவன், அவர் பாதங்களுக்கு நெருக்கமாக அமர்ந்து அவரது காலைப் பிடித்துக் கொண்டான், "என் அம்மாவுக்கு தெரியும், அவங்க பையனை பத்தி. அவங்க ஃபிரண்ட் பொண்ணை தவர, இனி அவங்க பையன் வாழ்க்கைல யாருக்கும் இடம் குடுக்க மாட்டான்னு..."

தலையை அவர் பாதத்தில் அழுத்தி வைத்து, கண்ணீர் துடைத்தவன் அவர் முகம் பார்த்து, "நம்புறீங்க தான ம்மா?" பத்து வயது சிறுவனாய் இருந்த பொழுது, மன்னிப்பு வேண்டும் சிறுவனாய்  அஸ்வின் தெரிந்தான்.

விழிகளில் நீர் படலம் உருவாக, துடித்த இதழ்களில் சிரிப்பை படரவிட்டு, 'ஆமாம்' என தலை அசைத்தார் அந்த அன்னை.

மதிவர்தினியை சுற்றி அவர் மக்கள் அனைவரும் உணர்ச்சி மிகுதியில் அமர்ந்திருக்க, அந்த சூழலை மிருதுவாக்க கதவைப் படாரென திறந்து உள்ளே வந்த ஆரோஹி,

"என்ன ஃபேமிலி மட்டும் தான் அலவ்டாம்ல? அப்போ நான் யாராம்? என்ன ஆன்ட்டி, நல்ல ஹாஸ்பிடல் பாத்து சேர மாட்டிங்களா? இங்க எல்லாம் காட்டானுங்களா இருக்கானுங்க. லூசு பயலுக..."

தொடர்ந்து உள்ளே அனுமதிக்காமல் அவள் கையைப் பிடித்து வெளியேற்றுவதில் குறியாய் இருந்த, அந்த வார்ட் பாயின் கையை உதறியவள் அவனை தீயாய் முறைக்க, மீண்டும் அவளைப் பிடித்து வெளியே நிறுத்தும் வேலையைத் தீவிரமாய் பார்த்தான் அவன்.

நால்வரின் பார்வையும் அவளை அதிர்ச்சியோடு பார்க்க, முதலில் சுதாரித்த மதியின் உடல் சோர்வெல்லாம் எங்கு மறைந்ததோ, "டேய்! அவளை விடுடா... அவ என் மருமக!"

சிந்தாமல் சிதறாமல் திருமண தகவலை, மணமக்கள் அல்லாது கணவனுக்கும் மருமகளை அறிமுகப்படுத்தி விட்டார்.

இதில் அப்பொழுது தான் அவர் பேசுவதன் அர்த்தம் புரியாமல் விழித்த ஆரோஹி, அஸ்வினைப் பார்த்ததும் உறைந்துவிட, அவளை விட அவன் விக்கித்து நின்றான்.

***

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro