Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கர்ப்பம்(Pregnant) - Part 1/2

"உனக்கு தான் work from home பண்ண முடியும்ல. நீ போய் ஹாஸ்பிட்டல்ல தங்குனா என்ன?" அருண் பைக் சாவியை தன் பேண்ட் பாக்கெட் என்னும் குடௌனில்(godown) தேடிக்கொண்டே போனில் கேட்டான்.

"நீ போய் பாரு. பொண்ணு நான் எப்படி நைட் ஹாஸ்பிட்டல்ல தங்க முடியும்?"

"ஆமா இதுக்கு மட்டும் பொண்ணுன்னு சொல்லிட்டு வந்துரு. வேலை deadline, friend engagement பார்ட்டி நு நைட் முழுக்க வெளிய இருக்கும்போது பொண்ணுன்னு தோனல," அருணுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. எனக்கு ஹாஸ்பிட்டல் போக பிடிக்கல. வேணும்னா காலைல டிஸ்சார்ஜ் வேலைய நான் பார்த்துக்குறேன். நீ இப்போ நைட் கு போ," அருணின் தங்கை பிடிவாதமாய் முடிவுக்கு வந்தாள்.

"சரி வை!" எரிச்சலில் போனை குடௌனில் வைத்துவிட்டு பைக்கை ஆல்-வெல் மருத்துவமனைக்கு ஓட்டினான் அருண். 

மணி ஆறு ஆகியிருந்தது. ஆபீஸிலிருந்து வீட்டுக்கு பறக்கும் கூட்டத்துக்கு முன் பைக்கை எடுத்ததால் டிராபிக் கம்மியாக இருந்த சாலையில் அவசரமாய் பறந்தான் அருண். காலையில் அருண் சட்டையை அயர்ன்(iron) செய்யும்போதே அம்மாவின் ஆஸ்த்மா(asthma) நேற்றிரவிலிருந்து மோசமாகுவதால் அம்மாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச்செல்வதாக அப்பா சொன்னார். அப்பா ரிட்டயர் ஆன கவர்மண்ட் கிளர்க். 

"நானும் கூட வரவா?" அவர் வேண்டாம் என சொல்லுவார் என்ற எதிர்பார்ப்புடன் அருண் கேட்க அப்பாவும் தானே இதைப் பார்த்துக்கொள்வதாக சொன்னார். காலையில் மருத்துவமனை சென்று பின் மதிய உணவை பொட்டலம் மடித்து வீட்டுக்கு பகல் ஒரு மணிக்குள் வந்துவிடுவதாக தான் திட்டம். ஆனால் அங்கு சென்றபோது அம்மாவுக்கு மூச்சு திணறல் வர general ward இல் observationகு அட்மிட் செய்து விட்டனர். ICU இல்லை ஆயினும் முச்சு திணறலை அலட்சியமாக டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என மருத்துவமனை பயம் காட்ட அருணும் அவ்விருவரையும் ward யிலேயே மருத்துவர்கள் சொன்னது போல் தங்க சொன்னான். அம்மா ஆகிட்டே.

அம்மாவிடம் போனில் வீடியோ கால் பேசியிருந்தான் அருண். வீட்டு வேலையிலிருந்து ஓய்வெடுப்பது போல் ஜாலியாய் பெட் இல் சாய்ந்திருந்தாள். பணம் அதிகமாகுமா என இருமுறை கேட்டாள். ஒரு நைட் கு ஒன்னும் பெருசா வராது என அருண் சமாதானம் சொல்லியிருந்தான். எல்லோருக்கும் இரவு உணவு பார்ஸல் பண்ணி கொண்டுவருவதற்குள் மணி எட்டாகியிருந்தது. அப்பாவிடம் அவருக்கும் தங்கைக்குமான உணவை கொடுத்துவிட்டு அவரை ஆட்டோவில் ஏற்றி பின் நாற்காலி ஒன்றை பக்கத்து அறையிலிருந்து திருடி அம்மாவின் அருகில் போட்டு அமர்வதற்குள் வேர்த்து கொட்டிவிட்டது அருணுக்கு.

"சாப்பிடுறியா மா? டாக்டர் என்ன சொன்னாங்க?"

"எனக்கு ஆஸ்த்மா பல வருஷமா இருக்கு. இதுலாம் சகஜம் நு சொன்னேன். கேட்கல. காச புடுங்கவே அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க."

"சரி. வந்தாச்சு, அட்மிட் ஆகியாச்சு. இதுக்கு பர்மனெண்ட் ஆ ஒரு பதில் கேட்போம் டாக்டர் கிட்ட."

"ஆமா. நானும் அதான் யோசிச்சேன். பின்ன சும்மாவா இங்க படுத்துக்கிடக்குறது? ஒரு பெரிய டாக்டர் பார்த்துட்டு டெஸ்ட் லாம் எழுதி கொடுத்தாரு. இன்னொரு சின்ன டாக்டர் எல்லா டெஸ்ட் உம் எங்க எடுக்கனும்னு சொன்னுச்சு. காலைல பெரிய டாக்டரை பார்த்துட்டு வீட்டுக்கு போய்டலாமாம்."

"ம்ம்.. இப்போ சாப்பிடுறியா?" அருணுக்கும் பசித்தது.

"இல்ல டா. டாக்டர் கிட்ட கேட்டுட்டு சாப்டுவோம். வேற எதாவது டெஸ்ட் எடுக்கனும்னா?"

"அதான் எல்லாம் எடுத்துட்டியே. சாப்டுமா. 8 மணி ஆச்சு."

"போய் கேளு டா. அந்த பொண்ணு தான் சொன்னுச்சு. என்ன வேணும்னாலும் என் கிட்ட தயங்காம கேளுங்க, பயப்படாதீங்க நு."

"எந்த பொண்ணு?"

"அதான் அந்த டாக்டர் பொண்ணு. எல்லா டெஸ்ட் உம் எங்க எடுக்கிறது நு எழுதிகொடுத்துச்சு. எல்லா கேள்விக்கும் ரொம்ப நேரம் நின்னு பதில் சொன்னுச்சு. பெரிய டாக்டர் கொஞ்ச நேரம் தான் பார்த்தார். இந்த பொண்ணு தான் வார்ட் ல எல்லா பேஷண்ட் ஐயும்  பார்த்துச்சு. நான் நைட் முழுக்க இந்த வார்ட் ல தான் இருப்பேன், பயப்படாதீங்க நு சொன்னுச்சு"

"இதுக்குளாமா டாக்டர் கிட்ட கேப்பாங்க. நீ பட்டினியா இருக்காம சாப்டு மா."

" அந்த பொண்ணு ஒன்னு நினைச்சுக்காது. போய்  கேளு."

அம்மா விடுவதாய் இல்லை என அறிந்த அருண் எழுந்து அம்மா காட்டிய திசையில் நடந்தான். அங்கு ward deskஇல் மூன்று பெண்கள் அமர்ந்திருந்தனர். இருவர் யூனிபர்ம்(uniform) இல் இருக்க ஒருவர் மட்டும் காட்டன் சுடிதாரில் கம்பியூட்டரில் டைப் செய்துக்கொண்டிருந்தார்.

"டாக்டர்?"

"ஹா.. சொல்லுங்க.." சுடிதார் அணிந்த பெண் நிமிர்ந்தார்.

அருணுக்கு தூக்கிவாரிப்போட்டது. சஞ்சனாவே தான்.

"அருண்! என்ன இங்க? பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு!"

அவளைப் பார்த்து சரியாய் ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. குண்டு கண்கள், அழகான புன்னகை, பாதி இட்லியை முழுங்காமல் வைத்திருந்த இரு கன்னம், சுமாரான முகம். ஆனால் முதல், முன்னாள் காதலி எப்பொழுதும் கண்ணுக்கு பேரழகியாகவே தெரிவாள். அவன் வாழ்க்கையில் வந்த ஒரே ஒரு காதல், ஒரே ஒரு முறை கிடைத்த பெண் வாசனை, ஒரே ஒரு முறைக் கிட்டிய அதிர்ஷ்டம், பெண்ணின் கைக் கோர்க்க கிடைத்த ஒரே வாய்ப்பு, முத்தமிட கிட்டிய இரு கன்னம் ஒரே ஓர் உதடு. மறக்க முடியுமா. 

"ஹே சஞ்சு. எப்படி இருக்க?"

"நான் நல்லா இருக்கேன். இத்தன வருஷம் கழிச்சு அதுவும் ஹாஸ்பிட்டல்ல பார்ப்பேன்னு எதிர்பார்க்கல. ஆமால்ல, என்னை வேற எங்க பார்க்க முடியும்? ஒ.. தெரிஞ்சவங்க யாராவது அட்மிட் ஆகி இருக்காங்களா?"

சஞ்சனாவுக்கு அம்மாவைத் தெரியாது. எங்கள் காதல் வீடு வரைக்கும் வரவில்லை, அதற்கு முன்னரே விலகிவிட்டோம். அம்மாவிடம் அவளின் போட்டோவை போனில் காட்டியிருக்கிறேன் அதுவும் தோழி என்றே. சஞ்சனாவுக்கும் அம்மா போட்டோவில் மட்டுமே அறிமுகம். இருவரும் இப்பொழுது இங்கு பேசிக்கொள்வதும் அம்மா சஞ்சனாவை ரொம்ப நல்ல பொண்ணு என சில நிமிடங்களுக்கு முன் சர்டிபிகேட்(certificate) கொடுத்ததும் நினைவுக்கு வர சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை அருணுக்கு. சிரித்தான்.

"அம்மா அட்மிட் ஆகி இருக்காங்க."

"அம்மாவா? பெயர் என்ன? எதுக்கு அட்மிட்?" 

"பெயர் மீனா. ஆஸ்த்மாவுக்கு."

"ஓ.. ஒகே ஒகே. Actually நான் தான் அவங்கள பார்த்தேன். எப்படி இருக்காங்க?Actually, உன்னவிட அவங்கள treat பண்ண எனக்கு தான் அவங்க எப்படி இருக்காங்கன்னு தெரியும். இப்போ எதாவது change ஆகி இருக்கா?"

மருத்துவ வேலைக்கான எல்லா பொருத்தங்களும் சஞ்சனாவிடம் அமைந்திருந்தது. வலிக்குதா என்பது அவள் என்னிடம் பேசிய முதல் வார்த்தை.

காலேஜ்காக புட்பால்(football) விளையாடிய நேரம். sports injuries நிகழ்வது இயல்பு ஆனால் அதற்கான பிஸியோ(physiotherapy) செலவைக் குறைக்க அங்கிருந்த teaching hospital இல் பிஸியோ பார்க்குமாறு கோச்(coach) சொல்லியிருந்தார். (teaching hospital = hospital associated with university). சஞ்சனா பிஸியோ இரண்டாம் ஆண்டு மாணவி.

சஞ்சனா என் காலை நகர்த்த அவளின் professor கழுகு போல் எங்களையே கவனித்தார், ஆம் பஞ்சையும் நெருப்பையும் தள்ளியே வைக்க வேண்டுமல்லவா. அந்த ஒரு மணி நேரத்தில் professor ஆர்டர் கொடுக்க சஞ்சனா செய்ய நான் ஸ்ஸ்ஸ் என வலியில் சிணுங்க அதற்கு அவளோ வலிக்குதா என கேட்டாள். பெண் கேட்பதாளோ அல்லது தெரியாதவர் கேட்பதாளோ உடனே இல்லை என பதில் சொல்ல அவள் சிரித்தாள். வலியில் முகம் முழுக்க வியர்த்திருந்தது ஆயினும் இல்லை என தம் கட்டினேன்.

அதன் பின் டீம் இல் மற்றவர்கள் பிஸியோவுக்கு செல்ல நேர்ந்தால் அவர்களைக் கூட்டிச் செல்வதென எல்லா சந்தர்பத்தையும் பயன்படுத்தி அவளைக் காண முற்பட்டேன். அழகா இருக்கா என உதித்த முதல் எண்ணம் பின் அறிவாய் இருக்கிறாள், கலகலவென பேசுகிறாள் என மாறியது. அருண் பல நேரம் மௌனமாய் இருந்தால் பேசு என அவனை நச்சரிக்காது அம்மௌனங்களை அவளே நிரப்புவாள். அவன் ஹாஸ்பிட்டல் வரும்பொழுதெல்லாம் அவன் சாப்பிட எதாவது நீட்டுவாள், புளியோதரை, சுண்டல், சாக்லெட், அதிரசம் என எதாவது அவள் கரத்தில் ஒளிந்திருக்கும். இல்லையெனில் காண்டீனுக்கு அழைத்துச் சென்று அவன் முன் டீயை வைத்து  உட்காருவாள்.  முகம் கோணுது என நக்கலாய் சொல்வாள் ஆனால் அவன் விருப்பம் இன்றி ஆராய மாட்டாள், கேள்வி கேட்க மாட்டாள்.  நல்ல தோழியானாள். பின் சுற்றியிருந்த நண்பர்கள் ஜோடியாய் பைக் இல் சுற்ற, படம் பார்க்க அந்த ஆசை அவனுக்குள்ளும் தோன்றியது. 

சஞ்சனாவிடம் சொல்லிவிட்டான், "சஞ்சு, எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. நமக்குள்ள நல்ல புரிதல் இருக்கு. இத நாம அடுத்த லெவல் கு கொண்டு போகலாமே?"

 "உனக்கு என்னை ரொம்ப புடிச்சிருக்கா?" கண்களில் சிரிப்பும் சில்மிஷமும் கலந்திருந்தது.

அருண் சிரித்தான், "ஆமாம். புடிச்சிருக்கு."

"எப்போ புடிச்சது?"

"முதல் தடவ பார்த்தப்போவே!"

"ஆனா எனக்கு லவ் லாம் ஒன்னும் தோணலையே அருண். சும்மா நார்மலா தான் இருக்கு."

"சஞ்சு நீயே சொல்ற, you feel very comfortable and secure with me. இதுக்கு மேல என்ன வேணும்? சரின்னு சொல்லு."

சஞ்சனா யோசித்தாள், "ரிலேஷன்ஷிப் உள்ள போறதுக்கு லவ் வேணும்ல?"

"இதுவும் லவ் தான். நிறைய படம் பார்த்து கெட்டுபோய்ட்ட நீ," அருண் கிண்டலடித்தான்.

"ஏய்ய்!"

" ரெண்டு பேர் சேர்ந்து இருக்க இந்த அன்பும் புரிதலும் தாண்டி என்ன வேணும்? உனக்கு என்னை புடிச்சிருக்கா இல்லையா நு மட்டும் சொல்லு."

"புடிச்சிருக்கு ஆனா நீ சொல்ற பார்த்தப்போவே லவ்வு.."

"I love you. Do you love me?"

இப்பொழுது சஞ்சனாவுக்கு திக்குமுக்காடியது. உன்னை பிடிக்கும் என ஓர் ஆண் வெளிப்படையாய் சொல்லும்போது அவளுக்குள்ளும் ஒருவித electricity பாய்ந்தது. அதானே, அருணுக்கு என்ன குறை என சஞ்சனாவின் மூளை அவளைத் திட்டியது.

"ம்ம்ம்" அவள் தலை ஆட்டினாள்.

"கேட்கல சஞ்சு"

"லூசு! அதுலாம் ஒன்னும் சொல்ல முடியாது. football practice கு நேரம் ஆச்சு கிளம்பு."

பிஸியோ படித்த சஞ்சனா எப்படி டாக்டர் ஆகினால் என கேள்வி வருவது நியாயம் தான்.

மருத்துவப் படிப்பில் தான் அவளுக்கு நாட்டம் ஆனால் திடீரென நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால் நிலை தடுமாறியவள் பிஸியோவில் சேர்ந்தாள். நடுத்தர குடும்பம் என்பதால் அதிக பணம் கொடுத்து மருத்துவ சீட் வாங்க விருப்பம் இல்லை வசதியும் இல்லை. அதன் பின் சம்மர் லீவ் இல் நீட் கு படித்து நல்ல மதிப்பெண் வாங்கி மெரிட்(merit) இல் மருத்துவ சீட் வர, இரண்டாம் ஆண்டு பிஸியோ முடிந்த பின் அதே கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தாள். இரு வருடங்கள் பிஸியோ படித்தது வேஸ்ட் தானே என கேட்டப்போது அவளின் பதில், "எந்த கட்டத்திலும் படிப்பு வேஸ்ட் ஆகாது அருண்." உயர்ந்து நின்றாள்.

நல்ல நட்பை நான் தான் அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றேன். அது நான் செய்த தவறு. எங்களிடையில் பொருத்தமும் நெருக்கமும் நட்பைத் தாண்டாது என நாங்கள் புரிந்துக்கொள்ளவில்லை. நிறைய சுற்றினோம். முன்பு விட நிறைய பேசினோம். நிறைய சிரித்தோம். கொஞ்சம் சண்டை போட்டோம் ஆனால் அச்சண்டைகள் அந்னாளின் இரவைத் தாண்டாது, அதற்குள் சமாதானமாகிவிடுவோம்.

பின் என் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கடைசி செமஸ்டர். அப்போது துவங்கியது எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள்.

"உனக்கு நல்ல வேலை கிடைச்சு அப்புறம் எங்க வீட்ல உன்ன அறிமுகப்படுத்தி நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணி ..ப்பா! எவ்ளோ வேலை!" பெருமூச்சு விட்டாள் சஞ்சனா.

"அதெல்லாம் வரும்போது கவனிக்கலாம்."

"உனக்கு திறமை இருக்கு. நீ சாதிச்சிடுவ அருண்."

அதன் பின் இறுதியாண்டில் இதைப் பற்றி அதிகம் பேசினாள். நிறைய உற்சாகம் கொடுத்தாள். நிறைய யோசனை சொன்னாள்.

"படிச்சு முடிச்சதும் என்ன பண்ண போற?"

"எவனாவது சொந்தமா சின்னதா ஆடிட்டிங்க்(auditing) பண்ணிட்டு இருப்பான். அவன் கிட்ட ஜூனியரா சேர்ந்துட்டு தொழில் கத்துக்கிட்டு அப்புறம் அவன் மண்டைய போட்டதும் அவன் customersஐயும் பிஸ்னஸையும் நானே நடத்தி அப்படியே என் பொழப்ப ஓட்டலாம் நு இருக்கேன்."

"ஹ்ம்ம் அது பண்ணலாம். ஆனா அவரோட மகனுங்க மாங்காய் பறிச்சுட்டு இருப்பாங்க நீ அவரோட customersகு வலை விரிக்கும்போது. இப்போலாம் நிறைய பெரிய ஐடி கம்பனிகளுக்கு internal audit team தேவையாம், அங்க டிரை பண்ணலாம்."

"பார்ப்போம். படிப்பு இருக்கு." படிப்பு இருந்தது ஆனால் அதை வைத்து வேலை வாங்க நான் படப் போகும் பாட்டை அப்போது அறியவில்லை.

எங்கள் இருவர் இடையில் சண்டை நடந்ததாய் நியாபகம் இல்லை. ஊடல் பின் கூடல் எங்களை நெருக்கமாக்கியிருக்கும். ஆனால் சண்டை போடாத நாங்கள் என்னவோ எண்ணையும் தண்ணீருமாய் ஒட்டியும் கலக்காமலும் இருந்தோம். சாப்பிடுவது, தூங்குவது, பாத்ரூம் போவது போல் அவளுக்கு போன் செய்வது, வெள்ளிக்கிழமை ஆகினால் restaurant இல் சாப்பிடுவது அவ்வப்போது படம், சினிமா இன்னும் போர்(bore) அடித்தால் நண்பர்களுடன் double date ஆக போய் சாப்பிடுவது என நாட்களை நகர்த்தினோம். ஆயினும் comfort எனும் போர்வையிலிருந்து வெளிவர இருவருக்கும் சக்தி இல்லை. 

பின் ஒரு நாள் பிரிந்தோம். எதனால் சண்டை துவங்கியது என நியாபகம் இல்லை ஆனால் பல மாதங்கள் இதையே அவள் மனம் அசைப்போட்டுக்கொண்டிருந்தது என புரிந்தது.

"நம்ம எதிர்காலத்துல எனக்கு நம்பிக்கை இல்லை," என சொன்னாள். பின், "இவ்ளோ தான் காதலா? இத வச்சு தான் வாழ்நாள் முழுக்க கடத்தனுமா? சப்புன்னு இருக்கு," என்றாள். "எங்க வீட்டு ஆளுங்க வேற மாதிரி. எங்கம்மாவுக்கு உன்ன சுத்தமா பிடிக்காது. கல்யாணத்துக்கு பிறகு உன்னை பத்தி என்கிட்ட குறை சொல்லிட்டே இருப்பாங்க, அப்புறம் நானும் உன்ன நெகடிவ் ஆ பார்க்க ஆரம்பிச்சிருவேன்," என இவ்வளவு நாள் தெரியாத அம்மா-அப்பா இப்பொழுது தெரிந்தனர். "இல்ல அருண், நான் அவங்கள எதிர்த்து கல்யாணம் பண்ண போறேன்னா நான் போராடுற விஷயம் வொர்த் ஆ இருக்கனும். இதற்கு தான் நான் என் அம்மா அப்பா கிட்ட போராடனுமா நு தோனுது.  கல்யாணம் பண்ணிட்டு வருத்தப்படுறதுக்கு நான் தனியாவே இருந்துட்டு போயிடுறேன் " என்றாள். "நல்ல நட்பை ஆர்வ கோளாறுல சிதைச்சிட்டோமோ?" என கேட்டாள்.

இறுதியில், " நான் உன்ன இந்த ரெண்டு வருஷம் லவ் பண்ணேனா இல்லையா? இது லவ்வா இல்லையா?" என கேட்டுவிட்டாள்.

அவளும் சரியாக தான் கேட்டாள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்து யாரோ எழுப்பியது போல் விழித்துக்கொண்டேன். மேகத்தில் இனிமையாய் மிதந்த நாங்கள் பாறையில் விழும் மழையாய் உடைந்து சிதறினோம். 

அன்று பிரியவில்லை. பிரிவு என்பது வாடும் செடி போல. கொஞ்சம் கொஞ்சமாய் பூ உதிர்ந்து, இலை நிறம் மாறி, வேர் மடிந்து நீளும் மரணம். அவ்வப்போது சில மணித்துளி பட்டால் மடியும் செடியில் ஓர் இலை பூக்கும் ஆயினும் அதுவும் பூத்த வேகத்தில் சரியும். அவ்வப்போது அவளுக்கு என் எண்ணம் வர போன் செய்வாள், விசாரிப்பாள்,  நண்பர்களோடு வெளியே போ என சொல்வாள், தனியாய் இருக்காதே என எச்சரிப்பாள், மிஸ் பண்ணுறேன் என சொல்வாள், நான் செஞ்சது சரிதானா என என்னிடமே கேட்பாள்.

"சரியான முடிவு தான் எடுத்திருக்க சஞ்சு," என நானே அவளை சமாதானப்படுத்துவேன்.

பின் அவள் படிப்பில் மூழ்க நான் வேலை தேடும் வேட்கையில் மூழ இருவரும் பேசுவது குறைந்து மெல்ல முழுமையாய் பிரிந்திருந்தோம்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro