Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Sudum Nilavu Sudatha Suriyan - 8

சுடும் நிலவு சுடாத சூரியன் – 8
அவன் கதவருகில் நிற்பதை பார்த்ததும் மனதில் பயம் தோன்றினாலும், காட்டிக் கொள்ளாமல், "காலில் அடி.. பட்டிருந்தது. இப்ப.. நடக்க முடியுதானு.. பார்த்தேன்.." என திணறி சொல்லி முடிக்கும் முன்பு அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

கதவில் சாய்ந்து நின்றவன், நிமிர்ந்து அவளருகே வந்தான். அவன் அருகே வருவதை பார்த்ததும், ஸம்யுவிற்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது. தான் சொன்னது அவளுக்கே நம்புவதை போல இல்லை. இவன் இப்போது என்னை தரதரவென்று உள்ளே இழுத்துச் செல்ல போகிறான் என்று நினைத்தாள். இல்லை வேறு ஏதாவது என்று நினைக்கும் போதே கண்கள் இருட்டுவது போலிருந்தது.

அவளருகே வந்தவன், தனது ரப்பர் செருப்பை கழட்டி அவளை பார்த்து அணிந்து கொள்ள செய்கை செய்தான். அவளுக்கு முதலில் அவன் செய்கை செய்தது புரியவில்லை, ஆனால் புரிந்தவுடன் மனதில் அப்பாடா என்று நிம்மதி வந்தது.

தயக்கத்துடன் அவனது செருப்பை அணிந்தவள், "தாங்க்ஸ்" என்றாள்.
அவன் அதை காதில் வாங்காமல், அவளை நடக்கும்படி செய்கை செய்தான்.
எதிரே தெரிந்த காட்டுப் பாதையில் அவள் மெதுவாக நடக்க, அவனும் சுற்றிலும் பார்த்தபடி நடந்து வந்தான்.

இவனருகே இருக்கும் போது தப்பிப்பது என்பது நடக்கவே முடியாத ஒன்று என தெரிந்தாலும், அந்த வீட்டிற்குள் அடைந்து இருப்பதை விட இது நன்றாக இருப்பதாக தோன்றியது. காட்டுக்குள் இளங்காலையில் நடப்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது.

"உங்க பெயர் என்ன?" என தயங்கியபடி அவள் கேட்டும், அவன் பதில் எதுவும் சொல்லாமல் நடந்தபடி இருந்தான்.

"என்னை எதுக்காக கடத்தி வைச்சிருக்கீங்க?" என சற்று சத்தமாக கேட்டும் அவன் பார்வை இவளை நோக்கி திரும்பாமல் இருப்பதை உணர்ந்தாள்.

அப்போது தான் அவளுக்கு ஒன்று மூளையில் உறைத்தது. அவனை பார்த்தது முதல் கடந்த மூன்று நாட்களாக அவன் ஒரு முறை கூட வாயை திறந்து பேசவில்லை. ஒல்லியான பையனும் அவனுடன் பேசும் போது, எதிரே நின்று வாயை மட்டும் மெதுவாக அசைப்பதை நினைவு கூர்ந்தாள்.

திடமான உடலை அவனுக்குக் கொடுத்த இறைவன், பேசும் திறனையும், கேட்கும் திறனையும் அவனுக்குக் கொடுக்காததை நினைத்து ஒரு நிமிடம் வருந்தினாள். ஐம்புலன்களும் நல்ல நிலையில் ஒருவருக்கு இருப்பது, இறைவன் கொடுக்கும் மிக பெரிய வரம் என நினைத்தாள். தன்னிலை உணர்ந்தவள், இப்படி ஒரு குறை அவனுக்கு இருந்தும், ஒரு பெண்ணை கடத்தி வந்த பெருங்குற்றத்தை எப்படி அவனால் செய்ய முடிந்தது என நினைத்தாள். ஒரு நிமிடம் அவன் மேல் இரக்கப்பட்ட தன்னை நொந்து கொண்டாள். அவனிடம் இருக்கும் குறைப்பாடே, இந்த குற்றத்தை அவன் செய்ய காரணமாக இருக்குமோ என யோசித்தாள்.

சற்று தொலைவு நடந்ததில் மரங்களின் அடர்த்தி அதிகமாகி கொண்டே வந்தன. பறவைகளின் சிறகுகள் அடித்துப் பறக்கும் சத்தமும், அதன் குரலும் இணைந்து கேட்டது. மரங்களின் நடுவே காற்று புகுந்து செல்லும் சத்தமும் மெல்லிய ரீங்காரமாய கேட்டது. நடுநடுவே விலங்குகளின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.

அவர்கள் சென்ற பாதை வளைந்து நெளிந்து செல்ல, சூரியனின் கதிர்கள் மரங்களின் இடையில் இருக்கும் வெளியில் ஊசிகளாய் கீழிறங்கின. நிழலும், வெளிச்சமும் மாறி மாறி தெரிய, எதிரே கண்கள் முன் விரிந்த காட்சியை மயக்கின. சுற்றிலும் தெரிந்த இயற்கை காட்சியை பார்த்த படி வந்தவள், கீழே தெரிந்த பள்ளதாக்கை பார்த்த பின்பே, தான் ஏதோ ஒரு மலையின் மேலிருப்பதை உணர்ந்தாள்.

காற்றில் பிராணவாயு செறிந்திருந்ததை உணர முடிந்தது. ஒரு மைல் அளவு நடந்தும் தனக்கு சோர்வில்லாமல் இருப்பதையும் உணர்ந்தாள். காற்றில் கரியமில வாயு குறைந்திருப்பதே இதற்கு காரணம் என்பது புரிந்தது.

நகரஙகளில் கரியமில வாயு நிறைந்திருப்பதே, சீக்கிரம் சோர்வு அடைவதற்கும், நோய் அதிகரிப்பதற்கு காரணம் என்பதை உணர்ந்தாள். ஜப்பானில் இப்போது அதிகரித்து வரும் 'ஃபாரஸ்ட் வாக்' பற்றி படித்ததை நினைவு கூர்ந்தாள். மனதும், உடலும் புத்துணர்வு கொள்வதற்கு வாரம் ஒரு முறை இதை பரிந்துரைப்பது நல்லது என்று அவளுக்குத் தோன்றியது.

சிறிது தூரம் சென்ற பின்பே அவன் தன்னுடன் வராமல், பின் தங்கி நிற்பதை உணர்ந்தாள். அவன் எதிரே தெரிந்த எதையோ பார்த்த திகைத்து நிற்பதை கண்டு, தன் பார்வையை திருப்பினாள்.

காட்டு பாதையின் வளைவில் ஒரு பெரிய கருப்பு யானை நின்று கொண்டிருந்தது. அதன் சின்ன கண்களும், கூர்மையான வெண்ணிற தந்தங்களும், பெரிய தும்பிக்கையும் பார்ப்பதற்கு திகிலாக இருந்தன. தனியே இருக்கும் ஒற்றை யானை ஆபத்தானது என படித்தது ஞாபகம் வர, அதன் பின்னே வேறு யானைகள் தெரிகின்றனவா என எட்டி பார்த்தாள்.

வளைவில் யானை நின்றிருந்ததால், அவள் பார்வை வட்டத்துக்குள் வேறு யானை எதுவும் தென்பட வில்லை. யானை தன் முன்னங்கால்களை கீழே தேய்த்து, தன் பெரிய காதுகளை இருபக்கமும் அசைத்து, தும்பிக்கையை தூக்கி பெரும் சத்தத்துடன் பிளறியது. மரங்களில் இருந்த பறவைகளின் கூக்குரலும், சிறகுகள் படபடத்த சத்தமும் அவளை பயம் கொள்ள வைத்தது.

பயத்துடன் திரும்பி பார்க்க, அவளையும், யானையையும் அவன் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். இருந்த இடத்தை விட்டு அசையாமல் சுற்றிலும் கூர்மையாக பார்த்தபடியே இருந்தான். யானையும் தன் இடத்தை விட்டு அசையாமல் அவர்களை பார்த்தபடி நின்றிருந்தது. கண்களால் அவளை நகராமல் அப்படியே இருக்க சொன்னான்.
உயிர் பயம் என்பதை அப்போது தான் முதன்முறையாக உணர்ந்தாள் ஸம்யுக்தா. அவனை விட தானே யானையின் மிக அருகே இருப்பதை உணர்ந்தாள். யானை முதலில் தன்னையே தாக்கும் என்பதை உணர்ந்தவுடன், உடலில் இதுவரை அறிந்திராத குளிர் பரவியது. அவன் தன்னை நகராமல் இருக்க சொல்வது, தன்னை காத்துக் கொள்ளவே என நினைத்தாள்.

எத்தனையோ முறை வினோதினியும், மித்ரனும் தன்னை கவனமாக இருக்க சொன்னதை நினைத்து பார்த்தாள். எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, ஒரு காட்டு யானைக்கு தான் பலியாக இருப்பதை விதியின் விளையாட்டு என நினைத்தாள்.

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த காட்டு யானை மிக வேகமாக ஒடி வர தொடங்க, பயத்தில் அவள் உறைந்து அப்படியே நின்றாள். மின்னல் வேகத்தில் பின்னாலிருந்து ஒடி வந்தவன், அவள் உணரும் முன்பே, பக்கத்திலிருந்த பள்ளதாக்கில் அவளை வேகமாக பிடித்து தள்ளி விட்டவன், யானையை நோக்கி ஒடினான்.
செங்கூத்தாக இருந்த பள்ளதாக்கில் கீழே சரிந்தவள், வழுக்கிக் கொண்டே சென்றாள். முட்களும் புதர்களும் அவளது உடலை குத்தி கிழிக்க, அவன் தள்ளிய வேகத்தின் விசையால், சரிந்து கொண்டேயிருந்தவள் ஒரு மரத்தின் கீழ் கிளையில் சிக்கி கொண்டாள்.

சரிந்து வரும் போது, அவனது அலறல் குரல் தூரத்தில் கேட்டு மறைந்தது. மனம் ஒரு நொடி அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என நினைத்தாலும், முட்கள் கீரியதாலும், உருண்டு வரும் போது உடலில் பல இடங்களில் அடிபட்டு இருந்ததாலும், அதற்கு மேல் எதையும் யோசிக்க முடியவில்லை.

அவளது ஸல்வாரின் துப்பட்டா உருண்டு வரும் போது, எங்கோ விழுந்திருந்தது. செருப்புகளும் தெறித்து விழுந்திருந்தது. உடை பல இடங்களில் கிழிந்திருந்தது. அவள் சிக்கியிருந்தது, மரத்தின் கீழ் கிளை என்பதால், காலை மரத்தில் இருக்கும் கணுக்களில் வைத்து சரிந்து கீழிறிங்கினாள்.

பாதத்தில் ஏற்கெனவே பட்டிருந்த காயங்களுடன், வேகமாக மண்ணில் சரிந்ததால் தோல் பிரிந்து ரணமாகி இருந்தது. பாதத்தை கீழே வைக்க முடியாமல், மரத்தின் வேரில் சாய்ந்து அமர்ந்தாள்.

உடல் வலியாலும், காயங்களினாலும் கண்களில் நீர் சுரந்தது. ஒரே வாரத்தில் வாழ்க்கை தடம் புரண்டு போனதை நினைத்து நெஞ்சு அடைத்தது. தன்னை ஒரு இளவரசி போல் பாதுகாப்புடன் வளர்த்த தன் தந்தையின் ஞாபகம் வந்தது. வீட்டில் அவளை வினோதினியோ, மித்ரனோ ஒரு சுடுசொல் கூட சொல்ல விடாமல் தன்னை பார்த்துக் கொண்டது ஞாபகம் வந்து கண்களை கரித்தது.

சசி தன்னை விரும்புவதை, வினோதினியிடமோ, மிதரனிடமோ சொல்லாமல் முதன் முதலில் எந்த தயக்கமும் இல்லாமல் தன் தந்தையிடமே சொன்னதை நினைவு கூர்ந்தாள். வசந்தனும், மற்ற தந்தையரை போல் கடிந்து கொள்ளாமல், அவளுக்கு பிடித்திருந்தால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சொன்னதை நினைத்தாள்.
அழகான கவிதையாக இருந்த தன் வாழ்க்கை, இப்படி மாறி போனதை நினைத்து நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. பொங்கி வந்த அழகையை அடக்க முடியாமல், "அப்பா.. அப்பா.." என கதறினாள்.

வினோதினி மேஜை மேல் எடுத்து வைத்திருந்த காலை உணவை, வசந்தன் வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தார். தன் செல்ல மகளுடன் கடைசியாக சாப்பிட்ட காலை உணவை நினைத்தவுடன், கண்களில் அருவியாக நீர் கொட்டியது.

எங்கே இருக்கிறாய் ஸம்யு? எப்படி இருக்கிறாய் நீ? உன்னை எப்போது மீண்டும் பார்ப்பேன்? என பல கேள்விகள் மனதில் தோன்ற சாப்பிட தோன்றாமல் எழுந்து சென்றார்.

அவரை சாப்பிட சொல்ல தோன்றாமல், வினோதினியும் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தார். ஸம்யுவிற்கு எந்த உணவும் சூடாக வேண்டும், அதனாலே அவள் வீட்டிற்கு வந்த பிறகே, அவளுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டே சமைத்து தருவார். இப்போது என் மகள் என்ன சாப்பிட்டாளோ என நினைக்கும் போதே மனதில் இன்னும் பாரம் ஏறியது. சமைக்க பிடிக்காமல் தான் சமைப்பதும், சாப்பிட பிடிக்காமல் அனைவரும் சாப்பிடுவதும், பாதி நாள் சமைத்ததை திறந்து கூட பார்க்காமல், இவர்கள இருவரும் சோர்ந்து போய் மயங்கி தூங்குவதும் வழக்கமாகி விட்டது.

அமிதா தினமும் வீட்டிற்கு வந்து வற்புறுத்தி சாப்பிட வைக்க வில்லையென்றால், இவர்கள் இருவரும் என்றோ மருத்தவமனையில் சேர்ந்திருப்பார்கள்.
சாப்பாட்டு மேஜையிலிருந்து நேராக பூஜையறைக்கு சென்ற வசந்தன், கால்கள் மடங்கி அமர்ந்து, பூஜை மாடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அவர் அருகே வந்தமர்ந்த வினோதினியின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

வழி தெரியாதவர்களுக்கு அந்த இறைவனே வழிகாட்டி என்று நினைத்தவர், தங்கள் மகளை தங்களிடம் திருப்பிக் கொண்டு சேர்த்து வைக்க கண்களில் நீர் வழிய மன்றாடினார். வினோதினியோ தன் கணவரை தேற்ற வழி தெரியாமல், மகமாயிடம் தன் மகளை பத்திரமாக தன்னிடம் உடனடியாக கொண்டு வர வேண்டும், இல்லையென்றால் நீ இருப்பதையே மறுத்து விடுவேன் என மிரட்டினார்.

கஷ்டப்பட்டு தன் கால்களை கீழே ஊன்றியவள், மெதுவாக தன் உடம்பை நிலை நிறுத்தி ஒரு அடி எடுத்து வைத்தாள். நடக்க முடியாமல் காலில் ஏற்பட்ட ரணம் வலிக்க, பல்லை கடித்து வலியை பொறுத்துக் கொண்டு மெதுவாக செடிகளையும், கொடிகளையும், புதர்களையும் விலக்கி நடந்தாள்.

வெளிச்சமாக தெரிந்த ஒரு இடத்தை மெதுவாக கால்களை இழுத்துக் கொண்டு நடந்தாள். சமதளமாக தெரிந்த அந்த இடத்தில், ஒற்றையடி பாதை செல்வதை பார்த்தவுடன் நிம்மதி அடைந்தாள். அடி மேல் அடி வைத்து நடந்தவளின், எதிரே புதர்களை தள்ளி கொண்டு ஒரு காட்டெருமை வந்து நின்றது.

இதயம் ஒரு நொடி நின்று துடிக்க, மூச்சு வெளியே முடியாமல் திணறினாள். உடலில் இருந்த சகதியையெல்லாம் திரட்டி கொண்டு வேகமாக ஒட தொடங்கினாள். அவள் ஒடுவதை பார்த்ததும், அந்த காட்டெருமையும் நாலு கால் பாய்ச்சலில் அவளை துரத்தியது.

கல்மண் தெரியாமல் ஒடியவள், தன்னை இன்னும் குத்தி கிழித்த முட்களையோ, கற்களை பொருட்படுத்தாமல் செடி கொடிகளை தள்ளி கொண்டு வேகமாக ஒடினாள்.
வேகமாக ஒடியவளை விடாமல் எருமையும் துரத்த, எதன் மேலோ வேகமாக இடித்துக் கொண்டு சரிந்து மயங்கி விழுந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro