Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Sudum Nilavu Sudatha Suriyan - 25

சுடும் நிலவு சுடாத சூரியன் – 25

காரில் மெளனமாக வந்த அகிலனை பார்த்து, "அகில், என்ன அப்செட்டாக இருக்கே?" என கேட்டான் மித்ரன்.

"ஈஸியா அந்த ஆள் கிட்டேயிருந்து விஷயத்தை வாங்கியிருக்கலாம். நீயும் அந்த ஃபாரஸ்ட் ஆபிஸரும், தேவையில்லாம ஒரு நாள் தள்ளி போட வைச்சிட்டிங்க" என அலுப்புடன் சொன்னான் அகிலன்.

"அவர் தான் நாளைக்கு வர்றேன் என்று சொன்னாரே? அப்பறம் என்ன?" என கேட்டான் மித்ரன்.

"நாளைக்கு அவர் வரலை என்றால் என்ன செய்யறது? நைட்டே போய் அவரோட ஆஸ்பத்திரியில் உடம்பு சரியில்லை என்று படுத்துக்கிட்டா என்ன செய்வே?" என் கோபமாக கேட்டான் அகிலன்.

"அவரை பார்த்தா அப்படி செய்ய கூடிய ஆள் மாதிரி தெரியலை" என அகிலனை சமாதானம் செய்ய முயன்றான் மித்ரன்.

"இவரும் சக்திவேலோட கூட்டாளியாக தான் இருப்பாரு" என கடுப்புடன் சொன்னான் அகிலன்.

"எனக்கு அப்படி தோணலை அகில், வைத்தியர் பார்க்க வயசானவராக இருக்கார். அவருக்குப் பணமும் தேவையில்லை" என்றான்.

"மித்ரன், நாம் ஏற்கனவே இந்த கடத்தலுக்கும், பணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துட்டோம்" என்றான்.

"செல்வி சொன்னதை வைச்சுப் பார்த்தா, இரண்டு வருஷமா சக்திவேலுக்கும், இவருக்கும் பழக்கம் இருந்திருக்கு. அவன் வந்தா செல்வியை வெளியே அனுப்பிச்சிட்டு ஏதோ பேசறாங்க. ஒரு வேளை இந்த வைத்தியர் ஏதாவது மருந்து கண்டுபிடிச்சு, அதை சோதனை செய்யறதுக்கு சக்திவேல் ஆளுங்களை கடத்திட்டு வருவானோ?" என யோசனையுடன் சொன்னான் அகிலன்.

"அதுக்கு ஏன் சென்னையிலிருந்து சம்யுக்தாவை கடத்திட்டு வர்றனும்? இங்கேயே நிறைய பேர் இருக்காங்களே?" என கேட்டான் மித்ரன்.

"சம்யு, ஏதாவது அரிய இரத்த வகையை சேர்ந்த பொண்ணா?" என கேட்ட அகிலனிடம், "அவளும் நானும் ஒரே பிளட் குரூப் தான். ஏபி பாஸிட்டிவ். உலகத்தில் இருபது சதவீத ஆளுங்க இந்த இரத்த வகையை சேர்ந்தவங்க தான்" என்றான் மித்ரன்.

"மித்ரன், எனக்கு இந்த கேஸில் மண்டை காயுது. சித்தார்த்தை விசாரிக்கலாம் என்றால் அதுவும் முடியலை, வைத்தியரை விசாரிக்கலாம் என்றாலும் முடியலை. கிடைச்ச ஒரே ஆள் ரவி, அவன் என்ன அடிச்சாலும் உண்மையை சொல்ல மாட்டேங்கிறான்" என சலித்த குரலில் சொன்னான் அகிலன்.

"எனக்கு நாளையோட எல்லா விஷயமும் சரியாயிடும் என்று தோணுது" என அமைதியான குரலில் சொன்னான் மித்ரன்.

"என்ன நாளைக்கு பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தின உடனே, அம்மன் பூசாரி மேல் வந்து இது தான் காரணம் என்று சொல்லிடுவாளா?" என கிண்டலாக கேட்டான்.

"அகில், அப்படி கூட இருக்கலாம். ஏதோ நமக்கு தெரியாத கணக்கை சரி செய்ய தான் இப்படி நடக்குது என்று எனக்கு தோணுது. இது தான் என்று சரியாக எனக்குச் சொல்ல தெரியலை" என்றான் மித்ரன்.

"இதுக்கு நீ ஐபிஸ் படிச்சிருக்க வேண்டாம்டா. காலையில் பக்தி சானலில் பிரசங்கம் பண்ண போயிருக்கலாம். உன் பேரை கூட மாத்திக்க வேண்டாம், மித்ரானந்தா, சொல்லும் போதே அப்படியே உடம்பே சிலிர்த்துப் போகுது" என்றான் அகிலன்.

"நான் வேணா சொல்றேன், எழுதி வைச்சுக்கோ, நம்பளோட அறுபதாவது வயசில் நாம ஐபிஸ் படிச்சதுக்கு, பிரசங்கமே பண்ணியிருக்கலாம் என்று தோணும்" என்றான் மித்ரன்.

"உங்கப்பா, உன்னை சத்தியமங்கலத்துக்கு இத்தனை வருஷமா ஏன் கூட்டிட்டு வரலை என்று எனக்கு இப்போ தான் தெரியுது" என நக்கலாக சொன்னான் அகிலன்.

புருவத்தைத் தூக்கி ஏன் என்று கேட்ட மித்ரனிடம், "நீ இங்கே வந்தா சாமியாராயிடுவே என்று முன்னாடியே எவனாவது குறி சொல்லியிருப்பான்" என்ற அகிலனை முறைத்தான் மித்ரன்.

"சிரிப்பே வரலை" என்ற மித்ரனிடம், "பாவம்டா, நம்ம டீச்சர். சாமியாராகனும் என்று முடிவு செய்யறதுக்கு முன்னாடி அவங்களை ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருடா" என்றான் அகிலன்.

மெளனமாக அவனை முறைத்துப் பார்த்த மித்ரன், வெளியே வேடிக்கைப் பார்த்தான்.

"டீச்சரை எங்கே முதலில் பார்த்தே?" என ஆர்வமாக கேட்டான் அகிலன்.

"இப்போ சொல்ற மூட் இல்லை. இன்னொரு நாள் சொல்றேன்" என முகத்தைத் திருப்பிக் கொண்டான் மித்ரன்.

"அட் லீஸ்ட் அவங்க பெயரையாவது சொல்லேன்?" என கேட்டான் அகிலன்.

"ஏன் உனக்கு இப்போ பொழுது போகலையா?" என கேட்டான் மித்ரன்.

"ஆபிஸில் டென்ஷனா சுத்திட்டிருப்போம், இதை பத்தி பேச நேரமும் கிடைக்காது, சந்தர்ப்பமும் வராது" என சொன்னான்.

"நான் டீச்சரைப் பார்க்கிறேன் என்று தெரியற உங்களுக்கு, அவ பேர் மட்டுமே தெரியலை என்று நம்ப சொல்றீங்களா?" என கடுப்புடன் கேட்டான் மித்ரன்.

கண்களை இரண்டு பக்கமும் உருட்டி, உதட்டைப் பிதுக்கிய அகிலன், வேறு வழியில்லாமல் வெளியே பார்த்தான்.

ஏதோ முணுமுணுப்பது போல கேட்க, திரும்பிய அகிலன் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்த மித்ரனின் முகத்தைப் பார்த்தான்.

"இப்போ என்ன சொன்னே?" என ஆர்வமாக கேட்டான் அகிலன்.

கண்கள் கனவில் மிதக்க, "மயூரி" என மென்மையாக சொன்ன மித்ரனின் உதடுகள் புன்னகையில் மலர்ந்திருதன.

"இதை சொல்றதுக்கு எதுக்குடா, இத்தனை பெரிய சீன் போட்டே?" என கேட்ட அகிலன்.

"ஸம்யு கல்யாணம் முடிஞ்ச பிறகு, என் காதலை அவ கிட்ட சொல்லலாம் என்றிருந்தேன். ஆனா இப்போ சொல்ல முடியாம தள்ளி போயிட்டே இருக்கு. அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு என்று தெரியும். அதை அவ வாயால எங்கிட்ட சொல்ற வரைக்கும் வெளியே தெரிய வேண்டாம் என்று நினைச்சேன்" என உணர்ச்சிகள் நிறைந்த குரலில் சொன்னான் மித்ரன்.

அவனது தோளை தட்டிய அகிலன், "எனக்குப் புரியுது மித்ரன். சீக்கிரமே நீ அவகிட்ட உன் காதலை சொல்ல தான் போறே. நீ சொன்னவுடனே அவ சம்மதிக்க போறா" என சொன்னான்.

எதுவும் சொல்லாமல் புன்னகைத்த மித்ரன், கண்களை மூடி கொண்டான்.

மித்ரனின் செல்போன் அடிக்க, எடுத்துப் பார்த்து விட்டு, "ஹாய் சசி" என்றான்.
"ஹாய் மித்ரன், நீ எங்கே இருக்கே?"

"நானும் அகிலும் டைகர் ரிஸர்வ் பார்க்க வந்தோம். இப்போ வீட்டுக்குத் திரும்பி போயிட்டிருக்கோம். சம்யு வீட்டில் இருக்காள்"

"மித்ரன், நான் ஸ்ம்யுவிற்கு கால் செஞ்சேன். அவ எடுக்கவே இல்லை"

"அவ தூங்கிட்டிருப்பா சசி, நான் போய் அவளை எழுப்பி உனக்கு கால் பண்ண சொல்றேன்"

"வேண்டாம் மித்ரன்"

"ஏன் சசி?" என கேட்ட மித்ரனின் குரலில் கவலை படர்ந்தது. சில நாட்களாகவே சசியையும், சசியைப் பற்றிய பேச்சையும், சம்யுக்தா தவிர்ப்பதை அவன் உணராமல் இல்லை. முதலில் போக போக சரியாகிவிடும் என நினைத்தான். ஆனால் நாளுக்கு நாளுக்கு அவர்களுக்கிடையே இடைவெளி அதிகரிப்பதை உண்ர்ந்தே இருந்தான். விரைவில் இருவருக்கும் திருமணம் முடிந்தால் நன்றாக இருக்கும் என அவனுக்குத் தோன்றியது.

"நான் ஸம்யுவிற்கு ஸர்பரைஸ் கொடுக்க போறேன் மித்ரன்" என்றான் சசிதரன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த மித்ரன், என்ன சர்பரைஸ் என்று கேட்கலாமா, வேண்டாமா என யோசித்தான். கேட்பது நாகரீகமாக இருக்குமா என்றும் யோசித்தான்.

"என்ன ஸர்பரைஸ் சசி, எங்கிட்ட சொல்லலாம் என்றால் சொல், பர்சனல் என்றால் வேண்டாம்" என எச்சரிக்கையாகவே சொன்னான் மித்ரன்.

"பர்சனல் எல்லாம் இல்லை மித்ரன். நானும் அப்பாவும் இப்போ கோவை ஏர்போர்டில் இருக்கோம். இன்னும் ஒரு மணி நேரத்தில் சத்திலே இருப்போம்" என்றான்.

முகம் மலர்ந்த மித்ரன், "என்ன சசி, ஸம்யுவை பார்க்காம இருக்க முடியலையா?" என கேட்டான்.

"அதுவும் ஒரு காரணம் தான். ஆனா முக்கியமான காரணம், சித்தார்த்தோட கம்பனியோட ஸீபுட்ஸ் டீல் ஸைன் பண்றோம், உங்கிட்ட லாஸ்ட் வீக் சொன்னனே?" என்றான் சசி.

"ஆமா சசி, இப்போ ஏதாவது பிரச்சனையா?" என் கேட்டான் மித்ரன்.

"இல்லை, விலை முடிவு பண்ணறதில் இழுப்பறியா போயிட்டிருக்கு. திங்கட்கிழமை சென்னையில் டீல் ஸைன் பண்றதா இருந்தோம். சித்தார்த் அன்னிக்கு நைட் அமெரிக்கா போறான். நாளைக்குள்ளே விலை முடிவாகாம ஒப்பந்தம் திங்கட்கிழமை போட முடியாது. வீக் எண்ட் அவங்க் வொர்க் பண்ண மாட்டாங்களாம். அது தான் சித்தார்த் கிட்ட நாளைக்கு பேசி முடிவு பண்ணலாம் என்று இங்கேயே வந்துட்டோம்" என்றான் சசிதரன்.

சசி சொன்னதை கேட்டு யோசனையில் ஆழ்ந்த மித்ரன், "சசி, உங்களை சித்தார்த் வர சொன்னனா?" என கேட்டான்.

"இல்லை மித்ரன், நாங்க வருவது அவனுக்குத் தெரியாது" என்றான் சசிதரன்.

"ஒகே, சசி, நீ சத்தி வந்துட்டு கால் பண்ணு, நாம் மீட் பண்ணலாம்" என்றான் மித்ரன்.

அவன் பேசியதில் விஷயத்தை ஊகித்திருந்த அகிலன், மித்ரன் சசியுடன் பேசியதை சொன்னதும் சிரித்து விட்டான்

அவன் ஏன் சிரித்தான் என்பது புரிந்ததால், மித்ரன் தலையில் கை வைத்துக் கொண்டு சரிந்து உட்கார்ந்தான்.

"ஸோ, நாம் நினைச்சா மாதிரியே எல்லோரும் சத்தியமங்கலத்துக்கு வந்துட்டாங்க" என தானும் சிரித்தபடி சொன்னான் மித்ரன்.

"ஆமாம், எல்லோரையும் வரவைச்சிட்டான்" என்றான் அகிலன்.

"நாங்களாக தான் நேர்த்திக் கடன் செலுத்த வந்தோம், அவன் எங்களை வர வைக்கலை" என ஆழ்ந்த குரலில் சொன்னான் மித்ரன்.

"மீசையிலே மண்ணு ஒட்டலை, போடா, உங்களையும் அவன் தான் வர வைச்சான்" என்றான் அகிலன்.

எப்படி என்று யோசனையாக பார்த்தவனை, "வெற்றிவேல் தாத்தா" என்றான் அகிலன்.

"பார்ட்டியில் உங்கம்மா தாத்தா கிட்ட ஸம்யுவிற்கு கோயிலில் வைச்சு கல்யாணம் பண்ண போறதா சொல்லியிருக்காங்க. ஏதாவது நேர்த்திக்கடன் பாக்கி இருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே செய்ய சொல்லியிருக்கார் தாத்தா" என அகிலன் சொன்னதும், அவனுக்கு எப்படி தெரியுமென புருவத்தை உயர்த்திக் கேட்டான் மித்ரன்.
"உங்கம்மா அமிதாவிடம் சொல்லியிருக்காங்க" என்றான் அகிலன்.

"இந்த வாரம் இங்கே வர்றனும் என்று நாங்க தான் முடிவு பண்ணோம்" என்றான் மித்ரன்.

"நீங்க இந்த வாரம் வரலை என்றால் ஏதாவது சொல்லி வர வைச்சிருப்பார் தாத்தா" என்றார்.

தலையை நிராசையுடன் அசைத்து, கார் சீட்டை தன் முஷ்டியால் குத்தினான் மித்ரன்.

"நம்மை வர வைச்சது சக்திவேலா, சித்தார்த்தா இல்லை தாத்தாவா?" என கேட்டான் மித்ரன்.

"கண்டிப்பா தாத்தாவாக இருக்காது. சக்திவேலா, சித்தார்த்தா என்று நாளைக்குத் தெரியும்" என அகிலன் சொன்னவுடன் பெருமூச்சு விட்டான் மித்ரன்.

"இங்கே எல்லோரும் வந்துட்டோம். ரவிகுமார் மட்டும் தான் மிஸ்ஸிங். அவன் தினமும் பெஸண்ட் நகர் போலிஸ் ஸ்டேஷனில் ஸைன் பண்ணனும். அவனால் வர முடியாது" என்றான் மித்ரன்.

அதற்கு மேல் இருவருக்கும் எதையும் பேச தோன்றாமல் அமைதியாக வந்தனர்

வெற்றிவேல் தாத்தாவின் வீட்டுக்கு வரும் போது மாலை மணி ஐந்தாகி விட்டது.

உள்ளே செல்லாமல் வாசல் வராண்டாவில் அமர்ந்தவர்களிடம், காப்பி வேண்டுமா என கேட்டார் நாதன்.
சரியென்று மித்ரன் தலையசைக்க, அகிலன் டீ வேண்டும் என்றான்.
ஐந்து நிமிடத்தில் காப்பியுடன், வெங்காய் பஜ்ஜியை வேலையாள் எடுத்து வர, இருவரும் மெளனமாக சாப்பிட்டனர்.

போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த அகிலன், தனக்கு டீ எடுத்துக் கொண்டு வந்த ரவிகுமாரை வெறித்துப் பார்த்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro