Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Sudum Nilavu Sudatha Suriyan - 1

சுடும் நிலவு சுடாத சூரியன் – 1
தை மாதத்தின் இளங்குளிர் காலை பொழுது. வாசலில் இரு புறமும் கிளை விரிந்து பரந்திருந்த கொன்றை மரங்கள் மஞ்சளும் இளஞ்சிவப்புமாக வண்ணமயாக நின்றிருந்தது. கடற்கரையிலிருந்து வீசிய இளங்காற்று, கொன்றை பூக்களின் மீது படர்ந்திருந்த பனித்துளிகளை நிலமகளின் மேல் உதிர்த்து விளையாடி, காலை பொழுதை இனிமையாக்கியது

வாசலில் கட்டியிருந்த மாவிலை தோரணம், குலை தள்ளிய வாழை மரங்கள், பெரிய மாக்கோலமும் வீட்டில் நடக்கவிருக்கும் மஙகல நிகழ்வை அறிவித்தன
"சம்யு.. சம்யு..." என அம்மா அழைக்கும் குரல் கேட்டும் படுக்கையை விட்டு எழ மனமின்றி புரண்டு படுத்தாள் சம்யுக்தா.

"அவ இன்னும் கொஞச நேரம் தூங்கட்டுமே வினோ? அவ இப்பவே எழுந்து என்ன செய்ய போகிறாள்" என்ற கணவனை முறைத்தார்
"உஙகளுக்கு ஞாபக மறதி அதிகமாகி விட்டது. இன்னிக்கு மதியம் மாப்பிள்ளை வீட்டில் மெஹ்ந்தி சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க, இவ எழுந்து ரெடியாக வேண்டாமா?", என்றார் வினோதினி.
"எப்படி மறக்கும், அது மதியம் மூன்று மணிக்கு தானே.. எட்டு மணி வரைக்கும் குட்டிம்மா தூங்கட்டுமே" என்றார் வசந்தன்.
"இன்னிக்கு ஒன்பது மணிக்கு ரிசப்ஷன் டிரச் ரிக்ர்சல் பார்க்க போகணும். மாப்பிள்ளை சரியாக ஒன்பது மணிக்கு வந்து விடுவார்" என்றார் வினோதினி.
"என்னம்மா மாப்பிள்ளை என்று பலமாக மரியாதை எல்லாம் கொடுக்கறேங்க, நம்ம சசி தானேம்மா. நில்லுன்னா நிக்கப் போறான், உட்காருன்னா உட்காரப் போறான்", என்றப்படியே உள்ளே வந்தான் மித்ரன்.

ஆறடிக்கும் மேலான உயரம், கோதுமை நிறம், சுருள்சுருளான கருமையான தலைமுடி. கூர்மையான ஒளி விடும் கண்கள். அகன்ற நெற்றி, வலிமையான கரஙகள். தன் கண்ணே பட்டு விடும் என்று முகத்தை கடுமையக்கிக் கொண்ட வினோதினி, "அப்பாக்கும் பையனுக்கும் வீட்டில் கல்யாணம் நடக்குதே என்று ஏதாவது பொறுப்பு இருக்கா? நான் தான் எல்லாவற்றுக்கும் அலைய வேண்டியதாக இருக்கு" என்றார்.

"அம்மா, இன்னும் திருமணத்திற்க்கு மூன்று நாள் இருக்கு. எல்லாவற்றுக்கும் காண்டிராக்ட் கொடுத்தாச்சு. வாங்க வேண்டிய நகை, பாத்திரம், டிரஸ் எல்லாம் வாங்கியாச்சு. இன்னும் என்ன வேலை பாக்கி இருக்கு?" என்றான்.
"இன்னும் மண்டப அலஙகாரம் முடிவு பண்ணலை, திருமண ஹால் வாசலில் வைக்க பெயர் பலகை டிசைன் சொல்லலை. அப்புறம் லைட் மியுசிக் டிஜே பாட்டு லிஸ்ட்...", என்று அடுக்கத் தொடங்கினார் வினோதினி.
"அம்மா, நாளையிலிருந்து லீவ் போட்டிருக்கேன். எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் மித்ரன்.

"ஏன், இன்னிக்கும் லீவ் தானே" என்ற அம்மாவிடம், "இன்னிக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு, மதியம் நேராக ஹோட்டலுக்கு வந்து விடுகிறேன்", என்று கெஞ்சும் குரலில் சொன்னான்.
"இதுக்கு தான் இந்த போலிஸ் வேலை வேண்டாம் என்று சொல்கிறேன். நாள், கிழமை என்று பார்க்காமல் எப்பவும் அலைய வேண்டியிருக்கு, பேசாம ரிஸைன் பண்ணிட்டு உங்க அப்பாவோடு பிசினஸைப் பாரு", என்றார் வினோதினி.
ஐய்யோ, இது வேறு திசையில் செல்கிறதே என்று பதறிய மித்ரன், தன் தாயின் முகத்தைப் பற்றி, "கண்டிப்பாக மதியம் வந்து விடுகிறேன், அது வரைக்கும் அப்பா பார்த்துக் கொள்வார்", என்று அவன் கூறும் போதே திருதிரு என விழித்தார் வசந்தன்.

அவர் முகத்தைப் பார்த்ததும் வினோதினிக்கு கோபம் தலைக்கேறியது.
"நீங்க இரண்டு பேரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?" என்று குரலை உயர்த்தி கத்த தொட்ங்கிய போது கண்களை கசக்கியப்படி தன் அறையில் இருந்து வெளியே வந்த ஸம்யுக்தா தன் தாயை கட்டிக் கொண்டாள்.

வினோதினியின் கோபம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது. தன் அன்பு மகளின் தலயை பாசத்துடன் வருடி அவளின் இளஞ்சிவப்பு கன்னத்தில் முத்தமிட்டார்.
"காபி குடிக்கிறாயா செல்லம்", என்ற தாயிடம், "தலை லேசாக வலிக்கிறது, சூடாக காபி வேணும்", என்றாள் ஸம்யுக்தா
"ரெண்டே நிமிஷம்", என்றப்படி சமையலறைக்குள் சென்றார் வினோதினி.
அப்பாடா என்று பெருமூச்சு விட்டப்படி சோஃபாவில் அமர்ந்தான் மித்ரன்.

"டேய் அண்ணா.. ஏதோ பொழைச்சு போகட்டும் என்று காப்பாத்தி விட்டேன்" என்றவளிடம், "ஐயோடா.. உங்கிட்ட மாட்டிக்கிட்டு சசி ரூம் போட்டு அழுத கதை ஊருக்கே தெரியும்" என்றான்.
அவளின் வாடிய முகத்தை கண்ட வசந்தன், " சும்மா இருடா.. இன்னும் ரெண்டே நாள் தான் குட்டிம்மா நம்ம வீட்டில் இருக்க போகிறாள். அவளை எதுவும் சொல்லாதே", என்று தன்னோடு அணைத்து கொண்டார்.
"அப்பா, அவ நல்லா நடிக்கிறா.. அவளைப் பற்றி உங்களுக்கு தெரியாது, அவ நேற்று என்ன செஞ்சா.. "என்று சொல்லும் போதே அவன் மேல் பாய்ந்தாள்.
"தேவாங்கு.. சும்மா இருடா" என்று சொல்லும் போது கையில் காபியுடன் வந்த வினோதினி, "போதும் உஙக சண்டை. நீ முதலில் கிளம்பி ஸ்டேஷ்னுக்கு போ.. நீ காபியை குடிச்சிட்டு சீக்கிரம் கிளம்பி தயாராகி வா, சசி வந்துவிடுவார்", என்று அதட்டினார்.

தன் கணவரை திரும்பி முறைப்பாக பார்த்தவர், "சீக்கிரம் ஆபிஸ் போயிட்டு ஒரு மணிக்குள்ளே வர்ற வழியைப் பாருங்க", என்றார்.
வசந்தனும் விட்டால் போதும் என்று குளியறைக்குள் புகுந்து கொண்டார்.

டைனிங் டேபிளில் காலை உணவை எடுத்து வைக்கும் போது போலிஸ் உடையில் வந்த மகனை கண்டு வினோதினிக்கு கண்கள் நிறைந்தது.
"ஏ.ஸி பி அன்புசெல்வன்", என்று வேண்டுமென்றே குரலை உயர்த்திக் கூப்பிட்டப்படி வந்த தங்கையை கண்டவன் ஒரு நிமிடம் அயர்ந்து நின்றான்.
சந்தன நிறத்தில், கருமையான அடர்ந்த தலைமுடியுடன், இயற்கையிலே அழகாக வளைந்த புருவத்துடன் கூர்மையான நாசியுடன், சராசரிக்கும் அதிகமான உயரத்தில் இருந்தவளைத் தன் கண்களுக்குள் தேக்கி கொண்டான்.

"என் பெயர் மித்ரன்", என்றவனை கண்டு உதட்டை பிதுக்கியவள், "ஓ ஸாரி ஏ.ஸி பி மித்ரன் ஸார்" என்றவள், "அம்மா, பக்கத்து வீட்டு குட்டி வாலுக்கு கே.ஜி. அட்மிஷனுக்கு அலையறாங்க, நம்ம மித்ரன் சார் வாங்கி கொடுப்பார் என்று சொல்லுஙக" என்றாள்.
"அவங்க மூன்று நான்கு தடவை சிபாரிசு செய்யச் சொல்லி இவன் கிட்ட கேட்டாங்க, இவன் தகுதி இருந்தா தானா கிடைக்கும் என்று சொல்லி திருப்பி அனுபிட்டான். அவங்களுக்கு இதனால் நம்ம மேலே கொஞ்சம் வருத்தம் தான்", என்றார்.

"அது போன வாரம், இப்போ கேட்க சொல்லுங்க, ஸார் கண்டிப்பாக வாங்கி தருவார்" என்று கண்கள் மின்ன, புருவத்தை உயர்த்தி மித்ரனை நக்கலாக பார்த்தாள்.
"அப்படியா, மித்ரன் உனக்கு அந்த ஸ்கூலில் யாரும் தெரியாது என்று சொன்னே", என்ற தாயிடம், "அம்மா, இப்போ எல்லாம் நம்ம ஏ.ஸி பி ஸார் வண்டி எப்பவும் அந்த ஸ்கூல் வாசலில் தான் நிற்கிறது", என்றாள்.

"அந்த ஸ்கூல் வாசலில் எப்பவும் போக்குவரத்து நெரிசல் ஜாஸ்தியாக இருக்கு என்று நிறைய புகார் வருது, அதனால அதை சீர் செய்வதற்காக போகிறேன், இதில் என்ன தப்பு இருக்கு" என்று அமர்த்தலாக சொன்னான் மித்ரன்.
"ஸ்கூல் தொடங்கும் போதும், விடும் போதும் நின்றால் சரி, நேற்று மதியம் ஒரு மணிக்கு என்ன வேலை" என்று கண்களை விரித்துக் கேட்டவளிடம், "நாலு மணிக்கு கண்ணம்மா பேட்டையில் உனக்கு என்ன வேலையோ அதே தான்" என்றான்.
சாப்பிடுவதற்காக தட்டுகளை எடுத்து வந்த வினோதினி அப்படியே நின்று விட்டார்.

"சம்யுக்தா, உனக்கு எத்தனை தடவை சொல்வது, திருமணம் முடியும் வரை உன் துப்பறியும் வேலையை நிறுத்திக் கொள் என்று சொன்னேன் இல்லை. என் பேச்சை இந்த வீட்டில் யார் கேட்கிறார்கள்" என்று அங்கலாய்ததார்.
"ஐயோ, அது துப்பறியும் வேலை இல்லம்மா. அதற்கு பெயர் விசாரணை இதழியில். நேற்று நான் போனது அந்த பகுதியின் அருகிலிருக்கும் என் தோழிக்கு பத்திரிகை கொடுப்பதற்காக தான்", என தன் அண்ணனை முறைத்தாள்.
"என் கவலை எனக்கு", என்று அலுத்தப்படி அவர் உள்ளே சென்றவுடன், "உனக்கு எத்தனை தடவை சொல்வது, என்னை ஷாடோ செய்யாதே, என்னால் என்னை பார்த்துக் கொள்ள முடியும். நாம் இருவரும் சேர்ந்து தான் க்ராத்தே கற்றுக் கொண்டோம்", என்று எரிந்து விழுந்தாள்.

"உன்னை ஷாடோ செய்யவில்லை. நாங்கள் செல்லும் இடத்திற்கு நீ தான் வந்து இடைஞசல் செய்து எங்கள் வேலையை கெடுக்கிறாய்", என்று சினத்துடன் கூறினான்.
"உங்கள் காவல் துறை ஒழுங்காக வேலை செய்தால் நாங்கள் எதற்கு" என்று அவள் சொல்லும் போதே நடுவில் வந்து அமர்ந்த வசந்தன், "போதும்பா, இந்த மொக்கையை நான் சிவாஜி காலத்திலிருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன். இப்போ இருக்கிற டிரண்டில் பேசுங்க" என சொல்லும் போதே வாசலில் நின்ற காரில் இருந்து இறங்கினான் சசிதரன்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro