Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Marukkathe Nee Marakkathe Nee - 3

மறக்காதே நீ மறுக்காதே நீ - 3
மித்ரன் திருமணத்தின் முதல் நாள் வரவேற்பின் போது, கல்யாண மண்டபத்தில் எதற்கென்றே தெரியாமல் அனைவரும் பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர். ஹாலின் பூ வேலைப்பாடுகள் கண்களுக்கும், காற்றில் பரவிய மெல்லிசை மனதுக்கும் இதமளித்தன.

"சம்யு.. சம்யு" என தன் அம்மாவின் குரல் கேட்க, அவரருகே சென்றாள் சம்யுக்தா.

"என்னம்மா?" என கேட்ட தன் மகளிடம், கையில் வைத்திருந்த மெல்லிய டிசைனர் மாலையை கொடுத்தவர், "இதை மயூரி ரூமில் கொடுத்திடு" என்றார்.

சரியென்று தலையசைத்து மாலையை கையில் வாங்கி கொண்டு சம்யுக்தா மணமகள் அறையை நோக்கி நடந்தாள்.

இளமஞ்சளில் மெல்லிய வெள்ளி சரிகை வேலைப்பாடுகளுடன் இருந்த டிசைனர் புடவை அணிந்திருந்தாள். காதில் தொங்கிய வெள்ளை கற்கள் பதித்த ஆண்டிக் ஜிமிக்கியும், அதே வெள்ளைக் கற்கள் பதித்த கழுத்தை ஒட்டியிருந்த நெக்லஸும் அணிந்திருந்தாள். கைகளில் இளமஞ்சள் திரெட் வளையல்களுடன், மெல்லிய வெள்ளை கற்கள் பதித்த வளையல்களும் அணிந்திருந்தாள்.

அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த வினோதினியின் கண்களில் நீர் துளிர்த்தது.

"ஆண்ட்டி.. மித்ரன் வந்துட்டாரா?" என கேட்டபடி வந்தாள் அமிதா.

அவர் பதில் பேசாமல், மெளனமாக சம்யுக்தா செல்வதையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, "ஆண்ட்டி.." என மெதுவாக அவரது தோளைத் தொட்டாள்.

நொடியில் தன்னை சமன்படுத்தி, கண்ணோரத்தில் சேர்ந்த நீரை உள்ளிழுத்தவர், "என்ன கேட்டே?" என திரும்பினார்.

அமிதா தன்னை கவலையுடன் பார்ப்பதை உணர்ந்தவர், "மனசு சொன்னபடி கேட்க மாட்டேங்குது. எதை நினைக்க கூடாது என்று நினைச்சனோ, அது தான் ஞாபகத்திற்கு வருது. சம்யுவை பார்த்தா, எனக்குக் காட்டில் காயற நிலா மாதிரி இருக்கு. அவளுக்கும் வயசாயிட்டே போகுது" என மெதுவான குரலில் சொன்னார்.

"கவலைப்படாதீங்க ஆண்ட்டி, எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்" என ஆறுதலாக சொன்னாள் அமிதா.

"நான் அதை தான் தினமும் பண்ணாரி அம்மன் கிட்ட வேண்டிக்கிறேன்" என சொன்னவர், "நீ எதையோ கேட்டியே?" என்றார்.

"மித்ரன் வந்துட்டாரா என்று கேட்டேன் ஆண்ட்டி, மணி ஏழாயிடிச்சு. ரிசபஷன் ஸ்டார்ட் பண்ணலையா என்று கேட்கிறாங்க" என்றாள்.

"வந்துடுவான் அமிதா, அகிலனும் கூட போயிருக்கான்" என சொன்னார் வினோதினி.

சம்யுக்தா எதிரே வந்து மயூரியின் தம்பியிடம், "தருண், இதை மயூரி ரூமில் கொடுத்துடேன்" என்று மாலையை நீட்டினாள்.

பர்கண்டி நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்த தருண் மாலையை கையில் வாங்கியபடி, "ஸம்யுக்கா, நீங்க ஸாரி கட்டினா கொஞ்சம் உயரமா தெரியறீங்க. இன்னிக்கு எத்தனை அடி ஹீல்ஸ் போட்டிருக்கீங்க?" என கிணடலாக கேட்டான்.

"ஏன் மத்த டிரஸ்ஸில் நான் குள்ளமாக தெரியறேனா?" என யோசனையாக கேட்டாள்.

"அப்படினு சொல்ல முடியாது. கொஞ்சம் குனிஞ்சு தரையில் தேட வேண்டியிருக்கும்" என சொல்லிவிட்டு வேகமாக இரண்டடி பின்னால் நகர்ந்தான்.

"உன்னை வானத்தில் தேடறதை விட, என்னை தரையில் தேடறது ஈஸி தான்" என்று சிரித்தபடி சொன்னாள்.

"உங்க உயரத்துக்கு நீங்க என்னை பிளேனில் இருந்து தான் குனிஞ்சு பார்க்கனும். நான் மித்ரன் அத்தானை விட இரண்டு இன்ச் ஹைட்" என அவன் சொன்னவுடன் சித்தார்த்தின் நெடிய உருவம் மனதில் வந்து போனது. அவனும் மித்ரனை விட உயரம் என நினைக்க தொடங்கிய மனதை அடக்கினாள்.

தருணிடம் எதுவும் பதில் சொல்லாமல் திரும்ப வாசலை நோக்கி நடந்தாள்.

வாசல் வரவேற்பில் நின்றிருந்த பெண்கள் தயாராக இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு திரும்பும் போது, சசிதரன் தன் அம்மாவுடன் உள்ளே வந்தான்.

"ஹாய் சசி" என அவனிடம் சொன்னவள், "வாங்க" என அவனது அம்மாவை புன்னகையுடன் வரவேற்றாள்.

சம்யுக்தாவை ஆசையுடன் ஒரு நொடி பார்த்த சசிதரன் தன்னை சமாளித்து, "ஹாய் சம்யு. எப்படியிருக்கே?" என கேட்டான்.

"ஃபைன்" என்றவள், "அங்கிள் எப்படியிருக்கார் ஆண்ட்டி?" என கேட்டாள்.

"இப்போ பரவாயில்லைமா" என சொன்னவரிடம் பேசி கொண்டே அவரை முதல் வரிசையில் இருந்த இருக்கையில் அமர வைத்தாள்.

ஸ்மிருதி வாசலில் இருந்து கையசைக்க, "வரேன் ஆண்ட்டி" என விடை பெற்றவள், சசியைப் பார்த்து நட்பாக புன்னகைத்து விட்டு சென்றாள்.

"சம்யு.." என வேகமாக அவளருகே வந்த ஸ்மிருதி, "மஞ்சக் காட்டு மைனா மாதிரி சூப்பரா இருக்கே" என சொன்னவள், அவளை தலை முதல் கால் வரை மெதுவே பார்த்துவிட்டு, "ஆர் யூ ஷுயூர்?" என கேட்டாள்.

"என்ன?" என புரியாமல் கேட்டாள். "அவன் கண்டிப்பா வரலையா?" என சிரித்தபடி கேட்டாள்.

அவள் சித்தார்த்தை சொல்கிறாள் என்று தெரிந்தும், புரியாதவள் போல, "யாரு வரலையா? சசி வந்திருக்கானே?" என சொன்னாள்.

"அவன் வந்தது ரொம்ப முக்கியம்" என முணுமுணுத்த ஸ்மிருதி, "சம்யு, புனே ஃபிலிம் இண்ஸ்டியூட்டில் ஆக்ட்டிங் சொல்லி தர ஆள் தேடறாங்களாம். நீ போறியா?" என நக்கலாக கேட்டாள் ஸ்மிருதி.

அவளுக்கு பதில் சொல்லாமல், அப்போது வாசலில் நுழைந்தவர்களைப் பார்த்து சிரித்தபடி அங்கேயிருந்து நகர்ந்து சென்றாள் சம்யுக்தா.

"இன்னும் மித்ரனை காணவே இல்லையே?" என தவித்தபடி அமிதாவை பார்த்தார் வினோதினி.

"வந்துடுவாங்க ஆண்ட்டி" என அமிதா ஆறுதல் சொல்லியும், வினோதினியின் கண்கள் அலைபாயந்தபடி இருந்தது.

அவர் கவலைப்படுவதைப் பார்த்து அகிலனுக்கு போன் செய்து பேசியவள், "ஆண்ட்டி, பக்கத்து சிகனலில் தான் இருக்காங்க. இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வந்துடுவாங்க. நீங்க என்னோட வாங்க" என கையைப் பிடித்து வாசலுக்கு அழைத்துச் சென்றாள்.

அவர்கள் செல்வதற்கும் வாசலில் ஒரு கார் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. காரிலிருந்து வெற்றிவேலுடன் இன்னும் சிலர் இறங்கி வந்தனர்.

"வாங்க ஐயா" என அவரை வரவேற்ற வினோதினி, மற்றவர்களைப் பார்த்து வரவேற்கும் விதமாக சிரித்தார்.

"வினோதினி, இவ என் மகள் சுநீதி, மாப்பிள்ளை கெளதமன், என் பேரன் யதுநந்தன்" என சொன்னார்.

வினோதினி முகம் மலர்ச்சியடைந்து, "வாங்க, உள்ளே வாங்க" என வரவேற்றவர், "சித்தார்த் வரலையா?" என ஆவலுடன் கேட்டார்.

மறுப்பாக தலையசைத்த சுநீதி, "எப்படியிருக்கீங்க வினோதினி?" என கேட்டார்.

"நல்லாயிருக்கேன், இவ அமிதா" என நடந்தபடி அறிமுகம் செய்தார்.

"அமிதாவை தெரியும், போனில் பேசியிருக்கேன், வீடியோ சாட்டில் பார்த்திருக்கேன். நாலு நாள் முன்னாடி கூட புடவை கடையில் நம்ம சம்யுக்தாவோட பார்த்தேன்" என சொல்லியபடி நடந்தார்.

முன்னால் தாத்தாவும், கெளதமனும் நடந்து செல்ல, பின்னே சுநீதியுடன் பேசியப்படி சென்றார் வினோதினி. வசந்தன் வேகமாக ஒடி வந்து தாத்தாவையும், கெளதமனையும் வரவேற்று முதல் வரிசையில் அமர வைத்தார்.

"நந்தன், சென்னை பிடிச்சிருக்கா?" என அவனை திரும்பி பார்த்துக் கேட்டாள் அமிதா.

"நான் சென்னைக்கு ஏற்கனவே இரண்டு தடவை வந்திருக்கேன் அக்..." என அமிதாவை ஏற்ட்டுப் பார்த்தபடி பாதியிலே நிறுத்தினான்.

அவனை சிரித்தபடி பார்த்த அமிதா "நான் சித்தார்த்துக்கு சிஸ்டர் என்றால் உனக்கு அக்கா தான். அப்படியே கூப்பிடலாம், நோ வொரீஸ்" என சொன்னாள்.

"அப்படி கூப்பிடனுமா என்று தான் யோசிக்கிறேன்" என பிரவுன் நிற கண்கள் மின்ன சொன்னவனை புரியாமல் பார்த்தாள் அமிதா.

"நீங்க போட்டோவில் இருக்கிறதை விட நேரில் அழகாவே இருக்கீங்க. எதுக்கு அக்கானு கூப்பிட்டு ஒரு கோல்டன் சான்ஸை மிஸ் செய்யனும்" என உதடுகள் வளைய சீரியசான முகத்துடன் கண்களில் சிரிப்புடன் சொன்னான்.

"அமெரிக்காவில் செகண்ட் மேரேஜ், பையனை விட பொண்ணுக்கு வயசு அதிகமா இருக்கிறதெல்லாம் மேட்டரே இல்லை. பூரணி பாட்டி வீட்டுக்கு வர மருமக தமிழ் பொண்ணு என்று மட்டும் தான் கண்டிஷன் போட்டிருக்காங்க. மத்தெல்லாம் மேனேஜ் செஞ்சிடலாம்" என அவன் சொன்னவுடன், எட்டி அவன் காதை திருகிய அமிதா, "மூக்கு நீளமா, ஷார்ப்பா இருந்தா இப்படி தான் யோசிக்க தோணும்" என இன்னொரு கையினால் அவன் மூக்கை இழுக்க முயன்றாள். லாவகமாக அவளது கையை கையை தட்டி விட்டவன், "அமி செல்லம், பொது இடத்திலியே இத்தனை வயலண்டா நடந்துக்கிறியே, அகிலனை வீட்டில் என்ன பாடு படுத்துவே. போட்டோவிலேயே உன்னிடமிருந்து அகிலன் இரண்டு அடி தள்ளி நிக்கும் போதே, நான் உஷாராயிருக்கனும்" என பெருமூச்சு விட்டபடி சொன்னான்.

"அமி, உன்னை மாதிரி வயலண்ட் பொண்ணுங்க எல்லாம் எனக்கு செட்டே ஆகாது. நீ அகிலனையே லைஃப் புல்லா பின்னி எடு. உன் தங்கை சுமிதா, உன்னை விட க்யூட்டா இருந்தா, அவ இன்னும் கமிட் ஆகலை இல்ல, கடைசி தடவை பார்க்கும் போது, ஸ்டேடஸ் சிங்கிள் என்று தான் போட்டிருந்தா.." என அவன் சீரியசாக சொன்னவுடன் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

"அமி, நீ சிரிக்கும் போது, எத்தனை அழகாயிருக்கே தெரியுமா?" என ரசனையுடன் சொன்னவனிடம், "ஃப்ளர்ட் செய்யறதுக்கு உனக்கு வரைமுறையே இல்லையாடா?" என கேட்டாள்.

"பொண்ணுங்க அழகா இருக்கணும் என்பது மட்டும் தான் வரைமுறை. மத்தபடி எந்த வயசா இருந்தாலும், எந்த நாடா இருந்தாலும், எந்த இனமா இருந்தாலும் எனக்கு வித்தியாசமே கிடையாது" என முகம் மலர சிரித்வன், "எல்லா நாட்டுப் பொண்ணுங்களும் ஒரே மாதிரி தான். அவங்க வயசுக்கேத்த மாதிரி கொஞ்சம் மாத்தி பேசினா போதும். அவங்க அழகா இருக்காங்கனு முதலில் சொல்லிட்டு, அதற்குப் பிறகு என்ன சொன்னாலும் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க" என சொன்னான்.

"போதும், விட்டா பேசிட்டே இருப்பே, உங்கப்பா கூட போய் உட்காரு" என்றாள்.

"அந்த தப்பை மட்டும் என்னிக்கும் செய்யவே கூடாது. எப்பவும் அவர் கிட்டே இருந்து ஒரு நூறு அடி டிஸ்டன்ஸ் மெயிண்டைன் செய்யணும். நம்ம சுமி எங்கே, கண்ணிலே சிக்கவே மாட்டேங்கிறா" என தன் கண்களை சுழல விட்டபடி கேட்டான் நந்தன்.

அதற்குள் ரிசபஷ்ன் ஸ்டேஜில் ஆழ்ந்த கிரே நிற சூட்டில் மித்ரன் புன்னகையுடன் வந்து நிற்க, அவன் அருகே மயில்கழுத்து நிற லெஹங்காவில் மயூரி முகத்தில் லேசான வெட்கத்துடன் வந்து நின்றாள்.

போட்டோகிராபரும், வீடியோகிராரும் அவர்களை தனியே நிற்க வைத்து போட்டோ ஷூட் எடுத்தனர். மயூரி கையசைத்து சம்யுக்தாவை மேடைக்குக் கூப்பிட, முதலில் மறுத்த சம்யுக்தா பின் மித்ரனும் கூப்பிட வேறு வழியின்றி மேலே சென்று அருகே நின்றாள்.

மித்ரன் அருகே சென்று நின்று, போட்டோ எடுத்துக் கொண்டவள், கீழே நின்றிருந்த மயூரியின் தம்பி தருணை மேலே வர சொன்னாள்.

போட்டோகிராபர் அதற்குள், ஃபோகஸ் லைட்டை போட்டு, அவளை நேரே பார்க்க சொன்னார். அவளருகே சற்று தள்ளி நின்ற தருணை ஒர கண்ணால் பார்த்து, கையைப் பிடித்து தன்னருகே நிற்க வைத்தாள். சிரித்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்து முடித்தவள், கீழே நின்றவர்களை குழப்பத்துடன் பார்த்தாள்.

அவளை திகைப்புடன் வசந்தனும், வினோதினியும் பார்க்க, அடக்க முடியாத சிரிப்புடன் அமிதாவும், ஸ்மிருதியும் அவளை பார்த்தபடி நின்றிருந்தனர். ஏதோ தோன்ற தன் வலது பக்கம் நிமிர்ந்து பார்த்தவள், அவளின் கைப்பிடிக்குள் நின்றப்படி, தன் நீல கண்களால் அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவனை கண்டு அதிர்ந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro