விலைமதிக்க முடியாத கண்ணீர்
நான் ஒலியியல் (Audiology) பட்டப்படிப்பை படித்து கொண்டிருக்கிறேன்.
அன்றைய நாளும் வழமைபோல கிளினிக் பயிற்சிகளுக்காக சென்றிருந்தேன்.
ஆறு வயது சிறுமி தனது காதில் cochlea implant ( severe to profound காது கேளாமையை நிவர்த்தி செய்ய அணியப்படும் இலத்திரனியல் உபகரணம். இது சத்திர சிகிச்சை செய்து அணிவிக்கப்படும்) அணிந்திருந்தாள்.
அவளுக்கு பிறந்ததிலிருந்து காது கேட்காதிருந்தது. அதனால் அவளின் கேட்டல் மற்று பேச்சு தொடர்பான மைல்கற்கள் (Speech and Hearing milestones) பாதிக்கப்பட்டிருந்தன.
இன்றைய நாள் அவள் வாழ்வில் முதன் முதலாக சத்தங்களை கேட்கும் நாள். அவளின் பெற்றோர்கள் அதனை எண்ணி சற்று பதட்டமடைந்ததை அவர்கள் கை பிசைந்து பிசைந்து இருந்ததை வைத்தே கண்டறிந்து கொண்டேன், ஆனால் அதனை பற்றி சிந்திக்கும் அளவு அவள் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை.
கடவுளை வேண்டி விட்டு, நான் cochlea implant லுள்ள button ஐ அழுத்தினேன். அவளின் பெற்றோரின் கண்கள் விரிந்ததை பார்த்தாலும் என் கண்கள் முழுவதும் அவளின் முகபாவனையை வாசித்து கொண்டிருந்தது.
ஆறு வயது அவளின் முகத்தில் பல வகையான கோடுகள் எழத்தொடங்கியது. சந்தோசம், வியப்பு, ஆச்சரியம்....கை கொட்டி சிரித்தாள்.
என் கண்களில் கண்ணீர்...ஆனந்த கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
அவளின் பின்னும் சில கோணங்களிலும் சென்று சில வகையான சத்தங்களை செய்து அவளுக்கு கேட்பதை உறுதி செய்து கொண்டேன்.
பின் அவளின் அம்மாவை பார்த்து அவளை அவள் பெயர் சொல்லி கூப்பிடுமாறு கூறினேன். கண்களில் கண்ணீர் மல்க நின்றவளின் வாய் திறப்படவில்லை.
தண்ணீர் பாட்டிலை கொடுத்தேன். குடித்து விட்டு தொண்டையை செறுகி விட்டு அவளின் பெயரை அழைக்க, ஆறு வருடங்களின் பின் அழைக்கப்பட்ட திசையை நோக்கி அவள் திரும்பி பார்த்தாள்.
பெற்றோர் இருவரினதும் சந்தோசம் எவ்வளவு என்பதை அவளை கட்டியணைத்த அணைப்பில் விளங்கிக் கொண்டேன்.
அவளின் எதிர்காலம் பற்றிய வினாக்குறி தற்போது முற்றுபுள்ளியாக மாறியதை அவர்கள் என்னிடமும் என் supervisor இடமும் கைபிடித்து நன்றிசெலுத்தியது உணர்த்தியது.
அந்த அறை முழுவதும் சந்தோச அலைகள் பரவ, இனி அவள் வாழ்வு சந்தோசமான தலைகீழாக இருக்கும்...
பிறக்கும் போது காது கேளாமையை நிவர்த்தி செய்து தற்கால விஞ்ஞானமும் கடவுளின் அருளும் இருக்கிறது என்பதை அறிவிக்கும் ஒரு உண்மை கதை!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro