37 வினை விதைத்தவன்...
37 வினை விதைத்தவன்...
இதற்கிடையில்...
வீட்டின் வெளியே காரை நிறுத்திவிட்டு அவசரமாய் உள்ளே ஓடினான் ஹரி.
"நம்மள ஆபத்து நெருங்குது. ஆர்த்தியோட அப்பாவும், புருஷனும் நம்மளுடைய இடத்தை கண்டுபிடிச்சிட்டாங்க. உடனே இங்கிருந்து கிளம்பியாகணும்... சீக்கிரமா கிளம்பு" என்றான் பரபரப்புடன்.
"அய்யய்யோ... நம்மளை அவங்க ஜெயில்ல போட்டுடுவாங்களா?" என்றாள் லட்சுமி திகிலுடன்.
"நம்மளை பிடிச்சிட்டா, நிச்சயம் ஜெயில்ல தான் போடுவாங்க"
அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அவசர அவசரமாய் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள் இருவரும். தங்கள் இல்லம் போலீசாரால் சுற்றி விளைக்கப்பட்டதை பார்த்த அவர்கள், திடுக்கிட்டு நின்றார்கள். வீட்டின் உள்ளே சென்ற போலீசார், அந்த வீட்டை சல்லடை போட்டு சலித்து பார்த்தார்கள். ஆரத்தி அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். இறுதியாய் லட்சுமியையும், ஹரியையும் கைது செய்தார்கள். லட்சுமியின் கண்கள் முடிவின்றி பொழிந்து கொண்டிருந்தது.
"என் குழந்தையை நான் என் கூட வச்சிக்க அனுமதிப்பீர்களா சார்?" என்றாள் லட்சுமி.
"மாட்டோம்... நீ தான் கிரிமினல்... உன் குழந்தை ஏன் ஜெயில்ல இருக்கணும்?"
"அப்படின்னா, என் குழந்தையை நீங்க என்ன செய்வீங்க?"
"குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பிடுவோம். நீ எப்ப ஜெயிலை விட்டு வரியோ அப்போ, உன் குழந்தையை உன்கிட்ட திருப்பிக் கொடுப்போம்"
"எங்களை எவ்வளவு நாளைக்கு ஜெயில்ல வச்சிருப்பீங்க?"
"உனக்கு குறைந்தபட்சம் ஏழு வருஷ ஜெயில்தண்டனை கிடைக்கும்"
தன் குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதாள் லட்சுமி. அவள் அழுவதால் எந்த பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை. வினை விதைத்தவன், வினையை அறுத்துத் தானே ஆக வேண்டும்? ஆர்த்தியின் குழந்தையை அவளிடமிருந்து பறித்து, அவளை தனி அறையில் அடைத்து வைத்தார்கள். இப்பொழுது, அவர்களுக்கும் அதே தான் நடக்கவிருக்கிறது. நாம் ஆயிரம் திட்டங்கள் போட்டாலும்... விதி வலியது... அனைத்தையும் விட...!
யாழ் இல்லம்
அங்கு சினேகாவை காணாத மகேந்திரன் பதறிப் போனான். நிலவனும், மைத்திலியும் அவளை வீடு முழுக்க தேடி பார்த்து விட்டார்கள். அவள் எங்கும் இல்லை.
"இப்போ யாழுக்கு நம்ம என்ன பதில் சொல்றது? அவன் நம்மளை நம்பி தானே விட்டுட்டு போனான்?"
"யாழ், ஆர்த்தியை கண்டுபிடிச்சிட்ட விஷயம், அவளுக்கு தெரிஞ்சிடிச்சின்னு நினைக்கிறேன்" என்றான் நிலவன்.
"நீ சொல்றது சரி. இல்லன்னா அவ இந்த இடத்தை விட்டு வேற எங்கேயுமே போக மாட்டா. அதுவும் இன்னைக்கு ஸ்ட்ரைக் வேற... " என்றாள் மைதிலி.
யாழினியனுக்கு ஃபோன் செய்தான் மகேந்திரன்.
"சொல்லு மகா..."
"ஐ அம் சாரி, யாழ்... நாங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி, சினேகா இங்கிருந்து ஓடி போய்ட்டா..."
"எல்லா இடத்திலும் நல்லா தேடி பார்த்தீங்களா?"
"தரோவா பாத்துட்டோம்"
"அவ ரூம்ல, அவளோட பாஸ்போர்ட், விசா, மத்த முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இருக்கான்னு செக் பண்ணு"
"சரி, பண்றேன். ஆனா, அவளை எப்படியும் நம்ம தேடி கண்டுபிடிச்சி ஆகணும். இல்லனா, அவ நமக்கு பெரிய தலைவலியா இருப்பா"
"கண்டிப்பா செய்யலாம். நாங்க வீட்டை நெருங்கிட்டோம். நம்ம நேர்ல பேசலாம்."
"சரி" என்று அழைப்பை துண்டித்தான் மகேந்திரன்.
"ஏதாவது சீரியஸான விஷயமா?" என்றார் வெங்கட்ராகவன்.
"சினேகா எஸ்கேப் ஆயிட்டா"
"என்ன்னனது??? அவ எஸ்கேப் ஆயிட்டாளா??" என்றாள் ஆரத்தி திகிலுடன்.
"அவளை நான் விடமாட்டேன்... சீக்கிரமே போலீஸ் அவளை பிடிச்சிடுவாங்க"
"உனக்கு அவளைப் பத்தி தெரியாது, யாழ். எல்லாத்தையும் தன் பக்கம் இழுத்துக்க தெரிஞ்ச சூனியக்காரி அவ... என்ன நினைச்சாலும் செஞ்சு முடிச்சிடுவா. அவ செஞ்ச தப்புக்கான தண்டனையை, அவ அனுபவிக்காம போகக் கூடாது..." என்ற போது அவளது தொண்டை அடைத்தது.
"அவ நிச்சயமா அனுபவிப்பா... அவளுக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும்னு சொல்லு..."
"அவ ஜெயிலுக்கு போகணும்... "
"போவா... விடு" என்ற அவனை கண்களை சுருக்கி, குழப்பத்துடன் பார்த்தாள் அவள்.
யாழ் இல்லம்
புனிதாவையும், பாட்டியையும் தவிர அனைவரும் ஆர்த்திக்காக வரவேற்பு அறையில் காத்திருந்தார்கள். ஆர்த்தி வரும் பொழுது, அங்கு புனிதா இருக்க வேண்டாம் என்று நினைத்தான் யாழினியன். சின்ன குழந்தையான அவளால், ஆள் மாறாட்ட கதையை எல்லாம் புரிந்து கொள்ள முடியாது அல்லவா? ஏனென்றால், தன்னுடன் இருந்தவள் தனது அம்மா இல்லை, வேறொருத்தி தான் தன்னை பெற்றவள் என்று தெரிந்தால், அந்த குழந்தை அதை எப்படி எடுத்துக் கொள்வாளோ தெரியவில்லை. அவளுக்கு நிச்சயம் குழப்பம் ஏற்படும். அதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
ஆர்த்தி உள்ளே நுழைந்தவுடன், மைதிலியும், வானதியும் அவளை நோக்கி ஓடிச் சென்று, அவளை கட்டிக்கொள்ள, வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட அந்த தோழிகள் மூவரும், தங்களை கட்டுப்படுத்த இயலாமல் ஓவென்று அழுதார்கள்.
"வி மிஸ்டு யூ" என்றாள் மைதிலி.
"ஐ டூ... லைக் ஹெல்..." என்றாள் ஆர்த்தி.
கண்களை துடைத்துக்கொண்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி மீண்டும் அணைத்துக் கொண்டார்கள். அவர்களின் அருகில் நின்றிருந்த நிலவனையும், மகேந்திரனையும் பார்த்த ஆர்த்தி, அவர்கள் இருவரையும் ஒன்றாய் அணைத்துக் கொண்டாள். மனவலிமை மிக்கவன் என்று பெயர் பெற்ற மகேந்திரனால் கூட, தன் கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. கலங்கிய கண்களுடன் அவள் தலையை வருடி கொடுத்தான் மகேந்திரன். நிலவனோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெடித்து அழுதான். உணர்ச்சி பிழம்பாய் காணப்பட்ட தன் நண்பர்களை பார்த்து தானும் உணர்ச்சிவசப்பட்டான் யாழினியன்.
"முதல்ல உள்ள வா" என்றான் மகேந்திரன்.
"கொஞ்சம் வெயிட் பண்ணு ஆரத்தி" என்றான் யாழினியன்.
அப்பொழுது ஆர்த்திக்கு ஆரத்தி எடுக்க, ஆரத்தி தட்டுடன் வந்தாள் மதிவதனி. யாழினியனையும் அவளுடன் சேர்ந்து நிற்கச் சொல்லி மதிவதனி கூற, மற்ற நண்பர்களையும் தன்னுடன் இழுத்து நிறுத்திக் கொண்டாள் ஆர்த்தி. கண்ணீர் ததும்பும் கண்களுடனும், புன்னகையுடனும் அவர்களுக்கு திருஷ்டி சுற்றினாள் மதிவதனி.
அவர்கள் உள்ளே வந்தவுடன், அவளது கரத்தை பற்றிய யாழினியனை நோக்கி திரும்பினாள் ஆர்த்தி.
"நீ ஏதாவது சாப்பிட்டியா?" என்றான்.
அவள் இல்லை என்று தலையசைக்க,
"பாண்டியா... ஆர்த்திக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வாங்க" என்றான்.
அதைக் கேட்டு, சமையல் அறையை நோக்கி ஓடினான் பாண்டியன்.
"இப்ப எனக்கு சாப்பிடற மூடு இல்ல யாழ்"
"நீ ஒன்னும் மூடோட சாப்பிட வேண்டாம்... ஏதாவது சாப்பிடு போதும்"
பாண்டியனிடமிருந்து, யாழினியன் தட்டை பெற்றுக் கொள்ளும் முன், அவனிடமிருந்து அதை பறித்துக் கொண்டு, ஆர்த்திக்கு ஊட்டி விட துவங்கினாள் மைதிலி. அவளுடன் வானதியும் இணைந்து கொள்ள, பெருமூச்சு விட்டான் யாழினியன்.
ஆர்த்தி சாப்பிட்டு முடித்த அதே நேரம், புனிதாவுடன் அங்கு வந்தார் பாட்டி. அவளிடம் ஓடிச் சென்ற ஆர்த்தி முழங்காலிட்டு அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டாள். அழுது விடாமல் இருக்க, அவள் படாத பாடு பட வேண்டி இருந்தது. யாழினியனின் திட்டப்படி, புனிதாவுக்கு, சினேகாவின் ஆள்மாறாட்டம் தெரிய வேண்டாம் என்று நினைத்தாள் ஆர்த்தி. யாழினியனை உரித்து வைத்திருந்த தன் குழந்தையை, முத்தமிட்டு தீர்த்து விட்டாள். அவளை புரியாமல் குழப்பத்துடன் பார்த்தது குழந்தை.
"உங்களுக்கு என்ன ஆச்சும்மா?" என்றது.
"ஒன்னும் இல்லடா... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்"
"ஆனா, நீங்க இதுக்கு முன்னாடி எப்பவும் அப்படி சொன்னதில்லையே..."
"அதனால தான் இப்ப சொல்றேன்..."
அவளைத் தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டாள் ஆர்த்தி.
"அம்மா, உங்களுக்கு ஒன்னும் இல்லையே?" என்றது அந்த பாவப்பட்ட குழந்தை.
இல்லை என்று தலையசைத்தாள் ஆர்த்தி.
"நீங்க ரொம்ப புதுசா நடந்துக்குறீங்க... நான் உங்க மடியில உட்காரும் போது, நீங்க என்னை திட்ட தானே செய்வீங்க?"
"அப்படி நடந்த எல்லாத்துக்கும் சாரி... இனிமே அப்படி நடக்காது... ஐ ப்ராமிஸ்"
எவ்வளவு முயற்சித்த போதும், தன் கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீரை அவளால் தடுக்க முடியவில்லை. தன் குழந்தையை முதல் முதலாய் சந்திக்கிறாளே... அவள் கண்ணீரை துடைத்து விட்ட புனிதா,
"அழாதீங்கம்மா..." என்றாள் சோகமாய்.
"ஆர்த்தி..." என்ற யாழினியனை நோக்கி திரும்பினாள் அவள்.
"ஃபேஸ் வாஷ் பண்ணிக்கிறியா?" என்ற அவனை புரியாமல் பார்த்தாள் ஆர்த்தி. திடீரென்று ஏன் அவன் முகத்தை கழுவ சொல்கிறான்? அவளுக்கு பதில் புனிதாவிடம் இருந்து கிடைத்தது. அதற்காகத் தான் அவன் வேண்டுமென்றே அப்படி கேட்டான்.
"உங்களுக்கு கோபம் வரலையா மா?"
"எதுக்கு?"
"அப்பா உங்களை *ஆரத்தின்னு* உங்களுக்கு பிடிக்காத பேரை சொல்லி கூப்பிட்டாரே..."
"ஆனா, உங்க அப்பாவுக்கு, எங்க அப்பாவுக்கு, என்னுடைய எல்லா ஃபிரெண்ட்ஸ்க்கும் அந்த பேர் ரொம்ப பிடிக்கும்"
"அப்படின்னா அவங்க அப்படி கூப்பிட்டா பரவாயில்லயா?"
"பரவாயில்ல... "
"அப்படின்னா, என்னோட பெயரையும் தியான்னு மாத்திடுறீங்களா?"
தன்னை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த யாழினியனை, ஆச்சரியத்துடன் பார்த்தாள் ஆர்த்தி.
"நான் உனக்கு அந்த பேரு தான் வைக்கணும்னு நினைச்சேன்"
"மமதிக்கு வச்ச மாதிரி தானே?"
"மமதியா?"
மமதியை பற்றி எந்த விவரமும் தெரியாததால், ஆர்த்திக்கு புரியவில்லை.
"அப்பா சொன்னாரு, நீங்க அத்தையோட பொண்ணுக்கு, மமதின்னு பெயர் வைக்க சொன்னிங்களாம். பாவம் மமதி, இப்போ ஹாஸ்பிடல் இருக்கா..." என்றாள் சோகமாக.
*அவளுக்கு உண்மையாகவே மமதி என்று பெயர் வைத்து விட்டாயா?* என்பது போல் யாழினியனை பார்த்தாள் ஆர்த்தி.
"ஆமாம் ஆர்த்தி, அவளுக்கு மமதின்னு தான் பெயர் வைக்கணும்னு பிடிவாதமா இருந்தான் யாழ்" என்றாள் மதிவதனி.
"அம்மா, எல்லாரையும் என்னை தியானு கூப்பிட சொல்றீங்களா?"
"எல்லாரும் உன்னை அப்படித் தான் கூப்பிடுவாங்க. முதல்ல உங்க அப்பாவை கூப்பிட சொல்லு" என்று அவள் கூறி முடிக்கும் முன்,
"தியா... " என்றான் யாழினியன்.
ஆர்த்தியின் மடியை விட்டு இறங்கி, தன் அப்பாவை நோக்கி ஓடிச் சென்றது குழந்தை. அவளை தூக்கிக்கொண்டு தன் கன்னத்தை காட்டினான். யாழினியன். கலகலவென சிரித்தபடி முத்தமிட்ட தியா, அவனிடமிருந்து இறங்கி மீண்டும் ஆர்த்தியிடம் வந்து அவள் மடியில் அமர்ந்து, அவளையும் முத்தமிட்டாள்.
வெங்கட்ராகவனும் மற்ற நண்பர்களும் அந்த அழகிய குடும்பத்தை ரசித்தபடி இருக்க, மதிவதனியும், மகேந்திரனும் யாழினியனின் தவிப்பை கவனித்துக் கொண்டிருந்தார்கள். பாவம் அவன், ஆர்த்தியிடம் பேசும் சந்தர்ப்பமே அவனுக்கு வாய்க்கவில்லையே...!
"அம்மா எனக்கு பசிக்குது" என்றாள் தியா.
"அக்கா, எதாவது கொண்டு வர சொல்லுங்களேன், நான் அவளுக்கு ஊட்டி விடுறேன்" என்றாள் ஆர்த்தி மதிவதனியிடம்.
"நீங்க எனக்கு ஊட்டி விட போறீங்களா?" என்றாள் தியா ஆர்வமாய்.
ஆமாம் என்று தலையசைத்தாள் ஆர்த்தி. சாம்பார் சாதத்தில் நெய் விட்டு, வெண்டைக்காய் பொரியலுடன் கொண்டு வந்து கொடுத்தார் பாண்டியன். தன் அம்மா ஊட்டிய சாப்பாட்டை, ஆச்சரியத்துடன் சாப்பிட்டாள் தியா. இன்று அவளது அம்மாவிற்கு என்ன ஆகிவிட்டது? ஏன் அவர் இவ்வளவு விசித்திரமாய் நடந்து கொள்கிறார்? அந்த காட்சியை அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, தனக்கு வந்த ஒரு அழைப்பை ஏற்க, அங்கிருந்து மெல்ல நழுவி சென்றான் யாழினியன்.
"அவ உங்க கண்ணு முன்னாடி தானே இருக்கா?"
"ஆமாம் சார்"
"அவ மட்டும் மிஸ் ஆகவே கூடாது. அவளை விடாம ஃபாலோ பண்ணுங்க. அவளுக்கு, யாரும், எந்த ஹெல்ப்பும் பண்ணாம பாத்துக்கங்க. அவளுக்கு சந்தேகம் வரக்கூடாது. அவ தப்பிச்சிட்டதாவே நினைச்சுகிட்டு இருக்கட்டும். அவ அதே நம்பிக்கையோட பிச்சைக்காரி மாதிரி சுத்தட்டும். நீங்க அவளை ஃபாலோ பண்றீங்கன்னு அவளுக்கு தெரிஞ்ச அடுத்த நிமிஷம், அவளை அரெஸ்ட் பண்ணிடுங்க"
"சரிங்க சார்" என்றார், ஆர்த்தியை நிழல் போல் தொடர்ந்து சென்ற அந்த பெண் காவலர்.
அழைப்பை துண்டித்து விட்டு, வெற்றி புன்னகை உதிர்த்த யாழினியன், அனைவரும் தத்தம் அறைகளுக்கு செல்வதை பார்த்தான் அவன்.
"குளிச்சி ரெஸ்ட் எடு ஆர்த்தி" என்றான் மகேந்திரன்.
சரி என்று தலையசைத்தாள் ஆர்த்தி.
"அம்மா, நான் பெரிய பாட்டி கூட போறேன்" என்றாள் தியா, பாட்டியின் விரலை பற்றி கொண்டு.
"என்ன பாட்டி மேஜிக் பண்ணிங்க?" என்றாள் மதிவதனி.
"ஒன்னும் இல்ல... அவ கதை கேட்கிறதுல ரொம்ப ஆர்வமா இருக்கா" என்றார் பாட்டி.
"ஆமாம் அத்தை... கண்ணன் அவர் பிரெண்ட்ஸ் கூட பால் விளையாடிகிட்டு இருந்தாரா... அந்த பால், யமுனா ரிவர்ல போய் விழுந்துடுச்சு. அந்த பாலை கண்ணன் எடுக்கப் போறாரு. அந்த ரிவர்ல காலிங்கான்னு ஒரு பெரிய பாம்பு இருக்கு..." என்று தன் கைகளை விரித்து கொள்ளை அழகுடன் கூறியது அந்த குழந்தை.
அதைக் கேட்டு சிரித்த மகேந்திரன்,
"பாட்டி நீங்க அந்த கதையை அப்படியே கண்டினியூ பண்ணுங்க... " என்றான்.
வானதியும், மைதிலியும், ஆரத்தியை அழைத்துச் சென்று அவளுக்கு மாற்று உடைகளை வழங்கினார்கள்.
"என்கிட்ட டிரஸ் இருக்கு" என்றாள் ஆர்த்தி.
"தேவையில்லை, அதையெல்லாம் தூக்கி கடாசு... அந்த டிரஸ் எல்லாம் நீ யூஸ் பண்ண வேண்டாம்" என்றாள் வானதி.
"அவ சொல்றது சரி. நம்ம நாளைக்கு ஷாப்பிங் போயி, உனக்கு புது டிரஸ் வாங்கலாம்" என்றாள் மைதிலி.
சரி என்று தலையசைத்துவிட்டு குளியலறைக்கு சென்றாள் ஆர்த்தி.
அவள் குளியலறையில் இருந்து வெளியே வந்த போது, மூடிய கதவின் மீது சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் யாழினியன். தன் கரங்களை விரித்து, அவளை தன்னிடம் வருமாறு கண்ணிமைத்தான். அவனை நோக்கி ஓடிச் சென்ற ஆர்த்தி, அவன் தலை முடியை பிடித்து இழுத்து, குனிய வைத்து, அவன் முதுகில் ஓங்கி குத்தத் துவங்கினாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro