Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -4

அந்த வரிகளை படித்து விட்டு தூங்கி போனாள்.

கனவில்...

அன்று கனவில் வந்த அதே மேகக் கூட்டங்கள். அதே இறகு. அதே பெண்மணி. ஆனால் அவர் சொன்ன வரிகள் மட்டும் வேறு.

"புரியாத புதிர்களுக்கான விடைகள் விளங்கும் பொழுது, வழிகள் விரியும்.
அந்த பாதை முடிவில் நீ எனை வந்தடைவாய்.
விடைகளை தேடி அலைவது உன் வேலையல்ல.
அனைத்தும் தானாக உன்னை வந்துச்சேரும்.
இல்லை, சேர வைப்பதே என் வேலை. உதவி என்று பிறரை நாடாதே.
நம்பாதே.
நம்பினால் வருந்துவாய்.
நீ செய்ய வேண்டியதெல்லாம்
ஒன்றே ஒன்று தான்.
உயிரை மட்டும் கெட்டியாய்
பிடித்துக் கொள்.
என் சேயான உன் உயிரையும்
உனக்குள் இருக்கும் உன் தாயான
என் உயிரையும்"

சொல்லிவிட்டு அன்று போலவே அவர் மறைந்தும் போனார்.

அவர் சென்று விட்டதை உணர்ந்தவள் "அம்மாஆஆ" "அம்மாஆஆ" என அவளையும் அறியாமல் நான்கு புறத்திலும் கத்தினாள். அவள் குறள் அவளுக்கே எதிரொலித்ததே தவிர அவர் மீண்டும் வரவில்லை.

யாரோ தன்னை உலுக்குவது போல் உணர்ந்தவள், தன் சுயம் திரும்பினால்.

"என்னாச்சுடா? ஏன் தூக்கத்துல கத்துற? எதாவது கெட்ட கனவு கண்டியா?" அவளது தந்தை அஷோக் அவளிடம் பரிதவிப்புடன் கேட்க,

"அ.. அப்பா.. என் அம்மா யாரு ப்பா?.. இது வரைக்கும் நான் அவங்க போட்டோ கூட பாத்ததில்லேயே.." அவளது இந்த திடீர் கேள்வியில் அவர் கொஞ்சம் மிரண்டு தான் போனார்.

"அவ மண்ணோட மண்ணாகி எத்தனை வருஷம் ஆகிடுச்சு.. இப்போ வந்து ஏன் டா திடீர்னு கேக்குற?"

"இல்லை பா.. நான் அவங்க போட்டோ பாக்கணும் ப்ளீஸ் பா.."

"என்ன டா ஆச்சு உனக்கு? அவ போட்டோ என் கிட்ட இல்லைனு உனக்குத் தெரியும் தான?"

"நான் பாக்கணும் பா ப்ளீஸ்.. ஒரு பழைய போட்டோ கூடயா இல்லை?"

"இல்லையே டா"

"அம்மா பாக்க எப்படி இருப்பாங்கனாவது உங்களுக்கு தெரியும் தானே.. அதாவது சொல்லுங்க பா"

"இல்லாதவள பத்தி இப்போ எதுக்கு மா தெரிஞ்சிக்கிட்டு? இப்போ படுத்து தூங்கி ரெஸ்ட் எடு. அடிப்பட்டத கூட என் கிட்ட இருந்து மறச்சிட்டல? சரி விடு. இப்ப தூங்கு நம்ம காலைல பேசிக்கலாம்."

"அப்பா இல்லை. நீங்க சொல்லுங்க. என்கிட்ட இருந்து நீங்க எதையோ மறைக்கிறிங்க. எனக்கு அம்மாவ பத்தி தெரிஞ்சே ஆகணும்."

அவர் மௌனத்தையே பதிலாக தந்தார்.

"சொல்லுங்க ப்பா"

"அது உனக்கு தேவை இல்லாதது" வார்த்தைகள் சற்று கடுமையாக வெளி வந்தன அவரிடம் இருந்து.

"எது பா தேவை இல்லாதது? என் அம்மாவை பத்தி தெரிஞ்சிக்கிறது தேவை இல்லாததா?"

"நிலா.. போதும் இப்ப தூங்குறியா இல்லையா?"

"நீங்க அம்மாவ பத்தி சொல்ற வரைக்கும் நான் தூங்க மாட்டேன்"

"எல்லாமே உனக்கு தெரியனும்கிற அவசியமில்லை. புரிஞ்சிதா?"

"இப்போ அவசியம் வந்திருக்கு"

"தெரியாம இருக்குறது தான் உனக்கு நல்லது.. புரிஞ்சிக்கோ" என்றவர் அவள் அடுத்து பேசவருவதற்குள் விருட்டென அறையை விட்டு வெளியேறினார்.

தன்னை சுற்றி நடப்பது எதுவும் அவளுக்கு சரியாக படவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடவும் முடியவில்லை.

அவள் கழுத்தில் தொங்கிய அவளது அன்னையின் செயினை ஒரு முறை தொட்டுப் பார்த்தவள் யோசனையிலேயே தூங்கியும் போனாள்.

                            ★●★●★●★

அந்த நடு இரவில் கீச் என்ற சத்தத்துடன் அவள் அறையின் கதவு மெதுவாய் திறக்கப்பட்டது.

அதன் திரைச்சீலைகள் காற்றில் ஆட, அதை விலக்கிக் கொண்டு ஓர் உருவம் அறைக்குள் நுழைந்தது.

அந்த உருவம் தன் அடையாளங்களை ஓர் கருப்பு போர்வைக்குள் மறைத்திருந்தது.

அதன் பச்சை கருவிழிகளை கொண்ட கண்கள் மட்டும் அந்த அடர் இருட்டிலும் பளிங்குப் போல் மிளிர்ந்தது.

உள்ளே நுழைந்த அந்த உருவம் உறக்கத்தில் இருந்த நிலாவைப் பார்த்து குரோதமாய் சிரித்து, பின் சத்தம் எழுப்பாமல் மெல்ல நடந்து படுக்கையின் அருகில் இருந்த மேசையை நெருங்கி நேற்று நிலா அதன் மேல் வைத்த புத்தகத்தை எடுத்து, பக்கத்தில் இருந்த பெட்டிக்குள் வைத்து மூடியது.

பின்னர் அந்த பெட்டியை தான் போர்த்தி இருந்த போர்வைக்குள் மறைத்து வைத்துக்கொண்டது.

ஓர் முறை நிலாவை தீர்க்கமாய் பார்த்துவிட்டு பின் வந்த வழியே அந்த உருவம் சென்று விட்டது.

இது எதுவும் அறியாத நிலாவோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

                           ★●★●★●★

விடியலை உணர்ந்து படுக்கையை விட்டு வெளியே வந்தவள், வழக்கமான காலை வேலைகளை முடித்துக் கொண்டு காபிக்காக கிச்சன் சென்றாள்.

அங்கோ, இருப்பது பத்தாதென்று ஹரிஷ்‌வேறு அவளிற்கு பேரதிர்ச்சி தந்தான். அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நீங்களே வந்து பாருங்கள்.

காபி கலக்குகிறேன் என்ற பெயரில் எதையோ செய்து கொண்டு இருந்தான்.

"இப்படி ஷாக்லாம் குடுத்து என்னை ஹார்ட் பேஷன்ட் ஆக்கிடாதிங்க.. ஐ அம் ஜஸ்ட் ட்வென்ட்டி ஒன்.." என்றாள் கிட்ச்சனின் வாசிலில் சாய்ந்துக் கொண்டு கைக்கட்டி நின்றபடி. 

"இன்னைக்கு ருத்ரா மா ஒன் ஹார் லேட்.. அதான்" என்றான் உதட்டின் ஓரம் சிரித்தபடி.

"ஆஹான்" என்றவள், கிட்ச்சனின் திண்டில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

அவன் சக்கரை என நினைத்து உப்பை போட போக "அது உப்பு" என்றாள் வேகமாய்.

அவன் போட்டு முடித்து ஒரு கப்பை இவளிடம் நீட்டியவனை இவள் பிரம்மிப்பாய் பார்த்தாள்.

அதை உணர்ந்தவன், "உனக்கும் சேத்து போடணும்னு ஒன்னும் நினைக்கலை. அளவு தெரியாம பால் ஊத்திட்டேன் அதான்." என்றான்.

"சிரிப்பை மட்டும் அளந்து தான்‌ சிரிக்கிறிங்க. அது எப்படி?" என அவள் விளையாட்டாய் கேட்க,

அவனோ பதில்கூறாமல் சென்று விட்டான்.

பதில்கூற முடியாத கேள்விகேட்டு விட்டேன் என இவளது முகத்தில் பெருமைப்பரவ, ஆனால் அவன் இவளை அலட்சியப் படுத்திவிட்டான் என்பதே உண்மை.

காபியை குடித்து முடித்தவளுக்கு நேற்றிலிருந்து தாரா வீட்டிற்க்கே வரவில்லை என்பது அப்போது தான் அவள் சிந்தையில் உதித்தது.

உடனே கால் செய்தாள். தாராவின் அலைப்பேசி அடிக்கும் சத்தம் அவளது அறையின் அருகிலேயே கேட்டது.

"என்ன டா இது அவ‌ போன் ரிங்டோன் சத்தம் எனக்கு கேக்குது" என நிலா நினைக்க, தாராவின் அலைப்பேசி சத்தம் நிலாவை நெருங்கியிருந்தது.

"ஏய் நான் உங்க வீட்டுக்கு வந்துட்டேன்.. போனை வைடி" என்ற குரலை தொடர்ந்து, அவளும் வந்தாள்.

"யாராவது வீட்டுக்கு வந்த பிறகு போன் பண்ணுவாங்களா பக்கி?!"

"எனக்கு எப்படி டி தெரியும் நீ வந்துட்டேனு.. அது சரி நீ ஏன் நேத்து வரலை"

"என் அக்கா வீட்டுக்கு வந்துற்க்காங்கப் பா அதான் வரலை.."

"ஒரு காலாச்சும் பண்ணிருக்கலாம்ல?"

"நான் பண்ணேன்.. நீ தான் போனை வீட்ல வச்சிட்டு யாரையோ பாக்க போயிருக்கரதா.. ருத்ரா மா சொன்னாங்க.. அப்படி யார பாக்க போன?.. அதுவும் இந்த கைய வச்சிகிட்டு?"

நேற்று இனியனை பார்க்க போனதை பற்றிதான் கேட்கிறாள் என உணர்ந்தவள், தாராவிடம் சொல்லலாமா என தயங்கினாள்.

"என்ன யோசிக்கிற? யார பாக்க போன?"

"இ.. இனியன" என நிலா தயங்க,

"அவன எதுக்கு டி இப்ப பார்க்க போன..?"

"இப்போ ஏன் இவ்வளவு கேள்வி கேக்குற" என நிலா கூறவும், எதையோ மறைக்கிறாள் என தாரா புரிந்துக் கொண்டாள்.

"உனக்கு சமாளிக்கக் கூட வரலை நிலா.. என்கிட்ட மறைக்கிற அளவுக்கு என்ன விஷயம்?"

"அப்படி ஒன்னும் இல்லை தாரா"

தாரா விடுவதாய் இல்லை. நிலாவிற்கு ரகசியம் என்று எதையும் மூடி மறைக்கத் தெரியாது. எதுவாக இருந்தாலும் தாராவிடம் சொல்லிவிட்டால் தான் அவளுக்கு தூக்கமே வரும். இவ்வளவு நேரம் தாக்குப் பிடித்ததே அரிது.

"பர்ஸ்ட் டைம் என்கிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைக்கிறல?"

அவ்வளவு தான். இவ்வளவு நேரம் கடைப்பிடித்ததெல்லாம் வீணாய் போனது.
ரெக்கார்ட் செய்து வைத்ததுப் போல் அனைத்தயும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.

தாரா முகத்தில் ஈ ஆடவில்லை. நிலா அவளை உலுக்கவும் ஒரு வித பதட்டத்துடன் தன் சுய நினைவிற்கு வந்தவள், வேகமாய் நிலாவின் கையைப் பிடித்து தரதர வென்று வாசலுக்கு இழுத்துக் கொண்டு போனாள்.

சற்று தள்ளி நின்று யாரிடமோ போனில் பேசிவிட்டு பின் தன் காரில் நிலாவையும் ஏற்றிக்கொண்டு விரைந்தாள்.

நிலாவிற்கு தாராவின் செயல் ஒன்றும் புரியவில்லை. என்ன வென்று கேட்டும் தாராவிடம் இருந்து  பதிலும் வரவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் நிலாவும் கேட்பதை நிறுத்தி விட்டு ஓய்ந்துப் போனாள்.

கார் ஒரு மருத்துவமனையின் வாசலில் போய் நின்றது.

நிலாவை இறங்குமாறு ஜாடை செய்தாள்.

"யாருக்கு என்னாச்சி?" என நிலா பதட்டமாய் கேட்க, தாராவின் மௌனம் அவளுக்கு இன்னும் கவலையைத் தந்தது.

நேராக ரிசப்ஷன் சென்றவள் அந்த பெண்மணியிடம் எதையோ  கேட்க, அவர் இன்டர்காமில் பேசிவிட்டு பின் தாராவிடம் ஏதோ கூறினாள்.

சற்று தொலைவில் நின்றதால் நிலாவிற்கு எதுவும் கேட்கவில்லை.

பேசிவிட்டு வந்தவள் தன்னை பின் தொடருமாறு நிலாவுக்கு சைகைச் செய்தாள். அவள் முகத்தில் உள்ள பதற்றத்தை நிலாவால் உணர முடிந்தது.

இருவரும் ஓர் அறையை அடைந்தார்கள். நான் சொல்லும் போது உள்ளே வா என்று விட்டுத் தாரா தான் முதலில் உள்ளே சென்றாள்.

ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்த தாரா, இவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்.

உள்ளே போனவளுக்கு பேரதிர்ச்சி.
அது ஓர் மனநல மருத்துவரின் அறை.

நிலா, தாராவை எரிக்கும் பார்வை பார்க்க, அவளோ கெஞ்சலாக நிலாவை அமர சொன்னாள்.

விருட்டென அறையை விட்டு வெளியேறிவளை தாரா பின் தொடர்ந்தாள்.

"நிலா நில்லு ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு" விறுவிறுவென நடந்தவளை தாரா கையைப் பற்றி இழுக்க, அதை உதறி விட்டு மருத்துவமனையின் வாசலை அடைந்தாள்.

"நில்லு நிலா.. நான் என்ன சொல்ல வர்றேனு புரிஞ்சிக்க ட்ரை பண்ணு" என அவளது முன் போய் நின்று அவளது தோளை பிடித்து நிறுத்தினாள்.

"எத புரிஞ்சுக்கனும்..? நீ என்ன பைத்தியம்னு சொல்ல வர்றதையா? இல்லை நான் உன்கிட்ட சொன்னது எல்லாம் என்னோட கற்பனை மட்டும் தானு நீ நினைக்கறதையா?"

"நீயே யோசிச்சு பாரு.. இதெல்லாம் நடக்கிற விஷயமில்லை.. வெறும் உன் கற்பனை.. இல்லாதத இருக்குறதா நினைக்கிற ஒரு நோய்.. நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன்..
இது வெறும் ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ் தான்..
இத கியூர் பண்ணிடலாம்.. நீ கோஅப்ரேட் பண்ணா போதும்.."

"நீ.. நான் சொல்றதை நம்பலை.. நம்பி இருந்தா எனக்கு பைத்தியம்னு பெயர் வச்சி இங்க கூட்டிட்டு வந்துற்க‌ மாட்டே" என்று கூறிவிட்டு மீண்டும் நடந்தாள்.

"சரி நான் நம்புறேன்.." என தாரா கூறியவுடன் ஒரு வினாடி நின்றவளிடம் சென்ற தாரா மீண்டும் தொடர்ந்தாள்.

"ஆதாரம் இருக்கா?.. நீ சொல்றதுலாம் உண்மைனு உன்னால நிரூபிக்க முடியுமா?"
என்றவுடன் ஒரு நொடி திகைத்தவள், பின் தீர்க்கமாய்,

"முடியும்" என்றாள்.

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro