Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 88

சந்தன நிற டாப்ஸ், ப்ளூ ஜீன்ஸ், காதுகளில் சின்ன கடுக்கன்கள் போன்ற தோடுகள், குச்சு குச்சான கை கால்கள், உடம்பில் எலும்பு தெரியும்படியான மெல்லிய உடல்வாகு, பெயருக்கு ஒரு கண்ணுக்கு தெரியாத பொட்டு,
பாய்கட் ஹேர்ஸ்டைல் என அவளைப் பார்த்த முதல் பார்வையில்,

"எனக்கு ஒரு தம்பி இருந்துருந்தா, இப்டித்தான் இருந்துருப்பானோ?" என்று ஜெபாவை நினைக்க வைத்தாள் சம்யுக்தா.

நெற்றி, கழுத்து, மார்பு என அவன் உடம்பில் அனைத்து இடங்களிலும் ஈரமாகியிருப்பதைக் கண்டு வருந்தியவள் அவனிடம்,

"அச்சோ.... உங்களுக்கு ஏன் இவ்ளோ ஸ்வெட் ஆகுது? ஜுஸ் ஏதாவது குடிக்குறீங்களா?" என்று அக்கறையாக கேட்டாள்.

"இல்ல வேண்டாம்!" என்று கிட்டத்தட்ட உறுமிய அவன் குரலிலேயே அவனுடைய கோபத்தின் அளவு எவ்வளவென்று
அவளுக்குத் தெரிந்தது.

"என்னடா யுகி; ஜெபாட்ட குடிக்க வேணுமான்னு கேட்டுட்டு அப்படியே ஒக்காந்துட்டு இருக்க? போ... கிச்சன்ல போயி தாத்தாவுக்கும், ஜெபாவுக்குமா ரெண்டு ப்ரெஷ் ஜுஸ் இல்ல லெமன் ஜூஸ் ஏதாவது சொல்லிட்டு வா!" என்று சொன்னார் பிரகாஷ்.

"ஸாரி தாத்தா.... வெளிய ரொம்ப வெயிலா? உங்கள ரொம்ப நேரம் வெளிய வெயிட் பண்ண வச்சதுக்கு ஸாரி.... இந்தோ இப்பவே போய் ஜுஸ் வாங்கிட்டு வர்றேன்!" என்றவள் பத்து நிமிடங்களில் இரண்டு கைகளிலும் இரண்டு க்ளாஸ்கள் மாதுளம்பழ ஜுஸைப் பிடித்த படி வந்தாள்.

"இந்தாங்க மிஸ்டர்! ஜுஸ் குடிச்சுட்டு எங்கூட சமாதானம் ஆகிடுங்க! இண்டியா வந்தவுடனே என்னை பார்த்து ஒருத்தர் மொறைக்குறத நான் சுத்தமா விரும்பல. நான் ரீசண்டா ஒரு க்ரைம் த்ரில்லர் எழுத ஆரம்பிச்சிருக்கேன். அதோட ப்ளாட்ட நானும் நமச்சிவாயம் அங்கிளும் ஜாலியா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோமா? எங்களுக்குப் பொழுது போனதே தெரியல!" என்று சொன்ன சம்யுக்தாவிடம்,

"மிஸ் சம்யுக்தா..... உங்க உலகத்துல நீங்க சந்தோஷமா இருக்காம, இங்க வந்து ஏன் எங்க உயிர வாங்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கு அறிவில்ல?" என்று முகத்திற்கு நேராகவே அவளை திட்டினான் ஜெபசேகரன்.

"ஹலோ.... நான் உங்கிட்ட ஸாரி கேட்டு, அந்த அப்பாலஜிய ஃபேவர் பண்ற மாதிரி, உனக்கு ஜுஸூம் கொண்டு வந்து குடுத்துட்டேன்! அத கொஞ்சங்கூட பாராட்டாம, இன்னும் முறைச்சிக்கிட்டே என்னையப் பாத்து நீ அறிவில்லன்னு கேக்குற.... ஏன்டா இப்டி திமிரா பேசுற? நீ இங்க நீ ஜஸ்ட் ஒரு எம்ப்ளாயி தான?" என்று அவனிடம் கேட்டாள் சம்யுக்தா.

அவள் குடுத்த பானத்தின் பக்கம் ஜெபா அவனுடைய கண்ணைக்கூட நகர்த்தவில்லை. இவர்கள் இருவருக்குள்ளும் இன்னும் நிறைய வெடிக்கப் போகிறது என்று பிரகாஷிற்கு தெரிந்து போய் விட்டது.

"யுகி.... இந்த இடம் வாங்க பணம் குடுத்தது உன்னோட அப்பான்னாலும், இப்டி ஒரு ஹோம இங்க செட் பண்ணது, வருஷக்கணக்குல அதப் பாத்துக்கிட்டு இருக்குறது எல்லாம் நான் இல்லையா? எனக்கு உதவியா இருப்பான்னு நினைச்சு, நான் வேலைக்கு சேத்த பையன நீ எப்டிடா இங்கிருந்து போயிடுங்கன்னு சொல்ல முடியும்? அதச் சொல்றதுன்னா ஒண்ணு நான் சொல்லணும்; இல்ல இங்க இருக்குறவங்க யாராவது கம்ப்ளையிண்ட் பண்ணனும். அந்த மாதிரி எதுவும் இல்லாம அவனைப் பார்த்த அடுத்த நிமிஷத்துல இந்த இடம் நல்லாயிருக்கு; அதுனால உங்களுக்குப் பதிலா நான் இங்க இருந்துக்குறேன். நீங்க போய்டுங்கன்னு பேசுனா இவன் உன்னைப் பாத்து லூசா நீன்னு தான் கேப்பான்! முதல்ல ஹோம முழுசா சுத்திப் பாரு; இங்க என்னென்ன வேலை இருக்குன்னு தெரிஞ்சுக்க! அதுக்கப்புறம் இந்த வேலைய உன்னால மட்டும் தனியா செஞ்சுட முடியுமான்னு யோசி..... அதுக்கப்புறம் தானடா நம்ம ஒரு முடிவுக்கு வரணும்?" என்று கேட்ட பிரகாஷிடம்,

"ஓகே தாத்தா.... யுவர் பாயிண்ட் இஸ் அ வேலிட் ஒன்... நான் இங்க எல்லாத்தையும் சுத்திப் பாத்துட்டு அதுக்கப்புறமா என்னோட ஒப்பீனியன் சொல்றேன்!" என்றாள் சம்யுக்தா.

"இந்த உயர்ந்த மனிதன் எங்கூட வந்து எனக்கு ஹோம சுத்திக் காமிப்பாரா தாத்தா?" என்று அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டவளை பார்த்த ஜெபாவுக்கு ஏனோ அவளது அரைகுறைத் தனத்தை நினைத்து
எரிச்சல் எரிச்சலாய் வந்தது.

"ஹேய்.... வாட்சிங்க் டவர்!
நீ மோஸ்ட்லி தாத்தா கூட தான் இருப்பியா மேன்?" என்று கேட்டு அவன் பின்னால் நடந்து கொண்டிருந்தவளை திரும்பிப் பார்த்து முறைத்தவன்,

"நீ என்னை கண்டிப்பா நாலஞ்சு வயசு சின்னப்பொண்ணா தான் இருப்ப; ஆனாலும் நீ ஒரு ஸ்ட்ரேஞ்சர்ங்குற மரியாதையில நான் உன்னை மிஸ் சம்யுக்தா வாங்க போங்கன்னு மரியாதயா தான் பேசிட்டு இருக்கேன். நீ கொஞ்சங்கூட பயமேயில்லாம என்னை நீ, வா, போ, வாட்சிங்க் டவர்னு பேசுற...... எனக்கு ப்ராப்பரா ரெஸ்பெக்ட் குடுக்கலன்னா, உன்னோட வாய் ஒடைஞ்சு போய்டும்! பாத்துக்க!" என்று எச்சரிக்கை செய்தவன், தன்னுடைய கையில் அணிந்திருந்த காப்பை சற்று மேலே உயர்த்திக் காட்டவும் சம்யுக்தா சற்றே பயந்து போனாள்.

"நீங்க ஏன் மிஸ்டர் இவ்ளோ சென்ஸிட்டிவா இருக்கீங்க? நம்ம ரெண்டு பேரும் ஒரே ஏஜ் க்ரூப் தான? நாம ப்ரெண்ட்லியா இருக்க முடியாதா?" என்று கேட்டவளிடம் ஏளனச்சிரிப்புடன்,

"இப்ப மட்டும் வண்டி வண்டியா மரியாதை வருது! இங்க உட்காருங்க!" என்று கல்பெஞ்சை கை காட்டினான்.

"ப்ளூமிங் லைஃப்ல டோட்டலா முப்பது ரெஸிடென்ட்ஸ் இருக்காங்க.... ஒன்பது பேர் கப்பிள்ஸ்.... ஸோ பதினெட்டு! மத்தவங்க பனிரெண்டு பேர்! காலையில 6.30 க்கு எழுந்திரிப்பாங்க. 7 மணிக்கு மார்னிங் ட்ரிங்க்! 8 மணிக்குள்ள அவங்களோட மார்னிங் ரொட்டீன் வொர்க்ஸ் முடிச்ச பிறகு ஒரு ப்ரேயர் இருக்கும்; ப்ரேயர் முடிஞ்ச கால்மணி நேரத்துல ப்ரேக்பாஸ்ட்! அத முடிச்சுட்டு ரெண்டு மணி நேரம் கார்டனிங், கிச்சன் ஹெல்ப், வாஷிங்மெஷின் ஏரியா சூப்பர்விஷன், ரூம் க்ளினீங் டீம், காமன் ஏரியா க்ளீனிங் டீம்னு ஒவ்வொருத்தருக்கு என்ன வொர்க் அஸைன் பண்ணியிருக்கோ, அந்த அந்த வேலையில போய் வொர்க் பண்ணுவாங்க! 11 மணிக்கு எல்லாருக்கும் சூப் குடுப்போம்!
11 ட்டூ 1 அவங்களோட பர்சனல் டைமிங்!"

"அவங்களோட பிள்ளைங்களுக்கு பேசுறது, சேட் பண்றது, இல்ல அந்த வாரத்துல அவங்களுக்கான கல்ச்சுரல் ப்ரோக்ராம்ல என்ன செய்யப் போறாங்கன்னு யோசிக்குறது, அதுக்கு ரெடி ஆகுறது இந்த மாதிரி ஏதாவது செஞ்சுக்கலாம்.....!"

"1 மணிக்கு லன்ஞ்ச்! லன்ஞ்ச் முடிச்சதுக்கப்புறம் மொத்தமா வெஸல் க்ளீனிங் நிறைய இருக்கும்! லன்ஞ்ச் க்கு அப்புறம் ரெஸ்ட்.... 4 மணிக்கு கொஞ்ச நேரம் வாக்கிங்க்; அப்ப ப்ரூட் சாலட் இல்ல, புட்டு, கொழுக்கட்டை மாதிரியான லேசான ஹெல்த்தி ஸ்நாக்ஸ் ஏதாவது டிரிங்க்ஸோட இருக்கும்! ஸ்நாக்ஸ்ல இருந்து 7.30 வரைக்கும் மறுபடியும் அவங்களோட டைம் தான். 7.30 மணிக்கு டின்னர். 8.30 மணிக்கு பால்! அவ்ளோதான் ஷெட்யூல்....!"

"இதுபோக வாரம் ஒருக்க அவங்களுக்குள்ள கல்ச்சுரல் ப்ரோக்ராம் இருக்கும். கிச்சனுக்குள்ள, கார்டன்ல, வாஷிங் ஏரியாவுல, காமன் ப்ளேஸ்ல இப்படி ஒரு நாளைக்கு நாலு வேலையும் பாத்தவங்களுக்கு பிரகாஷ் ஸார் நூறு ரூபா தருவாங்க..... பசங்க அவங்களுக்காக ஒரு மாசத்துக்கு கட்டுற ஐயாயிரம் ரூபாய தவிர எங்க கையில கொஞ்சம் காசு இருந்தா நல்லாயிருக்கும்னு நினைக்குற பெரியவங்க கொஞ்சம் நல்லாவே வேலை பாப்பாங்க. நிறைய காசும் சேர்க்குறாங்க!"

"எங்க ஹோமோட காய்கறி, பழமெல்லாம் எங்களுக்கு தான்.... அடுத்து கோழியும், மாடும் வளர்க்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு! என்னையும் சேர்த்து இங்க எட்டு பேர் வொர்க் பண்றாங்க... ஆனா மாடு வாங்குனா சாணி அள்ளவும், மாட்டுக்கு தண்ணி காட்டவும் ஒரு ஆளு எக்ஸ்ட்ராவா வேணும்.... நீங்க எப்டி ஃப்ரீயா இருக்கீங்களா?" என்று கேட்டவனை இவ்வளவு நேரமாக பிரமித்து அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவள் அவனுடைய கடைசி வார்த்தையில் ரௌத்திரமுற்று,

"ஏ.....ய்! உன்ன!" என்று அடங்காத கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு அவனுடைய விலாவில் இருகைகளை வைத்து கல்பெஞ்சில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தாள்.

முருங்கைக்காய்க்கு டாப்ஸ் மாட்டி விட்டது போல் இருக்கும் இந்தப் பெண்ணிடம் இவ்வளவு வலிமையை எதிர்பார்த்திராத ஜெபசேகரன், தனக்கு நடந்து திடீர் தாக்குதலில் கல்பெஞ்சில் இருந்து பக்கவாட்டில் சாய்ந்து கீழே விழுந்து, விழுந்த மாத்திரத்தில் தரையில் இருந்து புடைத்து வளர்ந்திருந்த ஒரு வேப்பமர வேரில் முட்டிக் கொண்டான்.

"பிசாசு.... ராட்சஸி! இத்தூணூன்டா புளியாங்கொட்ட மாதிரி இருந்துட்டு, நம்பள கீழ தள்ளி உட்டுடுச்சே ஒல்லிக்குச்சி பூதம்!" என்று அவளை மனதிற்குள்ளாக தாறுமாறாக திட்டிக் கொண்டிருந்தவன்,

"மேனேஜர் ஸார்.... உங்க மூக்குல இருந்து ப்ளட்...!" என்று சொன்னவளுடைய வார்த்தையில் கொலைவெறியாகி,

"வந்தன்னிக்கே என் சில்லுமூக்க ஒடைச்சு உட்டுட்ட! இப்ப சந்தோஷமா? சும்மா வாயால பேசிட்டு தானடீ இருந்தேன்; நீயும் பதிலுக்குப் பேச வேண்டியதுதான? அத விட்டுட்டு எதுக்குடீ என்னைய கீழ தள்ளி விட்ட?" என்று அவளிடம் கேட்டான்.

"நான் லேசா தான் உங்க பாடியில கைய வச்சேன் மேனேஜர் ஸார்! நீங்க தான் இந்த காய்கறி எல்லாம் போய் உருண்டு உருளுற மாதிரி பொத்துன்னு விழுந்துட்டீங்க? நான் என்ன பண்ணட்டும்?" என்று அவனிடம் கேட்டு தோள் குலுக்கினாள்.

"ஏய்..... ரொம்ப வலிக்குது! போய் ஐஸ் க்யூப் கொண்டு வாயேன்!" என்று அவளிடம் கெஞ்சியபடி வலியால் முகம் சுளித்து தனது கைக்குட்டையால் ரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தவனிடம்,

"அப்ப உங்க ஜுஸ்! அத நான் குடிச்சிடட்டுமா?" என்று அவனிடம் ஆர்வமாக கேட்டாள் சம்யூ.

"ஐயோ.... எங்க உசுர எடுக்கறதுக்குன்னே அமாவாசையில பெத்து உன்னைய KL ல இருந்து இங்க அனுப்பி வச்சாய்ங்களாடீ? சீக்கிரமாப் போயேன்!" என்று முகம் சுணங்கிய படி சொன்னவனிடம்,

"போறேன்! போறேன்!" என்று சொல்லிக் கொண்டே ஓட்டமாக ஓடினாள் அந்த இளம்பெண்.

அன்று எட்டரை மணியளவில் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தவனின் ஸ்கூட்டியின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டவள், அவனது முறைப்பில் இறங்கி நின்று,

"ட்டூ மினிட்ஸ்! ஒண்ணே ஒண்ணு மட்டும் பேசிட்டு போயிடுறேன்!" என்றாள்.

"என்ன சொல்லு....!" என்று கேட்டவனிடம்,

"நீங்களும் தாத்தாவும் சேந்து செய்யுற வேலை பாக்குறதுக்கு ரொம்ப ஈஸியா தெரிஞ்சாலும், உண்மையில ரொம்ப கஷ்டமான வேலையாயிருக்கும் போலிருக்கு. அதுனால நீங்க உங்க வேலையப் பாருங்க. நான் என்னோட வேலையப் பாக்குறேன். வேலைய விட்டுடுங்கன்னு சொன்னதுக்கு ஸாரி; இனிமே சொல்ல மாட்டேன்!" என்று சொன்னவளிடம்,

"ம்ம்ம்! உன் தாத்தா வர்றாரா இல்ல நான் கிளம்பட்டுமா?" என்று கேட்டான்.

"ஏன் ஸார்.... காலையில எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் குடுத்தீங்க! இப்ப அதக் காணவே காணுமே? நீங்களும் என்னைய மரியாதயா தான் கூப்டுவேன்னு சொன்னீங்க!" என்று கேட்டவளிடம் பல்லைக் காட்டாமல் சிரிப்பது போல உதட்டை விரித்துக் காட்டியவன்,

"ஸாரி மிஸ் சம்யுக்தா..... கொஞ்சம் உள்ள போறீங்களா?" என்று அவளிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro