
❤ சிறுநகை 40
உன்னுடைய மனக்கலக்கத்திற்கு எல்லாம் என்னிடம் வேலையே இல்லை என்று சொல்லும்படி அவளிடம், "ஒரு நிமிஷம்டா லஷ்மி! இப்ப வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டுப் போனவன், டீவியை அணைத்து விட்டு, அந்த ஹாலின் விளக்கையும் அணைத்து, இரவு விளக்கை போட்டு விட்டு, ஜெபா மற்றும் தனக்குமாக சந்தனாவின் படுக்கையில் இருந்து முடிந்த அளவு தள்ளி படுக்கையை போட்டு விட்டு மறுபடியும் அவளுடைய படுக்கையில் வந்து ஒண்டிக் கொண்டான்.
அதற்குள் சந்தனா தன்னுடைய அலைபேசியில் அவன் ஏற்கனவே கேட்ட பாடலை ரிப்பீட் மோடில் ஓட விட்டிருந்தாள். இதுவரை மனம் சற்று உற்சாகமாக இருந்தால் ஏதாவது ஒரு பாடலை வாயில் முணுமுணுப்பாள் அவ்வளவு தான்..... ஆனால் இன்று இந்த
ஒருபாடலை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியதன் காரணம் தெரியவில்லை.
ஆளை முன்னும் பின்னும்
ஆசை பின்னும் பின்னும்
காதல் பெண்மைக்கு
இங்கு சோதனை
தேடும் இன்னும் இன்னும்
நூறு வண்ணம் வண்ணம்
மோகம் சுட்டதென்ன ஜீவனை
என்ற வரிகளைக் கேட்ட போது பாயில் கிடத்திய அவளுடைய தேகத்துடன் ஒட்டிக் கொண்டு கிடந்தான் கதிரேசன். சற்று நேரத்திற்கு முன்பாக தணிந்து அணைந்திருந்த மோகம் இப்போது அவர்களுடைய இரண்டு தேகத்தின் தொடுதலால் பொசுக்கென்று புதிதாய் புறப்பட்டது.
கைகள் பட்டு பட்டு
ஆசை மொட்டு விட்டு
தேகம் விட்டு விட்டு கூசுதே
பெண்மை கட்டுப்பட்டு
நாளும் வெட்கப்பட்டு
நாணம் தொட்டு தொட்டு பூசுதே
"ஏய் ரேஷன்.... கிஸ்ஸூக்கு மட்டும் ஏன்டா ஸ்டாப் சொல்ல மாட்டேங்குற? இப்டி கல்யாணத்துக்கு முன்னால
ஏகப்பட்ட கிஸ் குடுத்துக்கிட்டா நம்ம கற்பு கரைஞ்சு போயிடாதா?" என்று கேட்டவளின் தலையில் கொட்டியவன்,
"கற்பு என்ன கற்பூரமாடீ..... காத்துல கரைஞ்சு காணாம போறதுக்கு? இந்த முத்தமெல்லாம் உனக்கு நான் சின்ன வயசுல குடுக்கணும்னு நினைச்சு பத்திரப்படுத்தி வச்சுருந்தது தெரியுமா?" என்றவனிடம்,
"ம்ம்ம்.... சின்ன வயசுல குடுக்கணும்னு நினைச்சு வச்சுருந்தியா? அப்போ மட்டும் எம்பக்கத்துல வந்து என்னை இப்டி கட்டிப்புடிச்சுருந்த......? நிச்சயமா உன்னை அடி பிச்சிருப்பேன்!" என்று சொன்னவளின் காதிற்குள் தன் வாயிலிருந்து காற்றை ஊதினான்.
"அதான் எங்களுக்கு தெரியும்ல....? எட்டி எட்டி நின்னவன இழுத்து புடிச்சு வச்சே படாதபாடு படுத்துன.... இதுல உம்பக்கத்துல வந்து கட்டிப்புடிச்சுருந்தேன்னா இடுப்ப ஒடைச்சிருக்க மாட்ட? ஆனாலும் எனக்கு அப்டி ஒரு ஆச..... நெறய விஷயத்துக்கு அடம்பிடிச்சு, தங்கு தங்குன்னு குதிச்சுட்டு, நீ ஒக்காந்து அழுவியா? அப்போ உங்கிட்ட வந்து நின்னு, கண்ண தொடச்சு விட்டு, கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் குடுத்து அழாம சமர்த்தா இரு லஷ்மினு சொல்லத் தோணும்! ஆனா அது ரொம்ப ப்யூர் ஃபார்ம் ஆஃப் லவ்வும்மா! இந்த கதிர் பிஞ்சுலயே பழுத்தவனாங்குற மாதிரி நீ எதுவும் தப்பா யோசிச்சுடக் கூடாது! சொல்லிட்டேன்!" என்று சொன்னவன் கன்னத்தில் ஆனந்த மிகுதியால் அழுந்த ஒரு முத்தமிட்டவள்,
"கதிர்.... இப்ப நான் உங்கிட்ட ஐ லவ் யூ சொன்னா, நீ என்னை தப்பா நினைச்சுக்குவியா?" என்று மெல்லிய குரலில் அவன் முகம் பாராமல் கேட்டு முடித்தாள்.
"நம்ம சூனியபொம்மைக்கும் இப்டி காதல வாயால எல்லாம் சொல்லத் தெரியுமான்னு நெனச்சு ஆச்சரியம் தான்டா படுவேன். மத்தபடி இதுக்காக எல்லாம் நான் உன்னை தப்பாவே நினைச்சுக்க மாட்டேன்!" என்று சொன்னவனின் கன்னத்தின் அருகே வரை முத்தம் கொடுக்கும் எண்ணத்துடன் சென்றவள், அவனது கிண்டலை கேட்டு அவன் கன்னத்தில் தன் பல்தடத்தை பதித்திருந்தாள்.
"காதல கூட டெடரிஸம் மாதிரி ரொம்ப பயங்கரமானதா தான் காட்டுவியாடீ..... உன் பல்லென்ன பல்லா கோடரியா?" என்று கேட்டவன் தன் கன்னத்தை தேய்த்துக் கொண்டே
அவளை சற்று விலக்கி விட்டு கடிகாரத்தில் மணியைப் பார்க்க சந்தனா அவனை மறுபடியும் இறுகக் கட்டிக் கொண்டாள்.
"எல்லாரும் வர்ற டைமாயிடுச்சுடா லஷ்மி! என்னை விடு; நான் என் இடத்துல போய் படுத்துக்குறேன்!" என்று சொன்னவனின் நெற்றியில் முத்தமிட்டவள்,
"இது நமக்குள்ள எத்தனாவது முத்தம்னு தெரியல ரேஷன்; ஆனா அத்தன தடவ ஐ லவ் யூ!" என்று கேட்டவளிடம் சற்று ஏமாற்றக் குரலில்,
"ஏய்.... அது நாப்பதோ, ஐம்பதோ தான் இருக்கும்டீ! அத்தன தடவ தான் எனக்கு நீ ஐலவ்யூ சொல்லுவியா?" என்று உதடு பிதுக்கினான் கதிர்.
"போதும் போடா.....! எல்லாரும் வர்றதுக்குள்ள ரெண்டு பேரும் நிஜமா தூங்கிடுவோம்! அப்பத்தான் யாருக்கும் சந்தேகம் வராது; காலையில உன் ஃபாதர வேற சமாளிக்கணும். குட்நைட்!" என்றவளிடம் புன்னகைத்த படி இரவு வணக்கம் சொல்லி விட்டு தன்னுடைய இடத்தில் சென்று படுத்துக் கொண்டான் கதிர்.
மூவரும் வீட்டிற்கு வந்த போது கதிரும், அவளும் நன்றாக போர்வையை தலைவரை மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்றிரவில் காற்று கூட புகாத அளவில் ஒருவரது அணைப்பில் இன்னொருவர் கிடந்து விட்டு இன்று காலையில் ஒருவர் முகத்தை இன்னொருவர் ஏறிட்டு பார்க்க சங்கடப்பட்டு கொண்டு இருவரும் அந்த சிறிய வீட்டிற்குள் எதிர் எதிர் பக்கங்களில் ஓடி ஒளிந்து கொண்டதை நினைத்து சிரித்தபடி கடலலைகள் ஒவ்வொரு முறையும் தன் உடலை தழுவுவதை கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தான் கதிரேசன்.
ஒருபக்கம் தன்னுடைய தந்தையை தாயும், வருங்கால மனைவியும் இந்நேரம் தங்களுடைய கட்டளையை ஏற்கும்படி தட்டி வளைத்துக் கொண்டு இருப்பார்கள், இந்நேரம் நீ உன் வீட்டில் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று அவனது மூளை அவனுக்கு அறிவுறுத்தினாலும், அவள் தந்த கிறக்கம் அவனை பாடாய் படுத்தியது. வாழ்நாள் மொத்தத்தையும் அவமானத்திலும், சுயபச்சாதாபத்திலும் கடந்து வந்தவனுக்கு நேற்று கிடைத்த ஆனந்தம் அவனை மொத்தமாக வாரி சுருட்டிப் போட்டுப் போயிருந்தது. இதற்கு மேலும் தாமதித்தால் வேலைக்காகாது என்று நினைத்தவன் தன்னுடைய வேக நடையால் பதினைந்து நிமிடங்களில் தனது இல்லத்திற்கு அருகாமையில் வந்திருந்தான்.
"நான் போறேன்! இந்த வீட்ட விட்டுப் போறேன்...... எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டீங்கல்ல? நீ கூட எம்பக்கம் பேசாம இந்த கழுத உம்மூளையில என்னத்த ஏத்தி வச்சாலோ அத அப்டியே கிளிப்பிள்ள மாதிரி ஒப்பிக்கிற தான பாகேஸூ? ரொம்ப சந்தோஷம்..... எல்லாரும் நல்லாயிருங்க. நான் எப்டி போனா உங்களுக்கு என்ன கவல?" என்று பெருங்குரலில் தன் வீட்டிற்கு வெளியே வந்து
கத்திக் கொண்டிருக்க, அப்போது கல்பனாவின் வீட்டு வாசலின் வழியாக பக்கவாட்டில் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த கதிர் கிருஷ்ணராஜின் சத்தத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் லேசான ஓரப்பார்வையை மட்டும் செலுத்தி பார்த்து விட்டு, அவரை தாண்டி தன்னுடைய வீட்டின் உள்ளே செல்ல எத்தனித்தான்.
"டே நில்றா! இங்க ஒருத்தன் லோலோன்னு கத்திக்கிட்டு கெடக்கேன்! ஏதோ சினிமா சூட்டிங்க தூர இருந்து பாக்குற மாதிரி நீ பாட்டுல போற போக்குல ஒருபார்வ பாத்துட்டுப் போயிட்டே இருந்தன்னா என்ன அர்த்தம்? எம்புள்ள நீயாவது என்னைய மதிக்கிறியா இல்லையா?" என்று கேட்டவரை ஏற இறங்க பார்த்தவன்,
"இந்த கேள்விக்கு நான் ஒரே வார்த்தையில பதில் சொல்லிடுவேன். அது உங்களுக்கு தான் கொஞ்சம் அசிங்கமா இருக்கும்!" என்றான் கைகளை கட்டிக் கொண்டு.
"என்னடா கையில கொஞ்சம் பணஓட்டம் அதிகமானவுடனே பெத்த அப்பன பாத்தா கூட ஒனக்கு எகத்தாளமா தெரியுதுல்ல? உங்காசுல தான் ஒக்காந்து திங்கணும்னு எனக்கு ஒண்ணும் தலையெழுத்தில்ல! பாகேஸூ.... இந்த வீட்ட கட்டுன அந்த கல்பனாங்குறவ நம்மள காலி பண்ண சொன்னா சொல்லிட்டுப் போறா; பெரிய இவ..... அவளோட மூக்கு ஓட்ட சைஸூ வீட அவ காலி பண்ண சொன்னா நம்ம ரெண்டு பேரும் வாழுறதுக்கு ஒரு எடமா இல்ல? தலைக்கு மேல ஆகாசம்; தலைக்கு கீழ பூமி..... சாகுற வரைக்கும் எனக்கு நீ தான்; உனக்கு நான் தான்! வாம்மா..... நம்ம இந்த ஊருலயே வேற எங்கயாவது போய் வாழுவோம்!" என்று தன்னுடைய மகனையும், கல்பனாவையும் ஒருசேர திட்டி விட்டு, பாகேஸ்வரியிடம் பேசினார் கிருஷ்ணராஜ்.
"அங்கிள் உங்கள கூப்புடுறார் பாருங்க ஆன்ட்டி! அவர் கூட கிளம்பலையா நீங்க? அவர் கூட போனா நீங்க கால் மேல கால் போட்டு ராணி மாதிரி உக்காந்து சாப்டலாம்; ஒலகத்துல உள்ள மொத்த அன்பையும், மரியாதையையும் உங்களுக்கு குடுத்து உங்கள அப்டி பாத்துக்குவாரு..... ம்ம்ம்! இன்னும் எதுக்கு யோசிச்சுட்டு இருக்கீங்க? கிளம்புங்க!" என்று சொன்ன சந்தனா தன் கையில் ஒரு பட்டர்ஸ்காட்ச் கோனை வைத்து அதை சுவைத்துக் கொண்டே பாகேஸ்வரியிடம் பேசினாள்.
"நீ கொஞ்ச நேரம் சும்மாயிரு சந்து!" என்று அவள் தோளைப் பற்றிய தம்பியிடம் ஆச்சரியத்துடன்,
"ஏய்..... என்னடா! சினிமாவுல பாக்குற மாதிரி இங்க எப்டி ஒரு பாசப் போராட்டம் நடந்துட்டு இருக்கு! நம்ம அம்மாவ விட கிருஷ்ணராஜ் அங்கிள் சூப்பரா பேசுறாரு! சாகுற வரைக்கும் எனக்கு நீ தான்; உனக்கு நான் தானாம்; இப்டியெல்லாம் யாராவது பேச முடியுமா? ஆன்ட்டி மேல இவருக்கு எவ்ளோ லவ்? அடடடா! பாக்குறப்பவே எங்கண்ணுல ஆனந்தக்கண்ணீரே வருது!" என்று உச்சுக்கொட்டி சொன்ன சந்தனாவின் மேல் அடங்காத ஆத்திரத்துடன் அவளை காயப்படுத்தும் நோக்கத்தில் கையை நீட்டியிருந்தார் கிருஷ்ணராஜ்.
தன்னுடைய அக்காவின் முகத்தில் அடிபடும் முன் தடுக்க அவள் முன்னால் சென்று நின்ற ஜெபா கிருஷ்ணராஜின் கரத்தைப் பற்றியிருந்தான்.
"கைய விடுறா! நீங்க ரெண்டு பேரும் என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க? உங்க அக்காகாரி என்னடான்னா வந்ததுல இருந்து எங்கிட்ட வாயாடிக்கிட்டு இருக்கா! உங்க ஆத்தாக்காரிய விட நான் நல்லா பேசுறேன்னா என்னையும்
இவ நடிக்குறவன்னு தான சொல்றா? இப்டி திமிரெடுத்துப் போய் வாய் பேசுறவள கண்டிக்க நான் கைய ஓங்குனா, நீ முன்னால வந்து விழுந்து எங்கைய புடிக்குற! அதுசரி...... காச வாங்கிட்டு கேமராக்கு முன்னால நடிக்கிறதுக வீட்ல வளந்ததுகன்னா இப்டித்தான் இருக்கும்! வேற எப்டி இருக்கும்?" என்று கேட்ட தன்னுடைய கணவரின் முன் வந்து நின்றார் பாகேஸ்வரி.
கதிர் நடக்கும் அனைத்தையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாலும் அவனுடைய தந்தையின் பேச்சைக் கேட்டு தன் கை முஷ்டியை இறுக்கிக் கொண்டிருந்தான்.
"அந்த ஹீரோயினம்மாவோட வேலையப் பத்தி பேசுறதுக்கோ, இல்ல இவங்க ரெண்டு பேரோட காரெக்டர் இப்டித்தான் இருக்கும்னு முடிவு பண்றதுக்கோ நீ யாருய்யா?" என்ற கேள்வியை இப்போது தன் தந்தையின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்க நினைத்தாலும் அவனது அன்னையை நினைத்து பேசாமல் நின்று கொண்டிருந்தான்.
"என்னங்க! நீங்க பேசுறது ரொம்ப தப்புங்க; சுமாம்மா அவங்கள சுத்தி இருக்கற அத்தன பேருக்கு கேக்குறதெல்லாம் அள்ளி அள்ளி குடுத்தவங்க தெரியுமா? சம்பாதிச்ச மொத்தத்தையும் அவங்க பத்திரமா வச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு நாம நம்ம மருமக பக்கத்துல கூட நின்னுருக்க முடியாது. அவ்ளோ உயரத்துல இருந்துருப்பாங்க! ஒருத்தரோட தொழிலப் பத்தியோ, இந்த புள்ளைங்க ரெண்டு பேரோட இயல்ப பத்தியோ பேசுறதுக்கு நாம யாருங்க? நம்ம மருமகள கைய ஓங்குறதுக்கு போயி அந்த புள்ளயையும் அவ பொறந்த வீட்டையும் பத்தி இப்டி தரக்குறையா பேசுறீங்களே? எனக்கு புருஷனா வரப்போறவனுக்கு நீயே சம்பாதிச்சு உங்காசுல ஒருவேள சோறாவது போட்டுருக்கியாய்யான்னு அந்தப்புள்ள உங்கள பாத்து கேட்டுச்சுன்னா உங்க மொகத்த எங்க கொண்டு போய் வச்சுக்குவீங்க! அநாவசியமா யாரைப் பத்தியும் வார்த்தைய உடாதீங்க!" என்று பேசியவரின் பேச்சை கேட்டு மகிழ்ந்த சந்தனா,
"இது சூப்பர் கூல் ஸ்பீச்ப்பா!" என்று சொல்லி கையை தட்டினாள்.
"ஓ..... நா ஒண்ணும் சம்பாதிக்காத வெத்து வேட்டுங்குறது உனக்கு இப்பத்தா தெரிஞ்சுச்சாடீ --------- "? எல்லாரும் கூட்டு சேந்துக்கிட்டு என்னைய மட்டும் அப்டியே த்ராட்ல உட்டுடலாம்னு நெனச்சீங்களா? நான் இல்லாம போனா நீ மறுபடியும் தெருவுல தனியா நின்னு பிச்சதான்டீ எடுக்கணும்; நியாபகத்துல வச்சுக்க!" என்று தன் மனைவியிடம் அடங்காத சினத்தில் திமிருடன் பேசியவரிடம் இரண்டெட்டில் சென்று அவரது
குரல்வளையை ஒருகையால் பற்றியிருந்தான் கதிர்.
"உன் சில்ற புத்திய பத்தி நல்லா தெரிஞ்சுருந்தாலும், போனா போவுது எங்கம்மாவுக்கு ரொம்ப பிடிச்சவனாச்சேன்னு நீ பேசுறதையெல்லாம் பொறுத்துட்டு கேட்டுட்டு இருந்தா....... எங்கம்மாவயே நீ கண்டமேனிக்கு பேசுவியாய்யா? அவங்கள நீ விட்ட மாதிரி நானுமே இந்த நிமிஷம் அநாதியா விட்டாலும் அவங்க ரோட்டுல நின்னு பிச்சையெல்லாம் எடுக்க மாட்டாங்கய்யா! மானத்தோட அவங்களுக்கு தெரிஞ்ச வேலைய செஞ்சு, ஒருபருக்கை சாப்டாலும் உழைச்சு தான் சாப்டுவாங்க. அடுத்தவன் காச பிடுங்கித் திங்குறது, ஏச்சு பொழச்சு திருடித் திங்குறது....... இந்த மாதிரி எச்ச வேலையெல்லாம் நீ தான் பண்ணுவ! நீ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைன்னாலும் இனிமே எங்கம்மா எங்கூட என் வீட்ல தான் இருப்பாங்க. அவங்க சம்மதத்தோட நான் சந்தானலஷ்மிய தான் கல்யாணம் பண்ணிக்குவேன்; இன்னொருதடவ எங்கம்மாவ பத்தியோ, எம்பொண்டாட்டிய பத்தியோ, எனக்குப் பிடிச்ச மனுஷங்க யாரப் பத்தியுமோ உன் வாயில இருந்து ஒருவார்த்த தப்பா வந்தது..... அப்டியெல்லாம் பேசுறதுக்கு உன் வாய்க்குள்ள நாக்கு இருக்காது பாத்துக்க! நான்
உங்க ரெண்டு பேரையும் அங்க கூட்டிட்டுப் போற வரைக்கும்
இன்னும் ஒருவாரத்துக்கு வந்தமா, தின்னமா, படுத்தமான்னு
வால சுருட்டிக்கிட்டு இருக்கணும்! இல்ல....... நீ எங்கம்மா நகைய திருடுனது, கல்பனாக்காட்ட பணத்த திருடுனது இது எல்லாத்தையும் நான் போலீஸ்ல கம்ப்ளையிண்ட் பண்ண வேண்டியதிருக்கும்! புடி..... இது இந்த மாசத்துக்கு உனக்கு நான் குடுக்க வேண்டிய பணம்! உன் மரியாதய இதுக்கு மேல காப்பாத்திக்குறது உங்கையில இருக்கு!" என்று சொன்னவன் அவர் கையில் கற்றையாக பணத்தை திணித்துவிட்டு,
"சேகர், லஷ்மிய வீட்டுக்குள்ள கூட்டிட்டு வாடா!" என்று ஜெபாவிடம் சொல்லி அவனுடைய அன்னையை தான் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
மனைவி, மகன், வருங்கால மருமகள், அவளுடைய தம்பி அனைவரிடமும் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய கையில் கொத்தாக திணிக்கப்பட்டிருந்த பணம் தனக்கான மரியாதையை காப்பாற்றி தரும் என்று நினைத்த கிருஷ்ணராஜ் வீட்டிற்குள் செல்லாமல் கதிர் தந்த பணத்தை தன்னுடைய சட்டைப்பையில் வைத்துக் கொண்டு அப்போதும் வெளியில் சுற்றுவதற்காக தான் கிளம்பினார்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro