Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 12

நால்வருமாக இணைந்து அவரவருக்கு வேண்டியதை எடுத்துப் போட்டுக் கொண்டு, பேசிச் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர். இவள் பக்கத்தில் உட்கார்ந்து கதிர் இவ்வளவு குதூகலமாக சாப்பிடுவது அவனுக்கு இதுவே முதல் முறை.

முன்பெல்லாம் சுமலதாவின் வீட்டில் பார்ட்டி என்றால் மாலை நாலு மணியிலிருந்து இரவு ஒன்பதரை பத்து மணி வரையில் ஒட்டிய வயிறுடனே தான் வரும் கெஸ்ட்டுகளுக்கு சர்வீஸ் செய்து கொண்டிருப்பான் கதிர்.

பார்ட்டி முடிந்து பாகேஸ்வரி உட்பட ஏழெட்டு வேலைக்காரர்கள் உணவருந்தும் வேளையில் சரியாக அவர்கள் சாப்பிடும் இடத்தில் வந்து நின்று காக்கை வடையைக் கவ்வுவது போல அவள் இவனை துண்டாக கவ்விக் கொண்டு சென்று விடுவாள்.

"நீங்க எல்லாரும் இங்க நல்லா சாப்புடுங்க; நானும் சேகரும் கதிர்க்கு ஸ்பெஷல் டிஷ் எல்லாம் தனியா எங்க வீட்டு கிச்சன்ல எடுத்து வச்சுருக்கோம். சிக்கன் வெரைட்டி, கேக், ஐஸ்க்ரீம் எல்லாம் உள்ள நிறைய இருக்கு.....!" என்று ஆசை ஒழுக பேசி அவனை அழைப்பவளிடம் எவருக்கு சந்தேகம் வரும்?

"லெஷ்மி பாப்பா கூடப் போயி நீ சாப்ட்டு வா தங்கம்! அது ஆசையா ஒன்னக் கூப்டுது பாரு!" என்று சொல்லி பாகேஸ்வரியும் சந்தோஷமாக அவனை அவளுடன் அனுப்பி வைப்பார். இருக்கும் மிச்ச உணவை சாப்பிடாமல் எஜமானி வீட்டு உணவை மகன் வயிறார சாப்பிடட்டும் என்ற நினைப்பு அந்த பெண்மணிக்கு! கதிரும் தன் தாயின் பேச்சுக்கு மறுப்பு எதுவும் பேசாமல் அவரிடம் தலையாட்டி விட்டு அவளுடன் செல்வான்.

இவனைப் படுத்துவது இப்படி என்றால் பாகேஸ்வரியை சின்ன எஜமானி படுத்துவது சற்றே ஏ டைப் டார்ச்சர்! காலை ஆறு மணியில் இருந்து, இரவு பத்தரை மணி வரை தொட்டு தொட்டு ஏதாவது வேலை செய்து விட்டு
பதினொன்றரை மணியளவில் குறுக்கு வலியுடன் படுக்கையில் விழுபவரின் இடையைப் பற்றிக் கொண்டு அவருடைய குட்டி வீட்டில் வந்து படுத்துக் கொள்வாள் சந்தனா.

அரைமணி நேரம் அந்த மகாராணிக்கு கதிரின் அன்னை ஏதாவது கதை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்! அதுவரையில் அவன் அந்த வீட்டினுள் செல்லாமல் அந்த சிறிய வீட்டின் வெளியே கொசுக்கடியில் அமர்ந்திருக்க வேண்டும்!
தங்கள் மொத்த வாழ்க்கையையும் சேர்த்து இப்படிப் படுத்துபவளைப் பார்த்து கோபத்தில் அடிக்கடி
"இது லச்சுமி இல்ல! என்னைப் புடிச்ச லங்கினி!" என்று நினைப்பான் கதிர்.

வீட்டிற்குள் சென்றதும் அவனுடைய கூற்றுப்படி லஷ்மி லங்கினியாகத் தான் மாறி விடுவாள்; தனித்தனியாக உணவை அளப்பதற்கென்று அளவைகளையும் கையிலேயே வைத்திருப்பாள். நூறு மில்லி தண்ணீர் தருவதற்கு கூட அவனை முட்டி போடு, குட்டிக்கரணம் போடு, ஆட்டம் போடு, பாட்டுப் பாடு, உணவைத் தாவிப் பிடித்து எடுத்துக் கொள் என்று பாடாய்ப்படுத்தி எடுப்பாள் சந்தானலஷ்மி. அவள் இந்த மாதிரியான கட்டளைகளை விதிக்கும் போது சமையலறைக்குள் வேறு யாரும் வந்து விடாமல் கண்காணிப்பான் சேகர்.

இவள் தரும் கால் லிட்டர் தண்ணீருக்கும், அவனது கால் வயிறை நிறைக்கும் சோற்றுக்கும் கதிர் அவளது ஏவல்களை எல்லாம் செய்வதில்லை. அவளது குண்டான கண்கள், முழுதும் நிறைந்தது என்றாலும் கலகலவென்ற அவளது சிரிப்பு, வளர்ந்த ஒரு ஆணின் முன் குதிரைக் குட்டி போல் துள்ளித் துள்ளி குதிக்கும் அவளது வெகுளித்தனம் இதெல்லாம் அவனை அவள்பால் இழுத்து வைத்திருந்தன.

அவளது செயல்பாடுகள் இன்னும்
எத்தனை குரூரமாக இருந்தாலும் நாம் இவள் மேல் உள்ள உண்மையான அன்பினால் தான் இவள் முன் மண்டியிட்டு நிற்கிறோம் என்பது கதிரின் எண்ணம். இல்லையென்றால் அக்காளும், தம்பியும் இவனையும், பாகேஸ்வரியையும் படுத்தும் பாட்டுக்கு எப்போதோ இவன் இந்த இடத்தில் வேலை செய்வதை நிறுத்தியிருக்க வேண்டும்.
இதுமாதிரியான சில அனுபவங்களுக்குப் பிறகு பார்ட்டி என்றாலே அன்று கால்வயிறு உணவு தான் என்று நினைத்து மனதை தேற்றிக் கொள்வான் கதிர்.

இன்று சாப்பிட அமர்ந்ததும் நிறைய பழைய விஷயங்கள் தானாக நினைவிற்கு வந்ததை நினைத்துக் கொண்டே சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்ததும் ஆலெனிடம், "ஸார்.... உங்க கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஸார்!" என்று சொல்ல சந்தனா வேகமாக ஓடிச் சென்று அவன் புஜத்தைப் பற்றிக் கொண்டு,

"நீ வீட்டுக்கு கிளம்பு. அப்புறமா வந்து எல்லாத்தையும் பேசலாம். ஆலென் டையர்டா இருக்காரு. நாங்க எல்லாரும் தூங்கணும்ல?" என்று சற்று கெஞ்சலான குரலில் அவனிடம் கேட்டாள்.

அவளது கெஞ்சல் குரல் கதிருக்கு இருமடங்கு உற்சாகத்தை அளித்தது. "நான் ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டேன்மா; ஜஸ்ட் டென் மினிட்ஸ்; அதுக்குள்ள பேசிட்டு கிளம்பிடுறேன்!" என்று சொல்லி விடாக்கண்டனாக அங்கேயே அசையாமல் நின்றான் கதிர்.

"சந்து.... உனக்கு தூக்கம் வந்தா நீ போய் படு; கதிர்ணா எங்கிட்ட ஏற்கனவே அவர் பேச நினைச்ச மேட்டர பேசிட்டாரு; அவருக்கு இங்க 5 ஷாப்ஸ் இருக்குல்ல.... அந்த ஷாப்ஸ் எல்லாத்துக்கும் நம்ம அப்பாவ மேனேஜரா இருக்க முடியுமான்னு கேக்க தான் இப்ப இங்க வந்துருக்காரு....."

"நம்ம அப்பாவோட ஸாலரி எவ்ளோன்னு கேட்டாரு; சொன்னேன்! அதுல இருந்து ஆலெனுக்கு மேனேஜர் போஸ்டிங் குடுக்குறதுல ரொம்ப தீவிரமா இருக்காரு. நம்ம நேரம் கரெக்டா டூத்பேஸ்ட் ஷாஸே வேற அவர விட்டுக் கெளம்புதா? ஸோ ஒரு நம்பிக்கையான ஆள் அவரோட பிஸினஸ பார்த்துக்க தேவைப்படுறாங்க!"

"நம்ம ஆலெனுக்கு இனிமே டெய்லி கார்லயே ரவுண்ட்ஸ் தான்; கடைங்க எல்லாத்தையும் பொறுப்பா மானிட்டர் பண்ணனும்ல? நீ என்ன சொல்ற ஆலென்?" என்று சொல்லி விட்டு தனது தந்தையின் அபிப்ராயத்தைக் கேட்டான் ஜெபா.

"கதிர்.... முன்னால நீ நம்ம வீட்ல வேல பார்த்தப்ப உன்னை சுமா சந்து, ஜெபா இவங்க மூணு பேருமே நிறைய படுத்தியிருக்காங்க. நம்ம வீட்ல வேலை பார்க்குறவங்களும் மனுஷங்க தானேங்குற ஒரு அடிப்படையான மனிதாபிமானம் கூட இல்லாம ட்ரைனேஜ் கழிவையெல்லாம் கூட உன் மேல தூக்கி அடிக்க சொல்லியிருக்காங்க. இந்த சம்பவம் எல்லாமே உன் மனசுல இருந்து சுத்தமா மொத்தமா அழிஞ்சுருக்காது இல்லையா? எல்லாத்தையும் மறந்து மன்னிக்க நாம ஒண்ணும் மகாத்மா இல்லையே? சாதாரண மனுஷங்க தானே? உனக்கு நான் குடுத்த பணத்தையும் ஒரு மடங்குக்கு பல மடங்கா திருப்பிக் குடுத்துட்ட! இப்ப எனக்கு உனக்கு சொந்தமான கடைகள கவனிச்சுக்குற வேல வேற தர்றதா சொல்ற? எதுக்காகப்பா இதெல்லாம் செய்யுற? உனக்கு எம்பிள்ளைகள காயப்படுத்துற எண்ணம் எதுவும்  இல்லையே?" என்று கேட்டவரின் குரல் சற்றே தடுமாறி நடுங்கியது.

"நீங்க பயப்படுறது நியாயந்தான் ஸார்! சந்தானலஷ்மியும், சேகரும் என்னை படுத்தின பாடு கொஞ்சநஞ்சமில்லை. நான் அவங்களோட வயசுல இருந்த பையனுங்குறதாலயோ என்னவோ என்னைக் கண்டாலே அவங்களுக்கு தனியா ஒரு உற்சாகம் வந்துடும்!"

"நீங்க சொன்ன மாதிரி நான் ஒண்ணும் மகாத்மா இல்ல தான் ஸார்..... இவ எங்கிட்ட பேசுன நீ எங்க? நான் எங்க? எவ்ளோ பெரிய உயரத்துக்கு வந்தாலும், நீ என்னை பிடிக்க முடியாதுடா! எப்பவுமே நீ எனக்கு கீழ தான்; என்னை ஜெயிக்குறத பத்தி இல்ல; எம்பக்கத்துல நிக்குறத பத்திக் கூட ஒருநாளும் யோசிச்சுடாதங்குற வார்த்தையும் என் நெஞ்சுல ஆணியடிச்சாப்ல அப்டியே தான் இருக்கு.....!"

"இவளோட பேச்ச எம்பொண்டாட்டியா எம்பக்கத்துல வந்து நின்னு இவளே தான் சரி பண்ண முடியும்......! சந்தான லஷ்மியோட அப்பாங்குறதால நான் உங்கள எங்கிட்ட வேல பாக்க சொல்லல ஸார்; இந்த ஊர்ல எனக்கு தெரிஞ்ச நம்பிக்கையான ஆட்கள்ல நீங்களும் ஒருத்தர்! இவளுக்கு என்னல்லாம் ரொம்ப பிடிக்கும்னு யோசிச்சு யோசிச்சு தான் ஒவ்வொரு கடைகளையும் நான் வாங்குனேன்.......!"

"எனக்கு இவ தந்த அவமானமெல்லாம் இவ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா குறைஞ்சு மறைஞ்சு கடைசில காணாமலேயே போயிடும்; நிறைய முயற்சி பண்ணி பார்த்துட்டேன். கல்யாணம்ங்குற பேச்செடுத்தால என்னால இவளத்தவிர வேற யாரையும் நினைப்பால கூட எம்பக்கத்துல நிறுத்த முடியல!"

"மேடம் ஊர்ல இருந்து வந்த பிறகு நீங்க அவங்க கூட நல்லா கலந்து பேசி யோசிச்சுட்டு நான் சொன்ன வேலைய எடுத்துக்குறீங்களா, இல்ல நம்ம ரிலேஷன்ஷிப்ப ஏத்துக்குறீங்களா இல்ல ரெண்டுமே ஓகேதானான்னு சொல்லுங்க.....!"

"சத்தியமா இவங்கள காயப்படுத்துற நோக்கத்துல நான் இதக் கேக்கல. நாம எல்லாரும் ஒரே குடும்பமா சந்தோஷமா ஒரு வாழ்க்கை வாழுறதுக்காக தான் பேசிட்டு இருக்கேன். நான்
கிளம்புறேன் ஸார். சேகர் பாக்கலாம்டா, நீ எங்கூட வா!" என்று சொல்லி ஆலென், ஜெபாவிடம் விடைபெற்றவன் அவளது கையைப் பற்றி அவனுடன் இலகுவாக அவளை இழுத்துப் போய்க் கொண்டிருந்தான்.

"ஜெபா..... கதிர் ஒரு மரியாதைக்காக தான் நம்ம கிட்ட பெர்மிஷன் கேக்குறான் போலிருக்கே? இவங்க ரெண்டு பேருக்குள்ள ஆல்ரெடி ஏதோ ஒரு பெட்டர் அண்டர்ஸ்டான்டிங் ஓடிட்டு தான் இருக்கு போல..... நம்ம சந்து கையப் புடிச்சு அவன் பாட்டுக்கு அவள வெளிய கூட்டிட்டுப் போறான்?" என்று அதிசயித்த படி பேசிய ஆலெனிடம்,

"ஆமா டாட்! எனக்கும் நீங்க சொல்றது கரெக்டா தான் படுது; நம்ம வீட்டு சாத்தானும் வாய மூடிட்டு கதிர்ணா பின்னாலயே போகுது பாருங்களேன். கதிர்ணா குடுத்த ஆஃபரை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க டாட்?

"அவருக்கு சின்ன வயசுல இருந்தே சந்து மேல ஒரு க்ரஷ் போலிருக்கு. ஏதோ அவள எனக்குப் பிடிச்சதுனால உங்களுக்கு நான் இந்த பிச்சை போடுறேன்னு திமிரா பேசாம எல்லாரும் ஒரே பேமிலியா இருக்கலாம்னு எவ்ளோ ஹம்பிளா பேசுறாரு; எனக்கு கதிர்ணா சந்துவோட பெட்டர்ஹாஃபா வர்றதுல ரொம்ப சந்தோஷம் டாட்! இதுக்கு மேல நீங்களும், மாமும் யோசிச்சுக்கோங்க!" என்றவன் புன்னகையுடன் தன் தந்தைக்கு இரவு வாழ்த்து தெரிவித்து விட்டு அந்த வீட்டின் ஹாலில் இருந்த ஸேஃபாவை கட்டிலாக மாற்றி அதில் படுத்துக் கொண்டான்.

சந்தனாவை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தவன், அவள் காம்பவுண்டை தாண்டி அவளை தன் காரின் உள்ளே ஏற்றிவிட்டு, அவனும் ஏறினான்.

"டேய்.... எங்கடா போகப்போற?" என்று கேட்டு பதட்டமடைந்தவளிடம்,

"எங்கயும் போகப்போறதில்ல; காருக்குள்ளயே தான் உக்காந்து பேசப் போறோம்; இப்ப பேசாத,
அப்புறம் பேசுன்னு சொன்னியே? ஏன் அப்டி சொன்ன? நான் இப்ப உங்க அப்பாட்ட பேசுனா தானே, உங்கப்பா உன் அம்மாட்ட நம்ம விஷயத்த பேசுவாரு.....?"

"அப்புறம் அவங்க என்னை கூப்ட்டு அனுப்புவாங்க? நம்ம ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா?" என்று கேட்ட கதிரிடம் அவனது பேச்சுக்கு குத்து மதிப்பாக தலையாட்டி வைத்தாள் சந்தனா.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro