Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 100

"வர்ணாலயம்" என்ற பெயருடைய கதிருடைய கனவு சாம்ராஜ்யத்தின் கதவுகளை திறந்து வைத்த மாணிக்கவேல் அதனுடைய நிலையில் கலர் பொடிகள் கட்டி வைக்கப்பட்டிருந்த பலூன்களை உடைத்து விட நிறைய வர்ணங்கள் அந்த ஸ்கூலின் வாயிலில் தெறித்து சிதறியது.

வர்ணாலயத்தின் வகுப்புகளுக்காக முன்பதிவு செய்த அனைவருக்கும் ஒரு லைவ் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அந்த விழாவை பார்ப்பவர்கள் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

தங்களது பட்டு பாவாடைகள்  சரசரக்க இரண்டு குத்துவிளக்குகளுடன் மாணிக்கவேலுக்குப் பின்னால் அடியெடுத்து வைத்த அவரது பேத்திகள் அந்த பெரிய ஹாலில் நிதானமாக நடந்து சென்று பிள்ளையார், லஷ்மி, சரஸ்வதி இந்த மூன்று தெய்வங்களும் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முன்னால் தங்களுடைய கையில் வைத்திருந்த விளக்கை கொண்டு சென்று வைத்தனர்.

பாகேஸ்வரி ஒரு விளக்கை ஏற்ற, சுமலதா ஒரு விளக்கை ஏற்றி அனைவரும் முதல் வேலையாக கடவுளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

எனக்கென்ன என்று அங்கே பார்வையாளராக நின்று கொண்டிருந்த ஜெபாவிடம் சன்னமான குரலில், "டேய் சாமி கும்பிடு!" என்று சொன்னாள் சம்யூ.

"உனக்கு தெரிஞ்ச சாமியவா? எனக்கு தெரிஞ்ச சாமியவா?" என்று கேட்டவனிடம் உச்சுக்கொட்டியவள்,

"இங்க நாம எந்த சாமி பெரிசுன்னு
பட்டிமன்றமெல்லாம் நடத்த முடியாது ஜெபா! அன்பு தான் கடவுள்னு சொல்றாங்க.... ஸோ நீ பேசாம இந்த ஸ்கூல்ல எப்பவும் அன்பு நிறைஞ்சு இருக்கணும்னு கும்பிட்டுடேன்!" என்றாள்.

அவளை ஒருமாதிரியாக பார்த்து வைத்தவன் கண்களை மூடிக் கொண்டு தன்னுடைய வாய்க்குள் ஏதோ ஜபிக்க ஆரம்பித்து விட்டான்.

"பாஸ்..... லைவ் போயிட்டு இருக்கு; ஸோ இந்த அக்கேஷன்ல ஒரு மெசேஜ்!" என்று கண்சிமிட்டி கேட்க வினோதினி ஆச்சரியமான பார்வையுடன்,

"என்ன பாஸா? கதிர நீ அப்டித்தான் கூப்டுவியா சஞ்சு?" என்று மகனிடம் கேட்டார்.

"ஆமாம்மா! கதிர் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாஸ்.....!" என்று சொன்னவன் கதிரை நோக்கி ஆரம்பியுங்கள் என்று சைகை செய்தான்.

"எல்லாருக்கும் வணக்கம். நான் ஆர்ட்டிஸ்ட் ரேஷ்! என்னைப் பத்தி உங்களுக்கு கொஞ்சமா தெரிஞ்சுருக்கலாம்! இன்னிக்கு என்னோட ஒரு பெரிய ட்ரீம் என்னோட தம்பியாலயும், என் வொஃய்பாலயும் என் கையில கிடைச்சுருக்கு!"

"என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு என் பெயிண்டிங்க் தான் எல்லாத்தையுமே குடுத்தது. ஸோ அதுக்காக நான் எதையாவது திருப்பிக் குடுக்கணும்னு நினைச்சேன். குடுக்கணும்னு நினைச்சேனே தவிர அத எப்டி செய்யப்போறோம், எப்ப செய்யப்போறோம்ங்குற ஒரு தெளிவு எனக்குள்ள இல்லாம இருந்தது. அப்போ என்னோட மனைவி தான் இந்த மாதிரியான ஒரு யோசனையை குடுத்து, இப்ப இந்த வர்ணாலயத்துல எங்கூட மாரல் ஸப்போர்ட்டா நிக்குறாங்க!" 

"உங்களுக்கு இந்த கலைய கத்துக்கணும்ங்குற ஆர்வம் மட்டும் இருந்தா போதும்; தாராளமா நீங்க இங்க வாங்க! துரோணர் ஏகலைவன் கிட்ட கேட்ட மாதிரி கட்டைவிரலை எல்லாம் குருதட்சணையா கேக்க மாட்டேன்! ஏதாவது ஒரு கலையால தான் வாழணும்ங்குற மாதிரியானவங்களுக்கு நீங்க இத கத்துக்குற வரைக்கும் நான் தர்றேன் பணம்! மத்தபடி இந்த ட்ராயிங்க் ஸ்கூல் நல்லா டெவலப் ஆக உங்க ஸப்போர்ட்ட குடுங்க! தேங்க்யூ!" என்று தன்னுடைய மனைவியைப் பார்த்தபடியே மொபைல் லைவில் அனைவருக்கும் ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு தன்னுடைய பேச்சை முடித்தான் கதிர்.

"சம்பந்தி, சம்பந்தி அம்மா ரெண்டு பேரும் வாங்க! உங்களோட ஸீட்ல உக்காருங்க!" என்று அழைத்த பாகேஸ்வரியின் வடிவான முகத்தையும், நெற்றியில் அவர் வைத்திருந்த வட்ட பொட்டையும், திருநீற்று கீற்றையும் பார்த்த சந்தனா தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

"யேய்.... என்னாடி? நிக்க கூட சீவன் செத்துப் போயி நின்னுக்கிட்டு இருக்குற? என்ன பண்ணுது உனக்கு?" என்று கேட்டு சந்தனாவுடைய தோள் பற்றிய கல்பனாவிடம்,

"ஒண்ணுமில்ல கல்ப்பு..... உந்தம்பி ஜெயிச்சுட்டான்ல! அந்த சந்தோஷம் தான்..... வேற ஒண்ணுமில்ல!" என்று சொல்லி புன்னகைத்தாள் சந்தனா.

"உன் மொகரகட்டையப் பாத்தா சந்தோஷப்படுற மொகரக்கட்ட மாதிரி தெரியலயே..... அவேன் வேற தூரத்துல நின்னுட்டு ஒன்னைய அப்பத புடிச்சு மொறச்சு
மொறச்சு பாத்துக்கிட்டு இருக்கான்.... அவங்கையில தனியா மாட்டுன? வச்சு செய்யப்போறான் பாரு!" என்று சொன்ன கல்பனாவை அழைத்துக் கொண்டு ஆலென், சுமலதாவினுடைய அருகில் சென்றாள் சந்தனா.

"அத்தை, மாமா! நமக்கு இந்த ஸ்கூல்ல இருந்து வருமானம் முக்கியந்தான்... ஆனா அதை விட ஆர்வமுள்ளவங்க கத்துக்குறது முக்கியம்! பாத்து நடந்துக்கங்க! இன்னிக்கு ஈவ்னிங்ல இருந்து நாம அட்மிஷன்ஸ் போட ஆரம்பிச்சுடலாம்! என்னோட ஆசை, கனவு, லட்சியயெல்லாம்
உங்களோட கையில தான் இருக்கு! நீங்க மனசு வச்சா தான் சரியானவங்களுக்கு இத என்னால சொல்லிக் குடுக்க முடியும்!" என்று அவர்களிடம் அழுத்தி சொன்னவனிடம்,

"கண்டிப்பா இந்த விஷயத்துல நீங்க எங்கள நம்பலாம் மாப்ள!" என்று ஆலெனும் சுமலதாவும் ஒரே குரலில் கதிரிடம் சொல்லி விட்டு பின்னர் சிரித்துக் கொண்டனர்.

நேரம் கிடைத்த போது தனியாக ஒதுங்கிப் போய் குணாளினியிடம் ஆசையாக பேசிக் கொண்டிருந்தவன் பின்னால் வந்து நின்றான் கதிர்.

"ம்ப்ச்! மணி என்னாச்சு? இன்னும் சாப்டலன்னு சொன்னா என்ன அர்த்தம்? அறிவு இருக்கா இல்லையா உனக்கு? சாப்ட்டா வாந்தி வருதுன்னா அதுக்காக சாப்டாமலே இருப்பியா? இப்பத்தான் நாப்பது நாள் ஆகியிருக்கு! இன்னும் ஒண்ணு ரெண்டு மாசம் வரைக்கும் இப்டித்தான் இருக்கும்னு டாக்டர் சொன்னாங்கல்ல? அப்புறம் ஏன்டீ சாப்டாம ஒக்காந்துட்டு இங்க இருக்குறவனுக்கு பிபி ஏத்தி விட்டுட்டு இருக்க? இரு.... உன்னைய ஊருக்கு வந்துட்டு பேசிக்குறேன்!" என்று தன் மனைவியிடம் கத்திக் கொண்டிருந்தவனின் மொபைலை பின்புறமிருந்து புடுங்கியவன்,

"குணாளினி.... உங்க ரெண்டு பேரையும் நடுவுல டிஸ்டர்ப் பண்ணினதுக்கு ஸாரிம்மா! நானும் இந்தப்பையன் உங்கிட்ட பாசமா, கனிவா ரெண்டு வார்த்த பேசுவான்னு அப்பேலேர்ந்து பாத்துட்டு இருக்கேன். இவன் அப்டியெல்லாம் ஒன்னத்தையுமே செய்ய மாட்டேங்குறான். நல்லாயிருக்கியாமா? மினு எப்டி இருக்கா? அப்புறம் ஜுனியர் என்ன சொல்றாங்க?" என்று அவன் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் மரத்திலிருந்து பூ உதிர்வது போல அவ்வளவு மென்மையாக ஒலித்தது.

இந்த மென்மையை தான் எவ்வளவு முயன்றாலும் என்னால் கற்றுக் கொள்ளவே முடியவில்லையே என்று நினைத்து சற்றே வருந்தினான் சஞ்சீவ்.

இரண்டு நிமிடத்தில் குணாளினியிடம் பேசிவிட்டு அலைபேசியை அவனுடைய கையில் கொடுத்த கதிர்,

"டேய் தம்பி! ப்ரெக்னென்ஸியோட சீரியஸ்னெஸ் தெரிய மாட்டேங்குதுடா உனக்கு! நம்ம அவங்க பக்கத்துல இருந்தா, இவன் எங்கிட்டாவது போய்த் தொலைய மாட்டானான்னு இருக்கும். தூரத்துல இருந்தா இவன் நம்ம கிட்ட வந்து தொலைய மாட்டானான்னு இருக்கும். இப்டி ஏகப்பட்ட மூட்ஸ்விங்ஸ், உடம்புல நிறைய மாற்றம், ஊசி போடுறது, ஸ்கேன் பண்றதுங்குற மாதிரியான
வலி, டென்ஷன், வாயக் கட்டுற பத்தியம் இப்டி கர்ப்பத்துல கஷ்டம் எல்லாமே பொண்ணுங்களுக்கு மட்டுந்தான்டா..... நமக்கென்ன? எனக்கு ஒரு புள்ள பொறக்கப் போகுதுன்னு கெத்தா காலர தூக்கி விட்டுட்டு, பொண்டாட்டி வயித்துல தினமும் ரெண்டு முத்தம் வச்சா கடமை முடிஞ்சு போச்சு! வாழ்நாள் முழுக்க நம்ம பொண்டாட்டிக்காக நம்ம அனுசரணையா நடந்துக்காட்டி கூட ஒரு 280 நாள் செய்யலாமேடா? உனக்கு இதெல்லாம் நான் சொல்லியா குடுக்கணும்?" என்று புன்னகைத்த படி கேட்ட தன்னுடைய அண்ணனிடம்,

"ஸாரி கதிர் அண்ணா! ஐ டிடின்ட் மீன் தட்..... பட் நான் செஞ்சது ரொம்ப தப்பு தான்! இனிமே அவ கிட்ட ஒருவார்த்த கூட குரலை உயர்த்தி பேச மாட்டேன்!" என்றவன் சிரிப்புடன் தலையசைத்து விட்டு நகரப்போன கதிரின் கையை மறுபடியும் பற்றிக் கொண்டு,

"அண்ணி ரொம்ப லக்கி தெரியுமா?" என்று சொன்னான்.

"உங்கண்ணி காதுல இது மட்டும் விழுந்துச்சு? ஏன்டா இந்த சஞ்சீவ் என்னைய மட்டும் பாராட்டவே மாட்டேங்குறான்னு கேட்டு
என்னைய கொல்லப்போறா!" என்று சொல்லி விட்டு சிரிப்புடன் நகர்ந்தான்.

குணாளினி கர்ப்பமடைந்த விஷயத்தை சஞ்சீவ் தயங்கிய படி கதிரிடம் சொன்ன போது அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்! இளமதிக்கு பின் அவன் தூக்கி மகிழ்ந்து கொஞ்ச இன்னொரு பிள்ளை என்று நினைத்து மிகவும் மகிழ்ந்தான். சஞ்சீவும் இப்போதெல்லாம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நாகர்கோவிலுக்கு வந்து விடுகிறான்; இல்லையென்றால் கதிர் சந்தனா, பாகேஸ்வரியை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சிக்கு செல்வான்.

"ஏன் ரேஷன் நமக்கு இன்னும் பாப்பா வரலன்னு உனக்கு வருத்தமா இல்லையா?" என்று கேட்ட தன்னுடைய மனைவியின் கன்னம் உரசிக் கொண்டு,

"அடப் பைத்தியமே! நமக்கு பாப்பா கண்டிப்பா வரும்டீ சூபொ! வராம எங்க போயிடும்?" என்று கேட்டு அவளை தேற்றினானோ இல்லை அவனை அவனே தேற்றிக் கொண்டானோ தெரியவில்லை..... ஆனால் ஒருகணமும் சஞ்சீவின் வாழ்க்கையைப் பார்த்து கதிர்  பொறாமை மட்டும் படவில்லை.

"கதிரு நீ நெனச்சது கிடைச்சுடுச்சா? இப்ப
சந்தோஷமா இருக்கியா சாமி?" என்று கேட்ட தன் அன்னையிடம்,

"எப்பம்மா நான் சந்தோஷமா இல்ல? நீங்க எல்லாரும் எம்பக்கத்துல இருந்தா சந்தோஷமோ சந்தோஷம் தான்!" என்று சொன்னவனை வந்து கட்டிக் கொண்டவர்களின் உயரத்திற்கு மடங்கி உட்கார்ந்தான்.

"உம்மா! உம்மா!" என்று அவன் கன்னத்தை நிறைத்த சிறுமிகளிடம்,

"இன்னொருதடவடா செல்லம்!" என்று கேட்டு மறுபடியும் இரண்டு முத்தங்களைப் பெற்றுக் கொண்டான்.

"உன்னிய அத்த கூப்தா!" என்று அவனது காதருகில் ரகசியம் சொன்ன இளமதியிடம்,

"இதோ வந்துட்டே இருக்கேன்னு போய் சொல்லு குட்டிநிலா!" என்று சொன்னவன் கல்பனா மற்றும் மாணிக்கவேலிடம் வந்தான்.

"அப்பாவ விட நீ ரொம்ப திறமையானவன்டா கதிர்!" என்று அவனது முதுகில் தட்டிக் குடுத்து சொன்ன கல்பனாவிடம்,

"ஒரு திறமையான ஆசிரியர் எல்லாரையும் ஏத்தி விடுற படிக்கட்டு மாதிரி ஒரே இடத்துல தான்க்கா இருப்பாரு. அதுக்காக அவங்கள விட நாங்க திறமையானவங்கன்னு ஆகிடுமா? அப்டியெல்லாம் இல்லவே இல்ல! ஸார்..... வாழ்நாள் பூரா நான் உங்க கிட்ட எதையாவது கத்துக்கிட்டே இருக்கணும்னு நினைக்குறேன் ஸார்!" என்று சொன்னவனை அணைத்துக் கொண்ட மாணிக்கவேல்,

"கண்டிப்பாடா கதிர்.... நான் புதுசா ஏதாவது கத்துக்கிட்டா, அத முதல்ல உனக்கு தான் சொல்லிக் குடுப்பேன்!" என்று கதிரிடம்  மனநிறைவுடன் சொன்னார் மாணிக்கவேல்.

"ம்மா...!" என்று தயக்கமாக அழைத்தபடி நின்றவனிடம்,

"வாங்க கதிர்.... எங்கிட்ட எதுக்கு தயங்கிக்கிட்டு? சொல்லுங்க..... உங்க லைஃப்ல நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன? அடுத்து எத நோக்கி ஓடப்போறீங்க? எதுக்காக தயாராகப் போறீங்க?" என்று கேட்டவரிடம் சிரிப்புடன்,

"இந்த மாதிரி ஏதாவது கேப்பீங்கன்னு நினைச்சுட்டு தான்மா இதுவரைக்கும் நான் உங்க பக்கத்துலயே வராம நின்னுட்டு இருந்தேன்!" என்று பாவமாக சொன்னவனைப் பார்த்து சிரித்து விட்டார் வினோதினி.

"இன்னிக்குன்னு இல்ல.... அடுத்து வர்ற நாட்கள்லயாவது இந்த கேள்விக்குப் பதில் யோசிங்க கதிர்; எதுக்கு வாழுறோம்னே தெரியாத குறிக்கோள் இல்லாத வாழ்க்கை நல்ல வாழ்க்கையா இருக்காது! ஒரு இடத்துலயே தேங்கி நிக்குற தண்ணி அருவியாவும், நதியாவும் மாற முடியாது. ஆல் த பெஸ்ட்!" என்று சொல்லி நீட்டிய அவருடைய கையைப் பற்றி குலுக்கியவன், அவரது பாதம் தொட்டு வணங்கி எழுந்தான். அவருக்குப் பிடிக்காத ஒன்று தான் இருந்தாலும் அந்த செயலை கதிர் செய்தான்......

நீ நன்றாக இரு என்று முழுமனதுடன் இந்த காலத்தில் எத்தனை பேர் வாழ்த்துகிறார்கள்? அப்படி தன்னை வாழ்த்தும் மனிதர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பது அவனுடைய எண்ணம்!

விழா இனிதாக முடிந்து இரவில் சற்று உடல் சோர்வுடன் தன்னுடைய அறைக்குள் வந்தவன்,

"சூபொ.... பங்ஷன்ல இருக்கும்போது என்னைய நீ எதுக்கோ கூப்டன்னு குட்டிநிலா வந்து சொன்னா! எதுக்குடீ கூப்ட?" என்று கேட்டான்.

"எப்ப கூப்டா அத எப்ப வந்து கேக்குறடா லூசு ரேஷன்கட?" என்று திட்டியவளின் அருகே வந்து இடித்துக் கொண்டு படுத்தவன்,

"என் சூபொ மண்டைக்குள்ள ஏதோ ஓடி அவ ஏற்கனவே கோபத்துலயோ, குழப்பத்துலயோ தத்தளிச்சுக்கிட்டு நின்ன மாதிரி இருந்துச்சு! பக்கத்துல வந்தா போண்டாவாக்கி என்னைய சட்னியில தொட்டுக்கிட்டு வாய்க்குள்ள அமுக்கிருவன்னு தெரியும்.... அதான் உன் பக்கத்துலயே வரல!" என்று சொன்னவனின் முகத்தை ஏறிட்டவள்,

"எப்பவுமே என்னையவே தான் பாத்துட்டே இருப்பியாடா? இதுக்கு பேரு தான் காதலா ரேஷன்?" என்று கேட்டவளிடம்,

"தெரியலமா! பட் உன் சிறுநகையில தான் என்னோட சிந்தனையோட்டமே இருக்கு! நீ என்னோட சித்திரப்பாவை என் வசந்தகோகிலமே!" என்று சொல்லி தன்னுடைய இதழ்களை அவள் மார்பின் மேல் பதித்து குறுகுறுப்பூட்டியவனிடம்,

"நமக்கு பிறக்கப் போற மொதல் குழந்தையோட பேரு பரத் எல்லாம் இல்ல! பையனா இருந்தா கிருஷ்ணா! பொண்ணா இருந்தா கிருஷ்ணி; புரிஞ்சதா? பெட்ருமுக்குள்ள இருக்கும் போது என்னோட ஆசைக்கும் நோ சொல்ல மாட்டேன்னு பர்ஸ்ட் நைட் அன்னிக்கு சத்தியம் பண்ணி குடுத்துருக்க...... ஸோ சத்தியத்த காப்பாத்தணும் பாத்துக்க!" என்று சொன்ன மனைவியை ஐந்தாறு நொடிகள் குறுகுறுவென்று பார்த்து விட்டு அவளுடைய ஆசைக்குத்  தலையாட்டியவன் அவளிடம்,

"நான் படுற வேதனையெல்லாம் நான் சொல்லாமலே எப்டிறீ உனக்குப் புரியுது? எனக்கு அதுதான் எப்டின்னு தெரியவே மாட்டேங்குது. ஒருத்தன் தறுதலையா எங்கிட்டோ போனா என்ன? அவன் பேர வச்சு எம்புள்ளய நான் ராசா மாதிரி ராசாத்தி மாதிரி வளத்துக் காட்டுவேன்! ஓவர்டைம் ஒர்க் பண்ணியாவது உன்னோட ஆசைக்கு ஒரு உருவத்த குடுத்துடுவோம்டா சூபொ....!" என்று சொன்னவன் தன்னுடைய காதலை படுக்கையில் செயல்களாக காட்ட சந்தனா கிருஷ்ணராஜிடம்,

"அங்கிள்..... நீங்க உங்க புள்ளைக்கு குடுக்காத அன்ப, அவன் உங்களுக்கு வாரி வாரி குடுப்பான்! அவனோட புள்ளையா வந்து மறுபடியும் இந்த பூமியில பொறங்க! எது எதெல்லாம் கிடைக்கலையோ, குடுக்கலையோ அத குடுத்து வாங்கி சந்தோஷமா வளருங்க!" என்று மானசீகமாக வேண்டிக் கொண்டு கதிருடன் உறவில் இணைந்தாள்!

அங்கே...... சித்திரப்பாவையின் இதழில் சிறுநகை மலர்ந்தது!
சித்திரக்கவியின் சிந்தனையில்
புதுமுறுவல் பூத்தது!

சுபம்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro