Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நான் யார்? - நீ யார்?

விடியல் கீற்றின் முதல் கதிரே பால்கனியில் அமர்ந்திருக்கும் அவனை பார்க்கதான் வந்தது, நேற்று மாலை முதலாக தொலைந்ததிருந்த அவனின் மனஅமைதியை தேடி இருளுக்குள் அலைந்துக் கொண்டிருக்கும் தேடலுக்கு வெளிச்சம் கொடுக்கும் முயற்சியுடன்.

தியானம் என்ற பெயரில் கடந்த இரண்டு மணி நேரமாக மூடியிருக்கும் அவன் கண்களிலோ தேடலின் அந்த அமைதி கிடைத்ததாக தெரியவில்லை; திரையிட்டிருக்கும் இமைக்குள் நிலையில்லாமல் உருண்டு கொண்டிருந்தது அவனின் கண்மணிகள். இருண்டிருந்த அவன் பார்வைக்குள், மாலையிலும் நள்ளிரவிலும் அவன் கைபட செய்யப்பட்ட அந்த கோரக் காட்சிகளின் சங்கிலித் தொடர்கள். அவைகளை உணர்ந்து, தன்னை தானே எண்ணி துன்பப்பட்டுக் கொண்டிருந்தது அவன் உள்ளம்.

சென்றமுறை அவன் சக்திகள் வெளிப்பட்டதை போல இல்லை இம்முறை.. நேற்றைய பொழுதில் செய்த அனைத்தும் அப்படியே அவன் நினைவுகளில் இருக்கிறது.. அக்காரியங்களை செய்யும்போது மனதின் குரல் எப்படி இறக்கமற்று ஒலித்தது என்பது கூட இன்னுமும் தெள்ளந்தெளிவாக அவன் செவியில் ஒலிக்கிறது. ஆனால், அத்தனையும் நடக்கையில், வேறு ஏதோ புது லோகத்தில் நின்றுகொண்டு அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது போலதான் இருந்தது அவனுக்கு, அந்நேரத்தில்.  

யாரென்று தெரியாது... என்ன பகையென்றும் தெரியாது. ஆனால், அவனாக வந்து தாக்குகிறான். அதனால் தற்காப்பிற்காக மீண்டும் தாக்கினேன் என, கைகளில் இரு வாள்களுடன் வந்தவனை ஓரங்கட்டி விடலாம்; அவனுடன் வந்தவள், ஆதலால் அவளும் ஆபத்தானவள்தான் என வௌவால் மனிதியையும் ஓரங்கட்டிடலாம். ஆனால் மயூரி? அவனின் உயிர் தோழி! அவளை ஏன் தாக்கினான்? மேலும், நள்ளிரவில் அவர்களிள் எவரும் தேடி வராமல் இருக்கையில் ஏன் தானாக அவர்களை தேடிச் சென்று தாக்கினான்? 

கேள்வி மேல் கேள்வியாக அவன் மனம் அவனை போட்டுக் குடைந்து கொண்டிருக்க.. குமுறிக் கொண்டிருக்கும் எண்ணங்களை அடக்கிடவே இந்த இரண்டு மணி நேரமாக போராடும் அவன் நிலை புரியாமல், "என்ன டா ரக்ஷவ்.. யோகா பண்ணுறேன்னு அப்படியே தூங்குறியா டா?" பால்கனி வாயிலில் நின்றிருந்தார் பார்கவி அம்மா.

இத்தனை விடியற்காலையில் அவரை எதிர்பார்த்திராமல் அவரின் திடீர் குரலால் திடுக்கிட்டு கண்களை விரித்து பின்னோக்கித் திரும்பியவன், "அம்மா.. இல்ல.." என பதட்டத்தில் எழுந்தபடி பரபரக்க.. அவன் கண்களில் எப்போதுமே இருக்கும் உயிரோட்டம்; அந்த குறும்புத்தனம் இன்று தொலைந்திருப்பதை கவனித்தார் அவர்.

"சரி பதறாத டா... போய் குளிச்சு ரெடி ஆகு.. தேவா வீட்டுல இல்லாத நேரம் நீ எந்துருச்சியான்னு பாக்கதான் வந்தேன்" என்றவர் அவனை தோளோடு அனைத்து அப்படியே அறைக்குள் அழைத்து வர.. அன்னையின் பெயர் குறிப்பிடப்பட்டதால் அவன் மனக்காயம் மேலும் பிளவுபட்டது.

"ம்மா... மயூக்கு எப்டி இருக்கு?" அவன் கண்ணில் தொலைந்த உயிரோட்டதிற்கு காரணம் தன் மகளின் நிலை என்பதை யூகித்த பார்கவி, "பரவால்லையே... அக்கறைலாம் இருக்கு போல! ஃப்ரெண்டுக்கு அடி பட்டுருக்குன்னு தெரிஞ்சும் வீட்டு பக்கம் வந்தியாடா நேத்து?" அவனை சகஜமாக்கும் முயற்சியில் தன்னால் முடிந்தளவு வேடிக்கையாகதான் சொன்னார்... பதிலுக்கு எதாவது மலுப்புவதுபோல் சொல்லி வழக்கம்போல் தன்னை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்குவான் என நம்பி... ஆனால் அவர் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. அதை கேட்டவன் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக நின்றான்.

அதை கண்டு பெருமூச்சுடன் பார்கவி, "சரி ஃபீல் பண்ணாத டா... அவ அழுதுட்டே தான் இருந்தா நைட்டு முழுக்க.. பாக்க கஷ்ட்டமா தான் இருந்துச்சு... சரி ஆகிரும் டா கொஞ்ச நாள்ல" அவன் முதுகை தட்டிகொடுத்தபடி மென்மையாக அணைக்க.. அப்போதும் அசையாமல் அமைதியாக தான் நின்றான். அது பார்கவியை கவலையுறச் செய்தது. எனவே அவன் மௌனத்தை களைக்க எண்ணியவர், "நேத்து எதாச்சும் படிச்சியா? இல்ல, நா வரலைன்னு நல்லா தூங்கிட்டியா?" அவனின் ஆசிரியையாக மாறி கண்டிப்புடன் பார்க்க, ரக்ஷவனுக்கு இப்போது புரிந்துபோனது, தன் மௌன நிலையை களைக்கவே அவர் முயற்சிக்கிறார் என்பது.

"படிச்சுட்டேன் ம்மா." மென்மையாக அவன் புன்னகைக்க.. பதிலுக்கு லேசாக புன்னகைத்தவர், "சரி, போய் குளிச்சுட்டு ரெடி ஆகு.. சாப்ட மூனு பேரும் நம்ம வீட்டுக்கு வந்துருங்க. சரியா.." என்றவர் அவன் தலையாட்டியதும் வாயிலை நோக்கி நகர... குளியலறையை நோக்கித் திரும்பியவன், "ம்மா.. மயூ எப்டி எக்ஸாம் எழுதுவா?" சட்டென நினைவுக்கு வந்தவனாக மீண்டும் அழைத்தான் பார்கவியை.

கதவின் அருகில் நின்றபடியே திரும்பியவர், "பாஸ் ஆகுற அளவுக்கு எழுதுனா போதும்ன்னு அவட்ட சொல்லிருகேன்.. ஸ்கூல்ல சொல்லி கேட்டு பாப்போம்... கைல அடி பட்டுறுக்கு வேற யாரையாச்சும் வச்சு எழுதிக்லாமான்னு.. உன் மாமாவோட பையன் அர்ஜுன் வரேன்னு சொல்லிருக்கான். அவன்தான் இந்த ஐடியா குடுத்தான்.. அவங்க ஸ்க்கூல்ல அப்டி அலோவ் பண்ணிருக்காங்கன்னு சொல்லி. நாமலும் கேட்டு பாப்போம்" என மாஸ்டர்-பிளான்-மன்னன் காலையில் சொன்னதை சொன்னார் பார்கவி.

"அவன் மயூவ பாக்க வந்தானா?"

"ஆமா டா.. நேத்து ஈவ்னிங் அவன்தான் வந்து, மயூ அழறத பாத்து நீ ரொம்ப ஃபீல் பன்ற... அதான் பாக்க வர மாட்றன்னு சொன்னது.. இன்னைக்கு காலைல கூட வந்தான்.. இப்போ அங்க தான் இருக்கான்."

"ஓஹ்.. எனக்கு தெரியாது ம்மா.. அவன் என்ட்ட சொல்லவே இல்ல.." என தன் வழக்கமான அப்பாவி பார்வையில் தன் பார்கவி அம்மாவை பார்க்க.. லேசாக புன்னகைத்தவர், "சரி டா.. நீ ரெடி ஆகு..  போ" என சொல்லிவிட்டு கிளம்பினார் பார்கவி அம்மா.

✨✨✨

இன்று, கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் கழித்து, காலையில் கண் விழிக்கையில் வெறுமையாக உணர்கிறான் ஷேனா; தன் அழகியின் முகம் காணாது.. அவளின் முத்தம் பெறாது தொடங்கிய இந்த விடியலில்.

இதைத்தான் விரும்பினான் இத்தனை காலமும்... ஒரு தொல்லையாக.. தன் ஜென்ம எதிரியாக நினைக்கும் அவளை தன் நினைவினுள் புதைத்து இம்சிக்காத ஒரு விடியல்... அழிக்க மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் ஒருத்திக்காக உடலின் கடைசி அனு வரையில் உருகிடும் கனவுகள் இல்லாத ஒரு விடியல். அது கிடைத்து விட்டது... ஆனால் ஏன் நிம்மதி இல்லை... ஏன் வெறுமையை உணர்கிறது மனம்? ஏன் அவளை வேண்டுகிறது... அவள் இதழ் ஸ்பரிசத்தை வேண்டுகிறது இந்த விடியல்?

அவளை காணாது... அவனின் அழகியை காணாது விழித்த கண்கள் இப்போது வெறுமையை உணர்ந்து மனதை குடையத் தொடங்கிட... அந்த உணர்வு கொடுக்கும் எரிச்சலுடன் இணைந்து அவன் இருக்கும் நிலையும் அவனை மேலும் சூடேற்றியது. ஒரு பெரும் மரத்தின் நடு தண்டில் அதன் கிளைகள் சூழ்ந்து இறுக்கப்பட்ட நிலையில் கட்டுண்டு கிடக்கிறான் ஷேனா. அதை தெளிவாக உணர்ந்த பின்பே நள்ளிரவில் நடந்தவைகள் மெல்ல மெல்ல நினைவுக்கு வர... அந்த மரத்திலிருந்து தப்பிக்க அவன் திமிறிய நேரம் அவனை அடைந்தது அக்குரல்.

"தப்பிக்க முயற்சி பண்ணாத... அது உன்னால முடியாது" இரவின் அரைகுறை உறக்கத்தால் லேசாக சோம்பல் கொண்ட தோற்றத்துடன் தன் சகோதரனை அழைத்துகொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தான் முகிலர்ஜுனன்.

"எங்க கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.. உன்ன விட்டுறோம்." என நகுலனும் வந்து நிற்க... முகிலின் சொல் கேட்டு ஒரு நொடிக்கு மட்டுமே அவர்களுக்கு கவனம் கொடுத்த ஷேனா, கண்மூடித் தன் ஆத்ம-வாளை மனதாற அழைத்தான். உடனேயே அவன் ஆத்ம-வாள் கைக்கு வர.. அடுத்த நொடியே முகிலின் கையசைவால் ஷேனாவின் மணிக்கட்டை இறுக்கியது ஒரு மரக்கிளை... வலியில் உருமியபடியே தன் ஆத்ம-வாளை தவறவிட்டான் ஷேனா.

கீழே விழுந்த நொடியே காற்றில் மறைந்து போன அந்த மரகத வாளை பார்த்தபடியே, "இந்த வாள் உனக்கு எப்டி கெடச்சுது?" தன் கையில் இருக்கும் தங்க வாளை நகுலன் உயர்த்திக் காண்பிக்க.., "அது என்னோடது." மீண்டும் உறுமியவன் கிளை-சிறையிலிருந்து விடுபட போராடி மேலும் மேலும் அவைகளால் இறுக்கபட்டுக் கொண்டிருந்தான். அது அவன் உயிருக்கு ஆபத்து விளைவிக்காது என்னும் தைரியத்துடன் மேலும் தொடர்ந்தான், நகுலன்.

"உனக்கு யாரு குடுத்தா?"

"..."

"சொல்லு... யாரு குடுத்தா? எப்போ குடுத்தா?"

"அது என்னோடது... யாரும் எனக்கு குடுக்கல.." அவன் ஆழ்ந்த குரலில் ஒவ்வொரு வார்த்தையாக உச்சரிக்க.. சகோதரனின் கேள்வியை மாற்றினான் முகிலன்.

"சரி, யாரும் குடுக்கலைன்னே வச்சுப்போம்.. ஆனா இதுல உள்ள இந்த சின்னங்கள பத்தி எதாவது தெரியுமா? இத எப்டி உபயோகிக்கிறதுன்னு உனக்கு எப்டி தெரியும்; எங்க கத்துக்குட்ட?"

"அது என்னோடது." நீண்ட நொடிகள் கடந்து அழுத்தமாக வந்தது, அக்கேள்விக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஷேனாவின் பதில். வேறு என்ன சொல்வான்? அவனிடம் தான் பதில் இல்லையே.

என்னதான் அவனுக்கு இவர்களின் கேள்வி-பதில் விளையாட்டில் ஈடுபட விருப்பம் இல்லை என்றாலும் அவர்களின் அக்கேள்வியால் தன் தங்க வாளுடனான தன் உறவு தொடங்கிய நாளை சிந்தை தேடியது... ஆனால் சிந்தையின் சாவிதான் ரட்சகராஜ்ய காவல் ஸ்தூபியில் சிறைபட்டுக் கிடக்கிறதே!

அந்த வாள் தன்னுடையது என்று அவனுக்கு தெரிகிறது.. அதன் சக்திகளை வெளிக்கொணர தெரிகிறது.. அது தனக்கு மட்டுமே கட்டுப்படும் என்றும் தெரிகிறது.. ஆனால் எப்படி? எப்படி இவ்விஷயங்கள் எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கும் நிலையில் அவ்வாள் அவன் கைக்கு வந்தது மட்டும் நினைவிலிருந்து மறைந்து போனது? எப்படி அதன் சக்திகளை உபயோகிக்க பழகினான் என எதுவுமே தெரியாமல் இருக்கிறான்? புரியாமல் குழம்பினார்கள் முகில் மற்றும் நகுலன்.

✨✨✨

ரட்சக ராஜ்ய மக்கள் அந்த காவல் ஸ்தூபியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அவர்களின் பார்வை ஒருவித மிரட்சியுடன் அந்த ஸ்தூபியின் சுவற்றை தீண்டிவிட்டே சென்றது. காரணம், அதனுள் இருந்து கேட்கும் கோர அலறல்.. சமாராவின் அலறல்.

காவல் ஸ்தூபியில் அடைபடும் எந்த ஒரு எதிரியையும் ரட்சகராஜ்யம் சித்ரவதை செய்யாது... அப்படியிருக்க ஏன் இந்த கோர அலறல் என குழம்பியபடியே மக்கள் நடமாட்டம் அவ்விடத்தை கடந்து செல்லும் அதே தருவாயில் ஸ்தூபியின் ஒற்றை வாயிலை காவல் காப்பதுபோல் நிற்கும் நுவழி பாட்டி அவர்களை மேலும் குழப்பம்கொள்ளச் செய்தார். அதிகபட்சம் வீட்டினுள்ளே இருப்பவர் இன்றைய விடியல் கதிர்களுக்கு முன்பிலிருந்தே இங்கு நின்று கொண்டிருப்பது அனைவரின் கண்ணோட்டத்தையும் பலவாறாக சிந்திக்கச் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில், இரவிலேயே ராஜ்யம் திரும்பியிருந்த இளவரசிகள் இருவரும், எதிரி தன் ராஜ்யத்தின் உள்ளே இருக்கும் சமயத்தில் தாங்கள் இருவரும் வனதேசம் சென்று தங்குவது முறையல்ல.. ராஜ்யத்திற்கும் பாதுகாப்பல்ல என ரத்ன மாளிகையிலேயே தங்கி விட்டார்கள்.

"ஏன் நுவழி பாட்டி நம்மல காவல் ஸ்தூபிக்குள்ள போக வேணாம்ன்னு சொல்லிட்டு இருக்காங்க? நாம தானே இளவரசி.. நாம தானே அதுக்குள்ள வர்றவங்கள கண்காணிக்கனும்.?" மளிகையின் மேல்தள அறை ஒன்றினுள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி ரக்ஷா புலம்புவதை கேட்டுக்கொண்டே பால்கனி வழியாக காவல் ஸ்தூபியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் மாயா.

"நம்மல மட்டும் இல்ல அம்மு... ஊருல இருக்குற யாரையுமே அந்த பக்கமா போக விட மாற்றாங்க பாட்டி.. அங்க பாரு... காவலுக்கு நிக்கிற மாதிரி நின்னுட்டு.. அந்த பக்கமா சும்மா பாத்தா கூட அடிச்சு வெரட்டுவாங்க போல.. அப்டி நிக்கிறாங்க.." பாட்டியை பார்த்தபடியே சொன்ன தன் சகோதரியை தொடர்ந்து தானும் பால்கனியை அடைந்துவிட்ட ரக்ஷா, ஸ்தூபி வாயிலில் நிற்கும் நுவழி பாட்டியை வினோதமாக பார்த்த அதே நேரத்தில், "நைட்டு போக கூடாதுன்னு தானே சொன்னாங்க.. இப்போ போலாம்ல ம்மூ?" மாயா தன் சகோதரியை பார்க்க.. அதுவும் சரிதான் என்ற பார்வையில் மாயாவை நோக்கினாள் ரக்ஷா.

✨✨✨


ஷேனாவிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என தெரிந்து சற்றுநேரம் ஓரமாக சென்று அமர்ந்தார்கள் முகில் மற்றும் நகுலன்.

மரக்கிளைகளில் சிக்கிக்கொண்ட ஷேனா, தன் ஆத்மவாளை அழைத்தும் பிரயோஜனம் இல்லாமல் போகும் தன் முயற்சிகளால் எரிச்சலடைந்து மேலும் மேலும் கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தான். அது மட்டுமே தான் அவன் கோபத்தின் காரணமா என்று கேட்டால், ஆம் என்னும் பதிலை சொல்லிவிட முடியாது. காரணம், ஷேனாவின் மனம் இப்போது குழம்பிய குட்டையாக இருக்கிறது. கோபம் எங்கு பிறக்கிறது கேள்வி எங்கு உதிக்கிறது என்னும் தேடலை அவனே இன்னும் தொடங்கவில்லை.

எதுவுமே தெளிவாக தெரியவில்லை அவனுக்கு. முகிலும் நகுலனும் கேட்ட கேள்விகளால் தன்னை தானே தெரிந்துகொள்ள அவன் எடுத்த முயற்சியின் வெளிப்பாடுகள் எல்லாம் தோல்வியே. அதனால், தன்னை தானே தெரிந்துகொள்ளும் முயற்சியில், பூர்வீகத்தின் வழியை தொலைத்த வந்தேறியாக தன்னையே தன் வரலாற்றை விட்டு ஒதுக்கி வைத்து பார்க்கும் கடந்தகாலத்தை நினைத்து, எதோ ஒரு ஜடத்தினுள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து வந்து வாழ்வது போல் உணர்கிறான் ஷேனா.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro