Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

16. காலாவின் ஆட்டம் ஆரம்பம்.

வெள்ளிக் கோட்டையின் நட்டநடு கூடத்தில் இருக்கும் கருப்பு சோஃபாவில் அமர்ந்துக்கொண்டு தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தபடி, டீபாயின் மேல் திறந்த நிலையில் இருக்கும் தன் லாப்டாப்பை வெறிக்க வெறிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தான் காலா. அவன் முகத்தில் ஒருவித சஞ்சலம்... ஏகப்பட்ட குழப்பம்... தான் செய்வது சரிதானா என்னும் ஆயிரமாயிரம் கேள்விகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து அவன் மூளைக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்க.. அதை மொத்தமாக அடக்கிடவே வந்தாள் மதி.

"அண்ணா.. என்ன பண்ணுற நீ", ஐந்தடிக்கு சற்றே குறைவான உயரத்தில், கருப்பு வெள்ளையில் அனார்கலி சுடிதார் போட்டுக்கொண்டு, நீளமான தன் கூந்தலை பின்னி போட்டுக்கொண்டு வாயிலில் இருந்தே துள்ளியபடி வந்தவள், அண்ணனருகில் அமர்ந்தாள்.

"மதி.. இவ்ளோ நேரம் எங்க டா போய்ருந்த?", தன் குழப்பத்தை மறைத்து தங்கையிடம் அக்கறையாக கேள்வி எழுப்பிட.. மதியின் மதியை குறைத்து எடைபோடலாமா நாம்?, "கஷ்ட்டப்பட்டு என்கிட்ட நடிக்க ட்ரை பண்ணாத 'ண்ணா.. வேஸ்ட் ஆஃப் டைம்.. என்ன யோசிச்சு உன்ன நீயே கொழப்பிட்டு இருக்க? சொல்லு" அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் அவன் விரித்து வைத்திருந்த லாப்டாப்பை நோட்டமிட்டாள், மதி.

அதில், தான் திறந்து வைத்திருக்கும் படக் கோப்புகளைப் பார்த்த காலா, தங்கையின் சிந்தனைக் கூர்மையை எண்ணி லேசாக சிரிக்க.. அவன் லாப்டாப்பில் மூன்று வீடியோ ஃப்போல்டர்கள் இருந்தது. முதல் விடியோவின் முகப்பில் ராணா, முன்னோக்கி நடந்தபடி பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பது போல் ஒரு படம். இரண்டாவது வீடியோ முகப்பில், மெத்தையில் படுத்திருக்கும் ஷேனாவின் கழுத்தில் உறவுசங்கிலியானது அதுவாக சென்று மாட்டிக்கொள்ளவது போன்ற படம். மூன்றாவதில், புதிதாக வந்திருக்கும் இரண்டு குழந்தைகளைப் பார்த்து வாயடைத்துப்போய் நிற்கும் சயனாவின் படம் என மூன்று வீடியோக்கள் இருந்தது.

"ஹ்ம்ம்.. டோன்ட் வர்ரி அண்ணா. எல்லாம் நல்லதாவே நடக்கும்." தன் அண்ணன் எதுவுமே பேசாமல் இருப்பதைக் கண்டு, தங்கையாக இவள் ஆறுதல் சொல்ல, "எல்லாமே என் தப்பு தானே மதி" பெருமூச்சுடன் தலை குனிந்தான் அவன்.

"அதெல்லாம் ஒன்னும் கெடையாது. உன்ன அறியாமலே நீ நெனைக்குறது உன் கைய மீறி நடக்குது. அதுக்கு நீ என்ன செய்வ? கைமீறி போன விஷயத்த அப்டியே விடுறது தான் எல்லாருக்கும் நல்லது. புரியுதா?" அவள் எடுத்த மினி டியூஷனிற்கு சிறு புன்னகையுடன் தலையை மட்டுமே ஆட்டினான் காலா. "சரி, அதெல்லாம் விடு. இப்போ பத்ரன் அண்ணன எங்க அனுப்பப் போற? அடுத்து என்ன செய்யப்போற? எல்லாம் ப்லான் பண்ணிட்டியா?"

"யோசிச்சுட்டேன் மதி.. ஆனா, அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு சர்பிரைஸ்." என்றவனின் புன்னகை இன்னும் கொஞ்சம் விரிய, வினோதமாகத் தன் அண்ணனைப் பார்த்தவள், பார்க்கும் பார்வையிலேயே 'என்ன சர்பிரைஸ்?' என்னும் கேள்வியை சுமந்து காலாவை நோக்கினாள்.

"பூமி எப்டி இருக்கும்? அத பாக்கணும்னு கேட்டுட்டே இருந்தல்ல நீ... சீக்கிரமே உன்ன கூட்டிட்டுப் போறேன்" அவ்வளவு தான்.. அவன் சொன்ன அடுத்த நொடியே கண்களை விரித்தவள், மேலும் கீழுமாக குதித்தபடி கத்திக் கூச்சலிடத் தொடங்கிவிட்டாள்.

"யே! யே! யே! யே!.. சூப்பர்'ண்ணா சூப்பர்'ண்ணா.. எப்போ போறோம்.. சொல்லு சொல்லு சொல்லு.."

"ஹஹஹஹா.. குதிக்காத மதி. இப்போ நீ போய் ரெஸ்ட் எடு. எனக்குக் கொஞ்சம் வேல இருக்கு. நா கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு ரவுன்ட்ஸ் போய்ட்டு வந்துறேன். அப்றமா போலாம்.. சரியா?" அவன் பொறுமையாகச் சொல்ல, "எப்டியோ.. என்னை நீ கூட்டிட்டு போனா சரிதான்..", மீண்டும் இரண்டு நிமிடங்கள் அங்கேயே குதித்துவிட்டு ஒருவழியாக மாடியேறிச் சென்றுவிட்டாள். தங்கையைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, மீண்டும் தன் லாப்டாப்பை வெரிக்கத் தொடங்கிவிட்டான் காலா.

✨✨✨

மேகக் கூட்டங்களுக்கு மத்தியில் தங்கச் சுரங்கம் போல் ஜொலித்துக் கொண்டிருந்த அவ்விடத்தில், ரயில்வண்டி போல் பெட்டிப் பெட்டியாக வரிசையில் அடுக்கப்பட்டிருந்தது மஞ்சள்நிற ஒளி சூழ்ந்த அந்த ஆயிரக்கணக்கான கண்ணாடி கூண்டுகள்.

ஒவ்வொரு கூண்டினுள்ளும் ஆண்-பெண் என வயது வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொரு மனிதர்களாக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்க. அவர்களை முழுவதுமாக மறைத்துக்கொண்டு கூண்டை நிறப்பியிருந்தது மஞ்சள் நிற ஒளி. அனைத்துக் கூண்டுகளுமே மயான அமைதியில் இருக்க.. கூட்டத்தின் மத்தியில் இருக்கும் அந்த இரண்டு கூண்டுகள் மட்டும் பூகம்பம் வந்ததுபோல் அவ்வப்பொழுது ஆட்டமாய் ஆடிக்கொண்டிருந்தது. நடப்பவற்றை கவனித்துக் கொண்டே, அன்னநடையில் அவ்வழியாக நடந்துவந்தான் காலா.

நல்ல ஆறடி பைல்வான் உடல்வாகில், நீலநிற ஜீன்ஸ் பேன்ட், வெள்ளை நிற டீ-ஷர்ட், கண்ணில் கலர் கூலர் என டிப்டாப் டீன்-ஏஜ் கெட்டப்பில் வந்து, ஆட்டம் போடும் இரு கூண்டின் முன்பாக நின்றான். உடனே, இரண்டில் ஒன்று அமைதியாகிவிட... மற்றொன்று, இரண்டு மடங்காகப் பேய்பிடித்து ஆடக் கிளம்பியது. அக்கூண்டை நக்கலாகப் பார்த்த காலா, தன் கைகளைக் காற்றில் உயர்த்தி அந்த கூண்டை நோக்கி அசைக்க... அதனுள் இருந்த மஞ்சள் ஒளி மொத்தமும் மறைந்து சுற்றிலும் இருக்கும் வென்புகைப் போன்ற மேகக் குட்டிகள் அதனுள் பரவத் தொடங்கியது. அதேநேரம் உள்ளுக்குள் இருந்தவன், கண்ணில் நெருப்பில்லாதக் குறையாக எதிரில் நிற்பவனை பார்வையாலேயே எரிக்கத் தொடங்கினான்.

"பத்ரா.. இதுவே முடிவு. தப்ப முயலாதீர்கள்." உள்ளிருப்பவனைப் பார்த்த காலா, திட்டவட்டமாக சொல்ல, "என்ன?.... என்ன முடிவு? என் வாழ்வு; என் உயிர்; இவை குறித்து முடிவெடுக்க நீ யார்?" சீரலுடன் வந்தது அமிழ்த பத்ரனின் குரல்.

"நான் காலன். எனக்கு சகல உரிமைகளும் உள்ளது.", அவன் சீரலுக்கு பணியாமல் திமிருடன் இவன் பதில் கொடுக்க, "காலனெனில்? உன் உலகைக் குறித்து முடிவெடுத்துக்கொள் காலா. என்னையும் என் உலகங்களையும் அதிகாரம் செய்ய உனக்கென்ன உரிமை?" கோபத்தில் பல்லைக் கடித்தான் பத்ரன்.

"இப்பொழுதுதான் சொன்னேன் எனக்கே சகல உரிமையும் உண்டென", பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பதில் கொடுத்த காலா, மூச்சை இழுத்து விட்டபடி, "பத்ரா, ஒரு உயிர் என் கட்டுப்பாட்டு இடத்தினுள் நுழைந்துவிட்டால் அதன் முழு உரிமையும் என் பொறுப்பு. நம் உலக விதிமுறைகளை மறந்து விட்டாயோ?", இறுதி வார்த்தைகளைச் சற்று நக்கல் தூக்கலாக சொல்லி முடித்தான்.

"நானாக உன் எல்லைக்குள் வரவளிக்க நானொன்றும் கோழையல்ல, காலா. என்னை அழைத்து வந்ததே நீ."

"ஆஹ்ஹ்.. ... ... ... பத்ரா! புரிந்துகொள். அது கட்டாயம்.", ஒரு இறைஞ்சலுடன் ஆரம்பித்தவன், "ஆனால் இனியும் நீ இவ்விடமே இருப்பது முறையல்ல. இங்கிருந்து சென்றாக வேண்டும்.", தீர்மானமாக முடிக்க, "அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் இங்கிருந்து செல்ல வேண்டும்." காலாவின் சொல்லை முழுதாய் புரிந்துக்கொள்ளாத பத்ரனின் குரலில் 'இங்கிருந்து செல்லப் போகிறோம்' என்னும் நிம்மதி லேசாகத் தெரிந்தது. அதை கவனித்த காலாவின் இதழோரம் குறும்புப் புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது.

"நீயே கேட்டப்பின் அதை மறுக்க நான் யார்?", தன் கலர் கண்ணாடியைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு, புன்னகையை அடக்கிட முடியாமல் ஒருபக்கமாக திரும்பி நின்று சிரித்தவன், "அப்படியானால். என் பூமியில் நீ செல்லவேண்டிய இடத்தை முடிவு செய்துவிடலாம். அப்படித்தானே?", அதே குறும்புப் புன்னகையுடன் பத்ரனை புருவமுயர்த்திப் பார்க்க, அப்போதே இவனின் வார்த்தை ஜாலத்தைப் புரிந்துக்கொண்ட பத்ரன், மீண்டும் எரியக் கிளம்பினான்.

"காலா..", அடிக்குரலில் சீரியபடி அந்தக் கண்ணாடிக் கூண்டை ஓங்கி ஒரு குத்து விட.. அது அசைந்தால் தானே! நூத்துக்கு நூறு தரம்.. நூத்துக்கு நூறு பலம் என சிமெண்ட் விளம்பரத்திற்கே டஃப் கொடுத்து நின்றது அந்தக் கண்ணாடிக் கூண்டு.

"நான் செல்ல வேண்டுமென்றது உன் எல்லையை விட்டே வெளியே.", கோபத்தின் எல்லையில் நின்று இவன் உறும.. அந்தக் கூண்டுக்கு அரை-அடி கூட இடைவெளி இல்லாத தூரத்தில் வந்து நின்ற காலா, "அனுமதிக்க மாட்டேன்." பொறுமையின் எல்லையில் நின்று பதில் கொடுத்தான்.

"உன் முடிவிற்கு இணங்கிச் செல்பவன் நானல்ல.. நீ-", சட்டென பத்ரனின் வார்த்தை பாதியில் நிற்க... இருவரின் மோதலும் அவளின் வரவால் தடைபட்டு நின்றது. இருவரின் பார்வையோ, மேக மூட்டத்தினுள் இருந்து கண்ணைக் கசக்கிக்கொண்டே மெல்ல நடந்து வரும் ஒரு யுவதியின் நிழல் மேல் நிலைகுத்தி நின்றது.

அந்நிழல், முன்னோக்கி வர வர கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாகி, இறுதியாக மேக மூட்டத்தினுள் இருந்து தூக்கக் கலக்கத்துடன் நடந்து வந்தாள், மூன்று வயது சிறுமியான மதி. அந்த குட்டி உருவத்தை பார்த்ததும் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரின் முகமும் ஆயிரம் சூரியனைப்போல் மின்னத் தொடங்கியது.

தத்தித்தத்தி காலனின் காலருகில் நடந்து வந்தவள், "அம்மா. பத்ரா 'ம்மா, உள்ளே. உள்ளே... .... செல்ல வேண்டும்... அங்கே.", கூண்டை நோக்கி விரல் நீட்டினாள். "அம்மா இல்லை மதி. அண்ணா.", நீட்டியிருக்கும் அவள் விரலை மடக்கி, அவளைத் தன் கையில் தூக்கினான் காலன்.

"அம்மா... பத்ரா 'ம்மா...", மீண்டும் மீண்டும் அவள் சிணுங்கிக்கொண்டே இருக்க, "வேண்டாம் என் தங்கமே. அடம்பிடிக்கக் கூடாது. என் செல்வமல்லவா", என சொல்லிடும்போதே வாலிபனாக இருந்த காலன், நடுத்தர வயதுடைய ஆடவனாக உருமாற்றம் பெற்றான்.

"ஹும்ம்ம்ம். வெளியே வா அம்மா.. வெளியே வா.. ஏன் உள்ளே இருக்கிறாய்.. என்னை தூக்கு.. தூக்கு...", அவள் அழுவதற்காகத் தயாராகிக் கொண்டிருக்க, "காலா!... மதியை என்னிடம் கொடு... அவள் அழப் போகிறா- ...", பத்ரன் தன் வார்த்தையை முடித்திடும் முன்பே அவனுக்கு முதுகைக் காட்டித் திரும்பியிருந்த காலன், "பத்ரா, மதி என் சகோதரி. அவள் எனக்கு மட்டுமே உடன் பிறந்தவள். அவளுக்காக நீ கவலைக் கொள்ள அவசியமன்று. முதலில் என் பூமியில் மனிதனாக ஜனிக்கும் எண்ணத்தைப் பற்றி யோசி.", என்றுவிட்டு, அவனைத் திரும்பியும் பாராமல், குழந்தையான மதியை தூக்கிகொண்டு சென்றுவிட்டான்.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro