4
"ஆதித் கண்ணா!! நான் பாட்டி பேசறேன்.. எப்படிடா இருக்க?"
பாசம் பொங்கிய குரலைக் கேட்டு ஆதித்தின் முகம் புன்னகையில் விரிந்தது.
"நான் நல்லா இருக்கேன் பாட்டி.. சொல்லுங்க!"
"நான் எதுக்காகக் கூப்பிடுவேன்னு என் கண்ணனுக்குத் தெரியாதா? தீபாவளிக்கு வந்துடுவ தானே கண்ணா?"
சிரிக்காமலிருக்க சிரமப்பட்டவாறே, குரலை சீரியஸாக வைத்துக்கொண்டு, "அ.. வரமுடியுமான்னு தெரியலையே பாட்டி.. இங்க வேற வேலை டென்ஷன் ஓவரா இருக்கு. புது ப்ராஜெக்ட் வேற பிட்ச் பண்ணனும். நாளைக்கே மீட்டிங் எல்லாம் ஸ்டார்ட் ஆகுது.." என இழுத்தான் ஆதித்.
எதிர்முனை அமைதியானது.
"என்ன மீட்டிங்?"
பாட்டியின் குரலில் இப்போது குழைவு இல்லை. தேர்ந்த தொழிலதிபர் பேசும் தொனியில் இருந்தது அது. இருக்காதா பின்னே? பர்வதம் க்ரூப்ஸ் என்னும் சாம்ராஜ்ஜியத்தின் ஒற்றை மகாராணி அல்லவா அவர்!? ஆதித்தின் தொழில்துறை குருவாக மட்டுமன்றி, அவனது முதல் பங்குதாரராகவும் அவர்தானே அவன் பக்கம்நின்று இவ்வியாபார உலகினுள் அவனைக் காலடி வைக்கச் செய்தவர்!?
"ஒரு.. ஸ்டீல் இன்டஸ்ட்ரீ ப்ராஜெக்ட் பாட்டி. கப்பல்ல பொருத்துற ப்ரொபெல்லர்ஸ், ஷாஃப்ட்ஸ் எல்லாம் செய்யற ஐடியா. அதனோட டிசைன்ஸ் பத்தி டிஸ்கஷன் ஆரம்பிக்கப் போறோம்."
அதில் பாதி உண்மை, பாதி பொய் இருந்தது.
கப்பல் உதிரிபாகங்கள் செய்யப்போவது உண்மைதான் எனினும், அது அடுத்த மாதத்திற்கான செயற்திட்டங்களில் தான் இருந்தது.
"டீலர் யாரு?"
"ஹார்லிங்டன் பாட்டி.." சட்டென வாய்க்கு வந்த பெயரை சொல்லிவிட்டான் அவன். அது கப்பல் தொழில்நுட்ப நிறுவனம்தான் என்றாலும், கல்கத்தாவில் அவர்களுக்கு வாணிகமில்லை.
பாட்டி அதையே கேட்டார் அடுத்த நொடி.
"ஹார்லிங்டன் கம்பெனி கல்கத்தாவுல பிஸினஸ் பண்றதே இல்லையே?"
"இல்ல, புதுசா.."
"எந்த மேகசின்லயும் அவங்க வென்ச்சர் பத்தி போடலையே?"
"அது.."
"பொய் சொல்றயா ஆதித் நிவேதன்?"
"அ-- அதில்ல பாட்டி.."
"பாட்டிக்கிட்ட பொய் சொல்ற, இல்ல? பாட்டியைப் பார்க்கவர இஷ்டமில்ல.. அப்படித்தான--"
பொறுக்கமாட்டாது அவனே அவசரமாக, "அச்சோ! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் பாட்டி!! உங்களைப் பார்க்க நான் வராம இருப்பேனா?? நாளைக்குக் கண்டிப்பா வந்துடுவேன்!!" என்று அறுதியிட்டான்.
பாட்டியின் குரலில் ஆனந்தம் பொங்கியது.
"ஓ!! அதானே பார்த்தேன்! என்ன, பாட்டிக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு பார்த்தயோ?"
"ஹ்ம்ம்.. உங்களை யாராச்சும் ஏமாத்திட முடியுமா!? நாளைக்கு நைட் வீட்ல இருப்பேன் நான். எல்லாருக்கும் சர்ப்ரைஸ். நீங்களும் சர்ப்ரைஸ் ஆகிடுங்க. ஓகே?
"ஹாஹாஹா. ஓகே, தவறாம வந்துடுடா கண்ணா.. பாட்டி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.."
"என்னது பாட்டி?"
"அது உனக்கு சர்ப்பரைஸ். நீ வா, நான் சொல்றேன்."
"ஓகே தென்! பைய் பாட்டி!!"
அழைப்பை வைத்துவிட்டு, சிறிதுநேரம் மடிக்கணினியில் கம்பெனியின் தரவுகளைப் பார்த்துவிட்டு, பின் அப்படியே கட்டிலில் சாய்ந்து உறங்கிப்போனான் ஆதித்.
ஐந்தரை மணியளவில் கைபேசியின் மின்னணுக் குரல் மீண்டும் அலாரமிட்டு எழுப்பிட, கொஞ்சமும் தள்ளாட்டமின்றி உற்சாகமாக எழுந்து அதை அமர்த்திவிட்டு, காலுறைகள், காலணிகள் அணிந்துகொண்டு தனது காலைநேர ஓட்டப்பயிற்சிக்கு விரைந்தான் அவன். ஆறுமணிக்குத் திரும்பி வந்தபோது உணவுமேசை மீது தயாராக அவனுக்கான பழரசக் கோப்பை காத்திருக்க, அதை இடதுகையால் எடுத்துப் பருகியவாறே, வலதுகையில் கைபேசியை எடுத்து அழைப்புகளைப் பார்த்தான்.
தந்தை குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவனும் அம்மாவும் அங்கே விமானம் ஏறிவிட்டிருந்தனர். அதற்கு பதில்செய்தி அனுப்பியபடியே மாடியேறித் தன்னறைக்குச் சென்றான் அவன். மெல்லிய ஜாஸ் இசையை ஒலிப்பெருக்கியில் ஓடவிட்டவன், அதனோடு பாடியவாறே குளித்து உடைமாற்றித் தயாரானான்.
தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வினியோகம் செய்துவிட்டு, மேனேஜர்களுக்கு வாழ்த்துக்களும் கூறிவிட்டு, ராஜீவை அழைத்துக்கொண்டு கடைகளுக்குச் சென்று குடும்பத்தினருக்குப் பரிசுப்பொருட்களும் வாங்கிக்கொண்டு விமான நிலையத்தை அடைந்தபோது நேரம் சரியாக மதியம் இரண்டரை. மூன்று மணிக்கு அவனது விமானம்.
"ராஜீவ், தினமும் காலைல எனக்கு மெயில் மூலமா கம்பெனி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணு. எதாவது அவசரம்னா உடனே ஃபோன் பண்ணு. நான் வரேன்."அறிவரை தந்தவாறே காரிலிருந்து இறங்கினான் ஆதித். ராஜீவ் கதவைத் திறந்துவிட்டான் அவனுக்காக.
"ஓகே பாஸ்" என்றவன் சிலநொடி தயக்கத்திற்குப் பிறகு, "ஹேப்பி தீபாவளி" என்றான். ஆதித் புன்னகைத்து, "உனக்கும் ஹேப்பி ஹாலிடேஸ் ராஜீவ். டேக் கேர்" என்றுவிட்டு உள்ளே விரைந்தான் பைகளுடன்.
அவசரமாகச் சென்று வரிசையில் காத்திருந்து பாதுகாப்பு சோதனைகளை எல்லாம் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தபோது, சாப்பிட மட்டும் மறந்திருந்தான் அவன். கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது, மணி எட்டு. விமானத்தில் தந்த எந்த சிற்றுண்டியையும் தொடாததால் இப்போது பசித்தது. வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுக் கொள்ளலாமெனப் பொறுத்துக்கொண்டான் அவன். ஆனால் நெடுஞ்சாலையில் சாரிசாரியாக ஊர்ந்த கார்களும் பேருந்துகளும் ஊருக்குள் செல்லுமுன் முப்பது சிக்னல்களைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கும் என்பதை அப்போது அவன் நினைக்கவில்லை. அதிலும் இது தீபாவளி நேரம் என்பதும் நினைவில் வரவில்லை. பாட்டி அனுப்பிய காரில் அமர்ந்தவன், அது நெடுநேரமாகியும் வீடுசெல்லாததை உணர்ந்து நிமிர்ந்தபோது தான், கோவை நூறடி வீதியின் மிகப் பிரபலமான போக்குவரத்து நெரிசலில் தங்கள் வண்டியும் சிக்கியிருந்ததைக் கண்டான்.
"என்ன நடக்குது?"
ஓட்டுநரான நடுத்தர வயது மனிதரிடம் முடிந்தவரை கோபம்காட்டாமல் வினவ முயன்றான் அவன்.
"டிராஃபிக் ஜாமுங்க சார். பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் நடக்கும் இது! இவிங்க சிக்னலையும் ஒழுங்கா மதிக்கறதில்ல, வண்டிய ஓர்சலாவும் ஓட்டுறதில்ல.. இப்ப தீவாளி கூட்டம் வேற! எப்படியும் அரைமணி நேரமாச்சும் ஆகுமுங்க சார்.."
"வீட்டுக்குப் போகவா?"
"இல்ல இங்கிருந்து கிளம்பறதுக்கு சார்.."
சோர்வாக சீட்டில் சாய்ந்தான் அவன். கைபேசிக் கடிகாரம் நேரம் எட்டரை என்றது. எத்தனை நேரம்தான் தண்ணீர் மட்டுமே அருந்திக்கொண்டிருப்பதென வயிறும் சண்டையிட்டது பலமாக. அதற்குமேல் பொறுக்காமல், "காரை இங்கயே எங்கயாச்சும் ஓரமா நிறுத்திடுங்க, நான் சாப்ட்டு வரேன்" என வேகமாகக் கதவைத் திறந்துகொண்டு சாலையில் இறங்கினான் அவன். எதிர்ப்புறம் வாகனங்கள் தங்கள்பாட்டில் இரைச்சலோடு முன்னும் பின்னும் வழியின்றி ஊர்ந்துகொண்டிருக்க, அவற்றை நேக்காகத் தாண்டிகொண்டு வளைந்து வளைந்து வேகமாக வந்த பைக் ஒன்று அவனை உரசுமளவு நெருங்கி வர, திகைப்பில் உறைந்தவனது கரத்தை யாரோ பிடித்துப் பின்னால் இழுத்தனர்.
"க்ராஸ் பண்ணறதுக்கு என்னங்க சார் அவசரம்?? ரெண்டு பக்கமும் பார்த்து நடங்க!!"
தன்னைப் பிடித்திருந்த கைக்கு சொந்தமான அப்பெண்ணின் நெற்றியில் கோபக்கோடுகள் படர்ந்திருந்ததைக் கண்டான் ஆதித். தன் தோளுயரம் தான் மொத்தமாகவே இருந்தாள் அவள். சின்ன முகம், அகன்ற கண்கள், அதில் இரண்டடுக்கில் மையிட்டிருந்தாள். கூந்தல் அடர்த்தியாகத் தோளில் புரண்டது. அதில் செருகியிருந்த ஒற்றை க்ளிப்பால் அடக்க முடியாத சில கற்றைகள் காதோரம் தனியாக விழுந்தன. அவனைப் பிடித்திருந்த கையை அவள் இன்னும் விலக்கவில்லை. மற்றொரு கையில் துணிக்கடைப் பைகள், பழங்கள், பட்சணங்கள் யாவும் இருந்தன.
திகைப்பிலிருந்து வெளிவந்து, அவளுக்கு நன்றிசொல்ல வாயெடுக்கும் முன்னர், வலதுபுற நடைபாதையிலிருந்து யாரோ, "தாரா!! பஸ் போயிடும்டி, ஓடி வா!!" எனக் கத்த, கையை விட்டவள் அந்தக் குரலைநோக்கி நகர்ந்தாள் வேகமாக. ஆனால் போகுமுன் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்த்து, "கவனமா இருங்க. ஹேப்பி அண்ட் சேஃப் தீபாவளி!!" எனக் கையசைத்துப் புன்னகைக்க, ஆதித் வியப்பாகப் புருவம் தூக்கினான். அதற்குள் அவள் பேருந்தின்புறம் சென்று மறைந்துவிட, அவன் தோளைக் குலுக்கிவிட்டு அன்னபூர்ணா உணவகத்திற்குள் நுழைந்தான் அவசரமாக.
இரண்டு மசால் தோசைகளும், நான்கு கிண்ணங்களில் சின்னவெங்காய சாம்பாரும் உள்ளே போனபின்னர்தான் பசி அடங்கியது. வயிறோடு மனதும் குளிர்ந்தது. என்னதான் பெங்காலில் ரொட்டியும் கிச்சடியும் உண்டாலும், நம்மூர் அன்னபூர்ணாவின் மொறுமொறு தோசைக்கும் ஓரத்தில் துளி இனிப்போடு மணமணக்கும் வெங்காய சாம்பாருக்கும் நிகராகுமா அது!
திருப்தியான உணர்வோடு பில்லைக் கட்டிவிட்டு எழுந்து வெளியே வந்தவன், சாலையோரம் தங்கள் வண்டி நிற்பதைக் கண்டுகொண்டு அதைநோக்கி நடந்தான். ஓட்டுநர் அவனுக்காகக் கதவைத் திறந்துவிட்டார்.
முக்கால் மணிநேரம் கழித்து, ரெட் ஃபீல்ட்ஸ் என்ற புனைப்பெயரால் வழங்கப்படும் வடக்குக் கோவையில் மேல்தட்டு மக்களின் வாசஸ்தலமாக விளங்கும் ஆர்.எஸ்.புரத்தை வந்தடைந்தனர். நகரின் நடுவில் பத்தரை அடி உயர சுற்றுச்சுவர்களும், பலதரப்பட்ட வெளிநாட்டு மரங்களும் அரணாக இருந்த பெரிய பங்களாவிற்குள் நுழைந்தது கார்.
வாசலிலேயே வந்து அவனை ஆர்ப்பரித்து வரவேற்றார் பர்வதம். பின்னால் அன்னையும் தந்தையும் நின்றனர். பயணக் களைப்பு முகத்திலிருந்த ஒவ்வொரு சுருக்கத்திலும் தெரிந்தது அவர்களிடம். இருப்பினும் மகனைக் கண்டதுமே மலர்ந்து புன்னகைத்து அவனை அணைத்துக்கொண்டனர்.
"ஆதித்!!"
"டாட்! மாம்!!"
வழக்கமான பாசப்பரிமாற்றங்கள் முடிந்து, வீட்டின் கடல்போன்ற வரவேற்பறையில் நின்றனர் நால்வரும். வாங்கிவந்த பொருட்களை அவர்களிடம் எடுத்துத்தர அவன் எத்தனிக்க, பாட்டி பர்வதமோ கறாராக, "மொதல்ல குளிச்சிட்டு வா, அதுக்கபறம் சாப்பாடு, அப்பறம்தான் மத்ததெல்லாம்!" என்றுவிட்டார்.
அவரது ஆணைக்கிணங்க அரைமணியில் உணவுக்கூடத்தில் வந்தமர்ந்தான் ஆதித். தட்டில் வைத்த பட்சணங்கள் எதையும் தொடாமல் வெறுமே அவன் பேசிக்கொண்டு மட்டும் இருப்பதைக் கவனித்தார் பாட்டி.
"என்னடா கண்ணா..? சரியாவே சாப்பிட மாட்டேங்கற? எதுவும் பிடிக்கலையா..?"
"இ..இல்ல பாட்டி.. வழியில அன்னபூர்ணால சாப்ட்டேன். அதான் பசிக்கல.. வேற எதுவுமில்ல"
"ஓஹோ..."
அவர் முகம் சுணங்க, சட்டெனப் பேச்சை திசைதிருப்ப முயன்றான் அவன்.
"என்கிட்ட ஏதோ முக்கியமான விஷயமா பேசணும்னு சொன்னீங்களே.. என்னது பாட்டி?"
பாட்டியின் முகம் பிரகாசிக்கத் தொடங்கியது. இதழ்கள் புன்னகையில் மட்டற்று விரிந்தன.
"ஞாபகம் இருக்கா உனக்கு?! சந்தோஷம்!! உஷா, மாதவா.. நீங்களும் வாங்க. சேர்ந்தே பேசுவோம்.."
ஆதித் பெற்றோரையும் பாட்டியையும் மாறிமாறிப் பார்த்தான்.
"டாட்.. உங்களுக்குத் தெரியுமா என்னதுன்னு?"
அவர் தலையாட்டினார்.
"ம்ம், எல்லாம் உன் கல்யாண விஷயம்தான்!"
பூரிப்பாக அவர் சொல்ல, ஆதித்தின் முகம் புன்னகையை இழந்தது.
**************************************
ஆதியும் தாராவும் சந்திச்சாச்சு!! முதல் சந்திப்பு எப்படி இருந்தது?? ஓகேவா, சுமாரா, சூப்பரா?😁
பாட்டி கல்யாணப் பேச்சை எடுத்துட்டாங்க! ஆதித் ஏன் டென்ஷனான்? என்ன சொல்லப் போறான் அவங்ககிட்ட?
பிடிச்சிருந்தால் வாக்களிக்கவும்; நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளவும்; ஆதரவை நல்கவும்!! நன்றி!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro