Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

2

"அடுத்தபடியாக, கொல்கத்தா தொழிற்சங்கம் சார்பில், இவ்வாண்டின் சிறந்த தொழிலதிபருக்கான விருதினை வழங்க, மாண்புமிகு மத்திய அமைச்சர் ககன்சிங் ரானே அவர்களை அழைக்கிறோம்."

தெளிவான இந்தியிலும் பெங்காலியிலும் அறிவிக்கப்பட்ட செய்தி செவியை எட்டியதும் இதயம் இருமடங்கு வேகத்தில் துடிக்கத் தொடங்கியது அவனுக்கு. அமைச்சர் மேடையேறியதும், அவரிடத்தில் விருதும் சான்றிதழும் கொண்டுசென்றாள் பச்சைநிற லெஹங்கா அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி. அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, மேடைக்குப் பின்னால் ஒளிர்ந்த திரையில் பொன்னிற எழுத்துக்களில் ஆங்கிலத்தில் பெயரொன்று தோன்றியது.

"இவ்வாண்டின் சிறந்த தொழிலதிபர்.. வெங்கட் ஷர்மா!"

தொகுப்பாளர் உற்சாகத்துடன் அறிவிக்க, அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது. ஆயினும் வலது மூலையில் ஒரேயொரு முகத்தில் மட்டும் சோக சாயல்.

முகம் ஏமாற்றத்தில் களையிழக்க, அதை மறைக்க முயலாமல் உதட்டை சுழித்துத் தலை கவிழ்ந்தான் ஆதித் நிவேதன். முப்பதை எட்ட எத்தனிக்கும் அந்த வாலிபன் தான் அந்த அரங்கிலேயே இளையவனாக இருந்தான். மற்றவரெல்லாம் நாற்பதிலும் ஐம்பதிலும் நடமாடிக்கொண்டிருக்க, தன் இருபதுகளில் இந்த அரங்கிற்குள் நுழைந்ததே பெரிய சாதனைதான் என்றாலும், அறிவிப்பில் தன் பெயர் கேளாத ஏமாற்றமே இப்போது பெரிதாகத் தெரிந்தது அவனுக்கு. இருப்பினும் அதிலிருந்து உடனே வெளிவந்து, அமைச்சரின் கையால் விருது பெறும் வெங்கட் ஷர்மாவுக்காகக் கைதட்டினான் அவன். ஐம்பது வயது மனிதரான அவர் புன்னகையுடன் விருதைப் பெற்றுக்கொண்டு கையசைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திட, அதைப் படமெடுத்தபடி மின்னின பத்திரிக்கைகளின் கேமராக்கள்.

மேடையிலிருந்து அவர் இறங்கியதும் சென்று கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, அரங்கத்திலிருந்து வெளியே வந்தான் ஆதித். அவனுக்காகவே காத்திருந்த அவனது உதவியாளர் ராஜீவ் வேகமாக அவனிடம் ஓடிவந்தா ன்.

"என்ன பாஸ்.. இப்படி நடுவுலயே எந்திரிச்சு வந்துட்டீங்க? நெக்ஸ்ட் வேற கேட்டகரி எல்லாம் நெறய இருக்கே.. அதையும் கேட்டுட்டு அப்பறமா கிளம்பலாமே..?"

"ஆயிரம் கேட்டகரி இருந்தாலும், நம்ம எதிர்பார்த்தது கிடைக்காதபோது வேறெதுவும் பிடிக்காது ராஜீவ். டிரைவரை கூப்பிடு, கிளம்பலாம்."

"சார் ... பங்ஷன் நடந்துட்டு இருந்தப்போ மூணு கால் வந்தது. ஒண்ணு அமெரிக்காவுல இருந்து உங்க அப்பா, மீதி ரெண்டும் உங்க பாட்டி, கோயம்புத்தூர்ல இருந்து. உங்களை எப்போ ஊருக்கு வருவீங்கனு கேட்டு சொல்லச் சொன்னாங்க."

பாட்டியை நினைத்ததும் இதழோரம் சிறு புன்னகை அரும்பியது ஆதித்தின் முகத்தில்.

"நான் நைட் அவங்ககிட்ட பேசிக்கறேன். டாடி என்ன சொன்னாரு?"

"அவரும் அம்மாவும் காலைல ஏர்லி மார்னிங் ஃப்ளைட்ல கிளம்பறாங்களாம் சார். நேரா சென்னைக்கே போயி இறங்கிட்டு, அங்கிருந்து கோயம்புத்தூர் போயிடறாங்களாம். பாட்டிகிட்ட இன்னும் சொல்லலியாம்.. They're planning it as a surprise."

"Great. அப்போ நானும் நாளைக்கு சாயங்காலமா ஃப்ளைட் ஏறினா, நைட் வீட்டுக்குப் போயிடலாம்ல?"

"எஸ் சார். ஏற்கனவே நான் ஃப்ளைட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டேன் சார். கல்கத்தா டூ சென்னை, நாலு ஃப்ளைட்ஸ் இருக்கு சார். அப்பறம் சென்னை டூ கோயம்புத்தூர்: ஏழு ஃப்ளைட்ஸ் இருக்கு. ஈவ்னிங் போறதா இருந்தா, ஜெட் ஏர்வேஸ்ல புக் பண்ணிடலாமா சார்?"

"தேங்க்ஸ் ராஜீவ். அதையே புக் பண்ணிடு. இப்ப ட்ரைவரை வரச் சொல்லு."

ராஜீவ் மறுப்பேதும் சொல்லாமல் ஓட்டுநரை அழைத்தான் கைபேசியில். வெள்ளி நிற பென்ஸ் கார் தங்கள் முன்னால் வந்து நின்றதும், ஆதித்துக்கு பின்கதவைத் திறந்துவிட்டுவிட்டு, அவன் ஏறியதும் கதவை மென்மையாகத் தள்ளி சாத்திவிட்டு, ஒட்டுநரின் அருகிலுள்ள இருக்கையில் ஏறியமர்ந்துகொண்டான் ராஜீவ்.

கல்கத்தாவின் சாலைகளில் கார் வழுக்கிக்கொண்டு செல்ல, குளிர்சாதன வசதி செய்திருந்ததால் நகரின் இரைச்சல் எதுவும் அதனுள் விழாமல் நிசப்தமாகவே தொடர்ந்தது பயணம். தனது மடிக்கணினியில் கம்பெனியின் சில விபரங்களைப் பார்த்தவண்ணம் வந்த ஆதித்தின் முகத்தில், இன்னும் அந்த ஏமாற்றத்தின் சோகம் சிறிதளவு தெரிந்தது. ராஜீவ் மெல்லமாகப் பெருமூச்சு விட்டான் அவனைக் கவனித்து.

அவனுக்குத் தெரியும், ஆதித் இவ்விருதிற்காக எப்படியெல்லாம் உழைத்தானென.

எத்தனை பயணங்கள், எத்தனை ஆலோசனைக் கூட்டங்கள், எத்தனை தொழிலாளர் சங்கப் பேச்சுவார்த்தைகள், எத்தனை பங்குதாரர் பாகுபாடுகள், எத்தனை உறங்கா இரவுகள், எத்தனை சோகங்கள், எத்தனை எத்தனையோ சவால்கள்...

சினிமாக்களில் வருவதுபோல் ஓரிரவில் சாதனையாளராக ஆவதில்லை யாருமே. ஆதித் நிவேதன் நான்கு வருடங்களாக இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து எழுப்பியதுதான் இன்றிருக்கும் AN Groups. குண்டூசி தொடங்கி, கப்பல்களின் மோட்டார் எஞ்சின் வரை, அவர்கள் ஆலையில் தயாரிக்காத பொருளே இல்லை என்கிற அளவு, கல்கத்தாவில் பெயர்போன நிறுவனம் அவர்களது. மக்களும் அவனை தமிழகத்திலிருந்து வந்தானென வேற்று மனிதனாகப் பாராமல், தங்களில் ஒருவனாகப் பார்க்குமளவு அனைவரிடமும் இன்முகம் காட்டிப் பழகுவான். அவனது சிரிப்பிற்கே தனியாக ரசிகர் கூட்டமுண்டு அலுவலகத்தில்.

ஆறடி உயரமும், அகன்ற தோள்களும், அளவான தேகமும், எப்போதுமே நேர்த்தியாக வாரப்பட்ட கேசமும், மீசை தாடி எதுவும் தென்படாத வழவழப்பான தாடையும், சிவந்த உதடுகளும் அதில் என்றுமே தங்கியிருக்கும் சிரிப்பும் -இவை ஆதித்தின் அடையாளங்கள். கொல்கத்தாவின் தொழிற்தளங்களில் முக்கிய இடமான ஹால்தியா தொழில்நகரில் பெரும்பான்மையான ஆலைகளும், மில்களும் AN Enterprises என்ற பெயர்தாங்கி இருப்பதும் அவனது இன்னொரு அடையாளமே. சுமார் ஐம்பது கோடிகள் வருட வருமானமாகப் பார்க்கும் வெற்றிகரமான குழுமம் அவனது. ஆயினும் அவனது ஆசைகளும் கனவுகளும் அதனினும் உயர்ந்து, தற்போது ஒரு அங்கீகாரத்தின் மீது மையலாக...

தற்போது இரண்டு வருடங்களாக அவனது உழைப்பின் முனைப்பாக, உந்துதலாக இருப்பது, சிறந்த தொழிலதிபருக்கான மாநில விருது ஒன்று மட்டும்தான்.

"இம்முறை இல்லையெனில் மறுமுறை! முயல்பவன் அழியலாம், முயற்சிகள் அழிவதில்லை."

ஆதித்தின் வார்த்தைகளே மீண்டும் காதில் ஒலித்தன ராஜீவுக்கு. மென்முறுவலுடன், தங்கள் நிறுவனத்தின் ஆதர்சத் தலைவனை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தான் அவன்.

"பாஸ்... கண்டிப்பா உங்களுக்கு ஒருநாள் அந்த அவார்ட் கிடைக்கும்."

"ம்ம், நிச்சயமா கிடைக்கும். அந்த நாள் சீக்கரமே வரணும்னு தான் முயற்சி பண்றேன். அடுத்த வருஷம் பார்க்கலாம்."

பேசிக்கொண்டிருந்த போதே இடம் வந்துவிட, ராஜீவ் வேகமாக இறங்கி, ஆதித்திற்கு கதவு திறந்து விட்டு, "லஞ்ச் உங்க கேபினுக்கு கொண்டுவர சொல்லட்டுமா பாஸ்?" என வினவ, அவனோ மறுப்பாகக் கையசைத்துவிட்டு, "இப்பப் பசிக்கலை, அப்பறம் பாக்கலாம்." என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்தான். ராஜீவ் எதுவும் பேச இயலாமல் பின்தொடர்ந்தான்.

ஆர்வமாக நின்ற மேலாளர்கள் அவர்கள் இருவரின் உணர்வற்ற முகங்களைக் கண்டதும் சோர்ந்தனர். இருப்பினும், "நெக்ஸ்ட் டைம், சார்" என ஆறுதல் வார்த்தைகளை மரியாதைக்காகக் கூறிவிட்டுக் கலைந்தனர்.

"பாஸ்... சாப்பாட்டு மேல ஏமாற்றத்தைக் காட்டறது அவ்வளவு உகந்ததாக தோணல..."

தனது கேபினுக்குள் நுழைந்து ஆதித் அமர, அவனெதிரில் நின்று தயக்கமாக இழுத்தான் ராஜீவ்.

"அதெல்லாம் இல்ல ராஜீவ், பங்ஷன்ல நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிட்டேன். அதான். உன்னோட லஞ்ச் டைம் வீணாகுது பார், யூ கோ."

"ப்ளீஸ் பாஸ், கொஞ்சமா சாப்பிடுங்க. கேண்டீன் இருந்து வேணாம்னா, நான் வெளியே கூடப் போயி வாங்கிட்டு வர்றேன்"

"நோ ப்ராப்ளம் ராஜீவ். வா கேண்டீனுக்கே போலாம்."

ஆதித்தின் நிறுவனத்திலிருந்த மற்றொரு சிறப்பு அது. முதலாளி முதல் கடைநிலைத் தொழிலாளி வரை, அனைவருக்கும் சமமான முறையில் உணவளிக்கும் உயர்தர கேண்டீன். இரண்டு தட்டில் உணவு வாங்கிவந்து, ஒன்றை ஆதித்துக்கு நீட்டினான் ராஜீவ். அதை வாங்கிக்கொண்டு அவன் முதல் விள்ளலை உண்டதும்தான் ராஜீவ் உண்ணத்தொடங்கினான். அதை ஆதித்தும் கவனித்துப் புன்னகைத்தான்.

சாப்பிட்டு வந்துவிட்டு நேரம் போவது தெரியாமல் ஆடிட்டிங் தரவுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தவன், ஒருகட்டத்தில் அசதியாக நிமிர, இரவு எட்டு மணியெனக் காட்டியது சுவற்றில் மாட்டியிருந்த அழகிய டிசைனர் கடிகாரம்.

ஆறு மணிநேரமாகவா காகிதக் கோப்புகளுக்குள் மூழ்கியிருந்தோம் என அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இரண்டாம் ஷிஃப்ட் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்க, அவன் தன் அலுவலக அறையைப் பூட்டிவிட்டு எழுந்து முன் வராண்டாவிற்கு வந்தான். அவனது காரியதரிசி ராஜீவ் அவனைக் கண்டதும் தனது நாற்காலியிலிருந்து எழுந்து நின்றான்.

"நீ கிளம்பலையா ராஜீவ்??"

"இல்ல பாஸ், உங்களுக்கு எதாச்சும் ஹெல்ப் தேவைப்படுமோன்னு..."

"வீட்டுக்குப் போ மேன்! நாளைக்கு காலைல பத்து மணிக்கு வந்தாப் போதும். தீபாவளி போனஸ் நாளைக்கு குடுத்துடுலாம். அப்பறம் பாட்டிக்கு, மம்மிக்கு எல்லாருக்கும் கிப்ட்ஸ் வாங்கணும் நாளைக்கு. அஸோசியேட்ஸ் யாரும் நாளைக்கு வரவேணாம்னு சொல்லிடு."

"எஸ் பாஸ். பைய், குட் நைட்"

"குட் நைட் ராஜீவ்"

கார் இரவுப் போக்குவரத்தை வெண்ணையைக் கீறும் கத்திபோலக் கடந்துசென்றது. வீட்டு வாசலில் கார் நிற்கவும் இறங்கியவன், ட்ரைவரிடம், "நாளைக்கு என்னை ஏர்ப்போர்ட்ல விட்டுட்டு, நீங்களும் ஊருக்குக் கிளம்பிடலாம் தாஸ். உங்களுக்கு ட்ராவல் அலவண்ஸ் போடச் சொல்லியிருக்கேன்" என்றுவிட்டு நகர, அவர் பூரிப்போடு, "தேங்க்ஸ் சார்" என்றார்.

பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு, முன்வாசல் படிக்கட்டுகளில் நளினமாக ஏறிச்சென்றான் ஆதித். கதவைத் திறந்து உள்ளே நுழைகையில் அவன் வரவையறிந்து பணியாட்கள் வணக்கத்தோடு எதிரில் வர, "நாளைக்கு காலைல நான் கிளம்பிடுவேன். நீங்களும் லீவு எடுத்துக்கலாம்" என பெங்காலியில் அறிவித்தான் அவன். வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு அவர்கள் வெளியேற, ஆதித் தன்னறைக்குச் சென்று ஃபார்மல் உடைகளைக் களைந்து தளர்வான டீஷர்ட்டும் அரைக்கால்சட்டையும் எடுத்துக்கொண்டு, குளியலறைக்குள் சென்றான்.

ஆவி பறக்கும் வெந்நீர் ஷவரிலிருந்து சுடுமழையாய்ப் பெய்ய, அலுப்புத் தீரக் குளித்து முடித்தவன், தனது ஈரமான கேசத்தைக் கோதிக்கொண்டே வெளியே வந்தான். ஆளுயர மர அலமாரியில் அவனது துணிகளனைத்தும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, அதிலிருந்து ஒரு பூந்துவாலையை எடுத்து, தலையை மீண்டும் துவட்டத் தொடங்கினான். சரியாக அக்கணத்தில் மேசையில் வைத்திருந்த கைபேசி அடிக்கத் தொடங்க, கைபேசியின் மின்னணுக் குரல் அதை ஆங்கிலத்தில் அறிவித்தது. பாட்டிதான் அழைத்திருந்தார்.

தென்னகத்தில் அவனுக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாதவன் இனிமையாகப் புன்னகைத்தவாறு சென்று அதை எடுத்தான்.


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro